Sunday, March 7, 2010

சேலம்

* 1.பெண்களை இழிவாக சித்தரிக்கும் அத்துமீறலை தடுக்க வேண்டும்: மகளிர் மாநாட்டில் வலியுறுத்தல்

சேலம்: "தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரங்களிலும் பெண்களை இழிவாகவும், மலிவாகவும் பிற்போக்காகவும் சித்தரிக்கும் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று எல்.ஐ.சி., உழைக்கும் மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலம் காந்திரோடு சுனில்மைத்ரா நினைவகத்தில் நேற்று சேலம் கோட்ட எல்.ஐ.சி., மகளிர் 12வது மாநாடு நடந்தது. மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர்கள் சீதாலட்சுமி, மீனா, மகளிர் துணை குழு அமைப்பாளர் கிருத்திகா பிரபா, தென் மண்டல இன்ஷூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இணை செயலாளர் கிரிஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானம் விபரம்: பெட்ரோல், டீஸல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அலுவலகத்திலும் குழந்தைகள் காப்பகத்தை எல்.ஐ.சி., நிர்வாகம் அமைத்து தர வேண்டும். தொலைக்காட்சி தொடர்களிலும், விளம்பரங்களிலும் பெண்களை இழிவாகவும், மலிவாகவும் பிற்போக்காகவும் சித்தரிக்கும் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும். எல்.ஐ.சி., ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை வழங்க மறுக்கும் நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி., ஊழியர்கள் மார்ச் 31ல் நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றியாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
Top
* 2.சுகவனேஸ்வரர் சொத்து மீட்க உத்தரவு ஆர்.டி.ஓ., விசாரணையில் முடிவு: மின் இணைப்பு துண்டிக்கவும் நடவடிக்கை

சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, ஆக்ரமிப்பில் இருந்து மீட்க, ஆர்.டி.ஓ., அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவில் நிலம் ஆக்ரமிப்பை முழுமையாக அகற்றவும், மின் இணைப்புகளை துண்டிக்கவும், கடை நடத்துவதற்காக வணிக வரித்துறை வழங்கிய உரிமங்களை ரத்து செய்யவும், ஆர்.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து சேலம் ஆர்.டி.ஓ., குழந்தைவேலு வெளியிட்ட அறிக்கை:சேலம் சுகவனேஸ்வரர் ஸ்வாமிக்கு தினமும் உச்சிகால பூஜை நடப்பதற்காக, மாநகரின் மையப்பகுதியில், 2,147 சதுர அடி நிலத்தை, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேணுகோபால் செட்டியார் மகன் சுப்ரமணிய செட்டியார் என்பவர், 1907ம் ஆண்டில் வழங்கினார். அதற்கான ஆவணங்கள் கோவில் அலுவலகத்தில் உள்ளன. குறிப்பிட்ட அந்த நிலத்தை, கோவில் நிர்வாகத்தின் நேரடி நிர்வாகத்தில் கொண்டு வர அறிவுறுத்தியும், கொண்டு வரவில்லை. அந்த நிலத்தை, தனி நபர்கள் ஆக்ரமித்து, மூன்று மாடியில் வணிக வளாகம் கட்டி, வாடகைக்கு விட்டுள்ளனர். சேலம் மாநகராட்சி, உள்ளூர் திட்டக்குழுமம், ஹிந்து சமய அறநிலையத்துறை என எந்த துறையிடமும் அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக இவ்வாறு செய்துள்ளனர்.


இது பற்றி சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவின்படி டிரஸ்டிகள், கோவில் உதவி ஆணையர்/ செயல் அலுவலர், கண்காணிப்பாளர், அர்ச்சகர்கள், பணியாளர்கள், அறநிலையத்துறை உதவி ஆணையர், உதவி தணிக்கை அலுவலர், தொடர்புடையதாக கூறப்படும் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.இந்த நிலத்துக்குரிய ஆவணங்கள், வாக்குமூலம் பரிசீலனை செய்ததில், "டிரஸ்டிகள்' என கூறிக்கொண்டு வாக்குமூலம் அளித்தவர்களில் எவரும், "தாங்கள் தான் டிரஸ்டி' என்பதற்கு எவ்விதமான ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை. இவர்களை, "கட்டளைதாரர்கள்' என அங்கீகரித்து அரசோ, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனரோ, சேலம் இணை கமிஷனரோ, உதவி கமிஷனரோ மற்றும் மேற்படி கோவிலின் உதவி கமிஷனர்/ செயல் அலுவலரோ எந்தவிதமான உத்தரவும் வழங்கவில்லை.


முன்னர் மேற்படி சொத்தின் ஆக்ரமிப்புதாரராக இருந்தவரும், பின்னிட்டு மேலும் ஒரு டிரஸ்டை போலியாக உருவாக்கியவருமான சவுந்தரராஜன் என்பவரின் கையெழுத்தின் பேரில் புதிய கட்டுமானங்களுக்கு மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. இதில் அவருக்கும், மற்ற ஒரு டிரஸ்டின் நிர்வாகிகளுக்கும் மறைமுக உடன்படிக்கை இருந்துள்ளது எனப் புலனாகிறது. இந்த சொத்தின் பட்டாவானது, சுகவேனஸ்வரர் கோவில் பெயரில் உள்ளது. இந்த சொத்து தொடர்பாக, ஆட்சேபம், கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டும், அத்தகைய கருத்து, ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


எனவே, சேலம் மாநகர், வார்டு எல், பிளாக் 9, நகர புல எண் 2ல் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2,147 சதுர அடி நிலத்தில், தற்போது கட்டப்பட்டுள்ள கடைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் முழுமையாக அகற்றி சுவாதீனம் எடுத்துக்கொள்ள சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமிஷனர்/ செயல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.இந்த கட்டத்திலுள்ள மின் இணைப்புகளை ஏழு நாட்களுக்குள் துண்டிக்க சேலம் டவுன் தமிழ்நாடு மின்சார வாரியம் இயக்கமும் பராமரிப்பும் (மையம்) உதவி செயற்பொறியாளருக்கு உத்தரவிடப்படுகிறது.


வணிக வரித்துறை மூலம் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் ரத்து செய்து அறிக்கை சமர்ப்பிக்க சேலம் வணிக வரித்துறை கடை வீதி சரக உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளார். தனியாரால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள, சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், சேலம் மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. அதன் மதிப்பு, பல கோடி ரூபாய் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
Top
* 3.வறட்சியால் வாரச்சந்தைகளில் ஆடு, மாடுகள் விலை மலிவு:கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் விரக்தி

மேட்டூர்: நடப்பாண்டில் ஃபிப்ரவரியிலேயே கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் ஆடு, மாடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்காத நிலையில், அவற்றை சந்தைக்கு விற்க கொண்டு சென்றாலும் மலிவு விலைக்கு வியாபாரிகள் வாங்குவதால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.ஐந்தாண்டுகளாக இல்லாத அளவிற்கு மழை அளவு குறைந்து விட்டதால், நடப்பாண்டில் ஃபிப்ரவரியில் வெயில் வாட்டி வதைக்கிறது. வறட்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் பசுமையான பகுதிகளாக இருந்த ஏற்காடு, பாலாறு வனப்பகுதிகள் கூட வறட்சிக்கு இலக்காகி மரங்கள் கருகி விட்டன.


சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் ஆடு, மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் கால்நடைகளை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். வனப்பகுதியிலேயே கடும் வறட்சி நீடிப்பதால், சேலம் மாவட்டத்தின் இதர பகுதிகளில் ஆடு, மாடுகளுக்கு கடும் தீவனபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பசுந்தீவனம் கிடைக்காததாலும், விலை அதிகமுள்ள தவிடு, புண்ணாக்கு போன்ற தீவனங்களை வழங்க முடியாததாலும், பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் தாங்கள் ஆடு, மாடுகளை வளர்க்க முடியாமல், சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆடுகள் மட்டும் சற்று விலை குறைவாக விற்பனையாகிறது. ஆனால், மாடுகளுக்கு தீவன செலவு அதிகமாக இருப்பதால், அதை விவசாயிகள் வாங்க மறுக்கின்றனர்.


இது குறித்து மேச்சேரி கால்நடை சந்தைக்கு வந்த விவசாயிகள் கூறியதாவது:சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் பலர் தங்கள் ஆடு, மாடுகளை வளர்க்க வழியின்றி விற்பனை செய்கின்றனர். இரு மாதத்திற்கு முன்பு 3,500 ரூபாய்க்கு விற்ற ஒரு ஆடு தற்போது 3,000 ரூபாய்க்கு மட்டுமே விற்கிறது. அதுபோல 40 முதல் 50 கிலோ எடை கொண்ட போயர் இன ஆடுகள் கூட தற்போது 1,000 ரூபாய் வரை விலை வீழ்ச்சியடைந்து விட்டது.


வறட்சி காரணமாக ஆடுகள் எடை குறைந்து விட்டதால், நஷ்டம் மேலும் அதிகமாகியுள்ளது. ஆடுகளை கூட வியாபாரிகள் இறைச்சிக்காக வாங்கி சென்று விடுகின்றனர். மாடுகள் விற்பனைதான் மிக மோசமாக உள்ளது. இரு மாதத்திற்கு முன் 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற ஒரு ஜோடி மாடுகள் தற்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறது. அந்த விலைக்கும் குறைந்த மாடுகளே விற்பனையாகின்றன. மேச்சேரி சந்தையில் நடப்பாண்டில் மூன்று நாள் தங்கியிருந்தும் மாடுகள் விற்பனையாகாததால், ஏராளமான விவசாயிகள் தங்கள் மாடுகளை ஏமாற்றத்துடன் திரும்ப ஓட்டி சென்று விட்டனர். கோடை மழை தாமதம் ஆனால், தீவன தட்டுப்பாடு காரணமாக கால்நடைகள் விலை மேலும் குறையும் அபாயம் உள்ளது.


தீவன உற்பத்தி பெருக்க தீவிரம்:பசுந்தீவனம் பற்றாக்குறை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தற்போது ஒரு ஒன்றியத்தில் சுய உதவிக்குழுவை சேர்ந்த ஐந்து பேருக்கு கால்நடை தீவனமான கோ3, கோ4 புல் வளர்க்க தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியுள்ளது. அவர்கள் தங்கள் நிலத்தில் தீவனம் வளர்த்து கால்நடை வளர்ப்போருக்கு விற்பனை செய்வதன் மூலம் பற்றாக்குறை ஓரளவு சமாளிக்க முடியும் என கால்நடை பராமரிப்புதுறை அலுவலர்கள் கூறுகின்றனர். மேலும், கால்நடை வளர்ப்போருக்கு வாதநாராயிணி, கிளாரி சிரியா, கல்யாண முருங்கை ஆகிய தீவன மரக்குச்சுகளையும், சைலோ, வேலிமசால், முயல் மசால் விதைகளையும் வழங்குகிறது. அதன் மூலம் கால்நடைகளுகளுக்கு தேவையான புரதச்சத்து, சமச்சீர் உணவு ஆகியவை கிடைக்கும். பால் உற்பத்தியும் அதிகரிக்கும் என அரசு எதிர்பார்க்கிறது. ஆனால், மழை பெய்தால் மட்டுமே தீவனப்பயிர்களை கூட வளர்க்க முடியும். இல்லையேல் அரசின் திட்டம் போதிய பலனை தராது என விவசாயிகள் கூறுகின்றனர்.
Top

பொது

* 1.கீரிப்பட்டியில் மயான கொள்ளை

ஆத்தூர்: ஆத்தூர் அருகே கீரிப்பட்டியில் பிரசித்தி பெற்ற பெரியாயி கோவில் உள்ளது. அங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயான கொள்ளை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.நேற்று மாலை கோவில் வளாகத்தில் இருந்து பாவாடைராமன், இருளப்பன் ஸ்வாமிகளை பூசாரிகள் மயானத்துக்கு சுமந்து வந்தனர். அப்போது அலங்கரித்து ஆதிவாசிகள் உடையை அணிந்து, காட்டேரி வேடமிட்ட பூசாரிகள் கையில் புதிய முறத்தால் பெண்கள் தலையில் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்ச்சி நடந்தது.பின், பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள மயானத்தில் ஸ்வாமிக்கு பொங்கல் படையல் செய்து, கொட்டி வைத்து, நேர்த்தி கடனாக நேர்ந்து விட்ட ஆட்டுக்குட்டியின் குரல் வளையத்தை கடித்து ரத்தத்தை படையல் செய்த சோற்றில் பிணைந்து ஒன்றாக சேர்த்தனர்.


ஸ்வாமிக்கு சிறப்பு வழிபாடு செய்து, பக்தர்கள் மயானத்தில் குவித்து வைத்திருந்த ரத்தை சோற்றை முண்டியடித்து ரத்த சோறு எடுக்கும் விழா நடந்தது. ரத்த சோற்றை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என குழந்தை இல்லாத பெண்கள் ஏராளமானோர் மடியேந்தி ரத்தசோறு எடுத்தனர்.ஸ்வாமிக்கு பக்தர்கள் நேர்ந்து விட்டு தூக்கியெறியும் ஆட்டுகுட்டிகள் மற்றும் கோழிகளின் குரல் வளையத்தை கடித்து ரத்தத்தை ருசித்து குடித்தபடி திருவீதி உலா வந்தனர். அதில் 90க்கும் மேற்பட்ட ஆட்டு குட்டிகள், 150 கோழிகள் பலியிடப்பட்டன. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Top
* 2.அரிசி எடை குறைவு நிவர்த்தி செய்ய சிவில் சப்ளைஸ் ஊழியர்கள் கோரிக்கை

சேலம்: "அரியாகவுண்டம்பட்டி தமிழ்நாடு வேர் ஹவுசிங் கிடங்கிலிருந்து சேலம் கிடங்குகளுக்கு அரிசியை கொண்டு வரும் போது ஏற்படும் விரயத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சேலம் மண்டல தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


சேலம் முதல் அக்ரகாரம் வாசவி மகாலில் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்க சேலம் மண்டல கூட்டம் நடந்தது. சேலம் மண்டல தலைவர் ஏகாம்பரம், மாவட்ட கவுன்சில் செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும். சேலம் மண்டலத்தில் சொந்த கிடங்கு இல்லாத தாலுகாக்களில் சொந்த கிடங்கு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியாக்கவுண்டம்பட்டி தமிழ்நாடு வேர்ஹவுசிங் கிடங்கில் இருந்து சேலம் கிடங்குகளுக்கு அரிசி எடுத்து செல்லும்போது ஒவ்வொரு லாரி லோடுக்கும் 120 கிலோ வரை அரிசி எடை குறைகிறது. இதை நிவர்த்தி செய்ய மண்டல நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சேலம் மண்டலத்தில் உள்ள கிடங்குளில் கழிப்பிட மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். சுமை துக்கும் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி பிடித்தம் செய்யவும், வாராந்திர தொகுப்பூதிய கூலி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடங்குகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மாற்று மண்டலத்தில் இருந்து வந்தவர்களுக்கு சொந்த மண்டலத்துக்கு மாறுதல் செய்ய வேண்டும். தலைமை அலுவலக உத்தரவின்படி சேமிப்பு இழப்பு அனுமதிக்கப்பட்ட அளவை அனுமதித்து வரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Top
* 3.பகுஜன் சமாஜ் கட்சி இன்று மகளிர் தின விழா

சேலம்: பகுஜன் சமாஜ் கட்சி சேலம் கிளை சார்பில் விஜயராகவாச்சாரியார் அரங்கத்தில் இன்று மகளிர் தின விழா நடக்கிறது. மகளிர் பிரிவு மாநிலச் செயலாளர் சாந்தஸ்ரீனி வரவேற்று பேசுகிறார்.மகளிர் பிரிவின் மேற்கு மண்டல பொதுச்செயலாளர் சிவக்குமாரி தலைமை வகிக்கிறார். மாநில மகளிர் அணி தலைவி உமாசாசவி, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மதி, பிரேமலதா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை கலந்து கொள்கிறார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங், மாநில பொதுச் செயலாளர்கள் கல்யாணசுந்தரம், தளபதி, விஜயன், ஜீவன்குமார், பொருளாளர் கிருபாகரன், மாநில செயலாளர்கள் கோவிந்தசாமி, மெய்ஞான மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை சேலம் மாவட்ட பகுஜன் கட்சி மாவட்ட மகளிர் அணித் தலைவி ஆயிஷா, செயலாளர் பரீதா, மாவட்ட தலைவர் செல்வகுமார், செயலாளர் தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
Top
* 4.மஞ்சள் ஏலம் துவக்கம்

ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் துவங்கிய முதல் நாளில் 65 குவிண்டால் மஞ்சள், 6 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கெங்கவல்லி, தம்மம்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பகுதியில் 10 ஆயிரம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை சுத்தம் செய்து ஈரோடு, நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை, ஆத்தூர் பகுதியில் உள்ள தனியார் மஞ்சள் மண்டிக்கும், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடக்கும் ஏலத்துக்கும் விவசாயிகள் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர்.


இந்தாண்டுக்கான மஞ்சள் ஏலம் நேற்று முன்தினம் ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் துவக்கப்பட்டது. உருண்டை, விரலி மற்றும் பனங்காலி என 100 மூட்டை மஞ்சளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.உருண்டை மஞ்சள் ஒரு குவிண்டால் 10 ஆயிரத்து 199 ரூபாய், விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 10 ஆயிரத்து 789 ரூபாய், பனங்காலி மஞ்சள் ஒரு குவிண்டால் 8,989 ரூபாய் என 65 குவிண்டால் மஞ்சள் 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
Top
* 5.இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல்

சேலம்: சேலத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. சேலம் தொகுதி பொறுப்பாளராக எம்.பி., ரவிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இளைஞர் காங்., உறுப்பினர்கள் சேர்க்கை முடிந்து, உறுப்பினர் பட்டியல் பரிசீலனை செய்யப்பட்டது. சேலம் தொகுதியில் இளைஞர் காங்., உறுப்பினர்கள் 45 ஆயிரம் பேர் உள்ளனர். இளைஞர் காங்., தலைவர், துணை தலைவர், துணை செயலாளர் உள்பட பத்து பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. சேலம் வடக்கு, கன்னங்குறிச்சி பகுதிகளில் நேற்று நடந்த இளைஞர் காங்., தேர்தலில், உறுப்பினர்கள் ஆர்வமுடன் பங்கேற்று ஓட்டளித்தனர். வரும் 8ம் தேதி சேலம் தெற்கு, 13ம் தேதி ஓமலூர், 14ம் தேதி இடைப்பாடி, 18ம் தேதி வீரபாண்டி ஆகிய இடங்களில் இளைஞர் காங்., தேர்தல் நடக்கவுள்ளது.
Top
* 6.17,583 பருத்தி மூட்டை ரூ.2.22 கோடிக்கு ஆத்தூரில் ஏலம்

ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 17 ஆயிரத்து 583 பருத்தி மூட்டைகள் 2 கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஞாயிற்று கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது.நேற்று நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி 15 ஆயிரத்து 544 மூட்டை, டி.சி.ஹெச்., 1,667 மூட்டை, கொட்டு பருத்தி 372 மூட்டை என 17 ஆயிரத்து 583 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். டி.சி.ஹெச்., ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிக பட்சமாக 5,136 ரூபாயும், குறைந்த பட்சமாக 4,599 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக 3,606 ரூபாய், குறைந்த பட்சமாக 3,286 ரூபாய்க்கு ஏலம் போனது. கொட்டு பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 2,540 ரூபாயும், குறைந்த பட்சமாக 1,899 ரூபாய்க்கு ஏலம் போனது.


நேற்று ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்தாண்டு நவம்பரில் துவங்கி தொடர்ந்து நடந்து வரும் பருத்தி ஏலத்துக்கு ஒரே நாளில் 17 ஆயிரத்து 583 பருத்தி மூட்டைகள் கொண்ட 6,154 குவிண்டால் பருத்தி இரண்டு கோடிய 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது சாதனையாக உள்ளது. கடந்த வாரம் நடந்த பருத்தி ஏலத்தை காட்டிலும் 6,083 பருத்தி மூட்டைகள் கூடுதலாக வந்த போதிலும் அதிக விலை கிடைத்ததால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Top

பிரச்னைகள்

* 1.உடலை புதைக்க நில உரிமையாளர் எதிர்ப்பு: சங்ககிரி ஆர்.டி.ஓ., உத்தரவின்படி அடக்கம்

இடைப்பாடி: இறந்து போனவரின் உடலை புதைக்க அனுமதி கோரி தாழ்த்தப்பட்டவர்கள் இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது என்ற அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்து தொடர்ந்து பிணத்துடன் மறியல் செய்தனர். நீதிமன்ற உத்தரவு இருந்தாலும், ஏற்கனவே இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடத்தில் தற்போது இறந்தவரின் உடலை அடக்கம் செய்யுங்கள் என சங்ககிரி ஆர்.டி.ஓ., கூறியதை அடுத்து நேற்று இரவு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இடைப்பாடி தாலுகா தங்காயூர் கிராமம் கோணங்குட்டையூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 75 குடும்பங்கள் வசித்து வருகின்றன.


அதே பகுதியில் மற்றொரு சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள புறம்போக்கு நிலத்தில் புதைப்பது வழக்கம். இந்த புறம்போக்கு நிலம் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான நிலம். அதனால் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்து போனால் புதைப்பதில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.கடந்த 6ம் தேதி அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அப்புசாமி(70) என்பவர் இறந்துள்ளார். அருந்ததியர் இறந்து போனால் புதைக்கும் இடத்தில் இனி யாரையும் புதைக்கக்கூடாது என நில உரிமையாளர் பழனியப்பன், சங்ககிரி நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார். இறந்தபோன அப்புசாமி உடலை புதைப்பதில் பிரச்னை ஏற்பட்டது.


இது குறித்து சங்ககிரி ஆர்.டி.ஓ., சுப்ரமணியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும், தாசில்தார் சண்முகம், கொங்கணாபுரம் யூனியன் சேர்மேன் பரமசிவம், சங்ககிரி டி.எஸ்.பி., சுப்ரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். இறந்தவர்களின் உடலை புதைக்கக்கூடாது என நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை சங்ககிரி ஆர்.டி.ஓ., சுப்ரமணியத்திடம் நில உரிமையாளர் பழனியப்பன் மருமகள்கள் சாந்தி, லதா ஆகியோர் கொடுத்தனர். "இதே இடத்தில் நூறு ஆண்டுகளாக அருந்ததியர் தங்களின் உறவினர்கள் இறந்து போனால் புதைத்து வருகின்றனர். இப்போது மட்டும் இங்கு புதைக்க அனுமதிக்க வேண்டும். பின்னர் மாற்று இடம் தேர்வு செய்து அவர்களுக்கு தருகிறோம்' என, நில உரிமையாளர் பழனியப்பனிடம் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தினார். "இந்த நிலம் எங்களின் பூர்வீக சொத்து. நாங்கள் அப்போது அவர்கள் இறந்தால் புதைக்க அனுமதி அளித்தோம். இனிமேல் இங்கு புதைக்க அனுமதிக்க மாட்டோம்' என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


எனினும், "இறந்து இரண்டு நாட்கள் ஆனதால் நீதிமன்ற உத்தரவு இருந்தாலும், ஏற்கனவே இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடத்தில் தற்போது இறந்தவரின் உடலை அடக்கம் செய்யுங்கள்' என, சங்ககிரி ஆர்.டி.ஓ., கூறியதை அடுத்து நேற்று இரவு உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கந்தாயி(70) என்ற மூதாட்டி இறந்த போதும், இதேபோல் பிரச்னை ஏற்பட்டது. அப்போதும் இரண்டு நாட்கள் காத்திருந்து தான் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடிந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மீண்டும் அதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஒரு பிரச்னை ஏற்படும் முன் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
Top

சம்பவம்

* 1.வீடு புகுந்து தங்க நகை கொள்ளை

சேலம்: சேலத்தில் வீடு பூட்டு உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். சேலம் அம்மாபேட்டை வைத்தியலிங்கம் தெருவை சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் அதிபர் கணேஷ்பாபு. அவர் மூன்றடுக்கு மாடி வீட்டில் வசித்து வருகிறார். கீழ் தளம் ஜெயபிரகாஷ் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். மேல் இரண்டு மாடியிலும் கணேஷ்பாபு குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயபிரகாஷ் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். கணேஷ்பாபுவும், மனைவி பிரசவத்துக்காக மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார்.


இரண்டு வீடுகளும் பூட்டி இருந்தது. கணேஷ்பாபு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். முன்னால் உள்ள இரும்பு கேட் கதவு பூட்டு உடைபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மாடியில் உள்ள வீட்டுக்கு கணேஷ்பாபு சென்று பார்த்தார். பீரோவின் சாவியை அதிலேயே அவர் வைத்து விட்டு சென்றதால், கொள்ளையர்கள் ஆறரை பவுன் தங்க நகை, 1,000 ரொக்கம் என எடுத்து சென்றுள்ளனர். ஜெயபிரகாஷ் வீட்டுக்குள்ளும் கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கு எதுவும் சிக்கவில்லை. இது குறித்து அம்மாபேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மர்ம கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
Top
* 2.வனக்காவலர் இறப்பில் சந்தேகம்: வீடு வரை சென்று திரும்பிய உடல்

மேட்டூர்: மேட்டூரில் இறந்த வனக்காவலர் உடல், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், வனகாவலர் உடல் மீண்டும் மேட்டூருக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த நெசல் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் (53). ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், பாலாறு காவல்சுற்றில் வனகாவலராக பணிபுரிந்த பாலசுந்தரத்திற்கு கடந்த 6ம் அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. வனத்துறை ஊழியர்கள் சிலர், பாலசுந்தரத்தை கருங்கல்லூரில் இருந்து மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் ஏற்றி வந்தனர்.


உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலசுந்தரம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உறவினர்கள் பாலசுந்தரம் உடலை தங்கள் ஊருக்கு எடுத்து வருமாறு வன ஊழியர்களிடம் கூறி விட்டனர். அதன்படி மேட்டூரில் இருந்து பாலசுந்தரம் உடலை விழுப்புரம் மாவட்டத்திற்கு ஊழியர்கள் எடுத்து சென்றனர்.அங்கு, பாலசுந்தரம் மனைவி குணபூசனம், மகன் ஆனந்தராஜ் ஆகியோர் பாலசுந்தரம் உடலை பார்த்துள்ளனர். அப்போது அவரது தலையில் ரத்த காயம் இருந்ததாக தெரிகிறது.

சந்தேகம் அடைந்த ஆனந்தராஜ், தனது தந்தை பாலசுந்தரம் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என கொளத்தூர் போலீஸில் புகார் செய்தார்.தொடர்ந்து பாலசுந்தரம் பிணம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் மீண்டும் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் விழுப்புரம் கொண்டு செல்லப்பட்டது. பாலசுந்தரம் நெஞ்சுவலியால் இறந்தாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என்பது குறித்து கொளத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Top
* 3.போலீஸ் ஸ்டேஷனில் நெஞ்சுவலியால் ஏட்டு சாவு

மேட்டூர்: ஜலகண்டபுரம் ஸ்டேஷன் போலீஸ் ஏட்டு வெங்கடேஷன், நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.ஓமலூர் தாலுகா, தீவட்டிபட்டி அடுத்த உம்பளிக்கம்பட்டியை சேர்ந்தவர் போலீஸ் ஏட்டு வெங்கடேசன் (47). அவருக்கு இந்திரா என்ற மனைவியும், மோகன்குமார், ரசிகா என மகன், மகள் உள்ளனர்.ஏட்டு வெங்கடேசன் ஜலகண்டபுரம் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் இரவு பீட் முடித்து விட்டு நேற்று காலை ஸ்டேஷனில் தூங்கி விட்டார். காலையில் எழுந்த அவர், முகம், கை காலை கழுவி விட்டு அமர்ந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.வலியால் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டது. பணியில் இருக்கும்போதே நெஞ்சுவலியால் ஏட்டு இறந்த சம்பவம் சக போலீஸாரை வேதனையில் ஆழ்த்தியது.
Top
* 4.புள்ளிமான் கிணற்றில் தவறி விழுந்து பலி

ஆத்தூர்: ஆத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்த பெண் புள்ளிமான், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.ஆத்தூர் அருகே சின்னகல்வராயன் மலைப்பகுதியில் சுற்றி திரிந்த பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி மலை அடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்கு நேற்று மதியம் வந்தது. அந்த புள்ளிமான் வேணு என்பவரின் விவசாய தோட்டத்திலுள்ள 80 ஆழ கிணற்றில், கால் தவறி கீழே விழுந்து தண்ணீரில் தத்தளித்து இறந்தது. அதை பார்த்த விவசாயி வேணு, ஆத்தூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையனருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு படையினர் தண்ணீரில் இறந்து கிடந்த பெண் புள்ளி மானை மீட்டு வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். இறந்த புள்ளிமானை கால்நடைதுறை அலுவலர்கள் மூலம் பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.


* கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயி முத்துசாமி என்பவரது தோட்டத்துக்கு தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று 15 ஆழ கிணற்றில் கீழே விழுந்தது. அதைபார்த்த விவசாயி வனத்துறை அலுவலரிடம் தகவல் தெரிவித்தார்.தகவலறிந்து விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு படையினர் விவசாய கிணற்றில் உயிருடன் இருந்த மானை மீட்டு வனவர் துரைசாமி, வன பாதுகாப்பாளர் சேகர் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
Top
* 5.நான்கு வழிச்சாலையில் தொடர் விபத்து தடுப்பு வேலியை உடைத்து டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதிய லாரி

பனமரத்துப்பட்டி: சேலம்- நாமக்கல் நான்கு ரோட்டில் அடுத்தடுத்து இருந்த இரண்டு தடுப்பு வேலியை உடைத்து கொண்டு ரோடு ஓரத்தில் இருந்த உயர் மின் அழுத்த டிரான்ஸ்ஃபார்மர் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளனது.சேலம்- நாமக்கல் நான்கு வழிப்பாதை அமைக்கப்பட்டதில் இருந்து வாகன போக்குவரத்து விரைவாக நடந்து வருகிறது. சரக்கு லாரிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் அதிவேகத்தில் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் சில இடங்களில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிறது.


நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி டிப்பர் லாரி ஓன்று அதிவேகமாக சென்றது. நாழிக்கல்பட்டி தனியார் சேகோ மில் அருகே டிப்பர் லாரி வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. நான்கு ரோட்டின் நடுவில் இருந்த மின் கம்பத்தை சாய்த்து விட்டு, அடுத்து இருந்த தடுப்பு வேலியை உடைத்து கொண்டு ரோடு ஓரத்தில் இருந்த உயர் மின் அழுத்த டிரான்ஸ்ஃபார்மர் மீது பயங்கரமாக மோதியது.மூன்று ரோடுகள் மற்றும் தடுப்பு சுவர், இரும்பு வேலி ஆகியவற்றை தாண்டி பறந்து வந்த டிப்பர் லாரி டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதி நின்றது. அந்த நேரத்தில் ரோட்டில் யாரும் வராததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.லாரி மோதியதால் டிரான்ஸ்ஃபார்மர் சேதம் அடைந்து கீழே சாய்ந்ததில், மின்சார ஒயர்கள் அறுந்து கீழே விழுந்து தீப்பொறி பறந்தன.


டிரான்ஸ்ஃபார்மரில் இருந்து ஆயில் கொட்டியதால் பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. தகவலறிந்த தாசநாயகன்பட்டி மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கீழே அறுந்து கிடந்த மின் ஒயர்களை சரி செய்தனர். அதனால் பெரும் மின் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் செல்வம், ஏ.இ., காமராஜ் ஆகியோர் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்தனர். மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநீலகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

No comments:

Post a Comment