* 1.கோடைக்கு முன் வெயில் உக்கிரம் அதிகரிப்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோர்
தர்மபுரி: கோடைக்கு முன்பே தர்மபுரியில் கொளுத்தும் வெயில் அடித்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வெப்ப மண்டல பகுதியான தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வெயில் உக்கிரம் அதிகம் இருக்கும். தற்போது, கோடைக்கு முன் அனல் காற்று வீசத்துவங்கியிருப்பதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக வெயில் உக்கிரம் அடைந்திருப்பதால், பகல் நேரங்களில் சாலைகளில் அனல் காற்று வீசத்துவங்கி விடுகிறது. காலை 6 மணியில் இருந்தே வெயில் தாக்கம் துவங்கி இரவு 7 மணி வரையில் நீடிக்கிறது. பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரையில் சாலைகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இதனால், பகல் 12 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைய துவங்கியுள்ளது.
சுழற்சி முறையில் மின் நிறுத்தம் வேறு இருப்பதால், பகல் நேரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதியில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயில் உக்கிரம் காரணமாக தர்மபுரி இலக்கியம்பட்டியில் உள்ள ராஜாஜி நீச்சல் குளத்துக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கத்தை விட சனி, ஞாயிறுகளில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் வந்து குளித்து செல்கின்றனர்.
சாலையோரங்களில் அதிக அளவில் தர்பூசணி பழங்கள் விற்பனையும், குளிர்பதன கடைகளும் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. ஜூஸ் விற்பனையும் அதிகரித்துள்ளது. கோடை வெயில் காரணமாக எலுமிச்சை பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த நாட்களில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எலுமிச்சை பழங்கள் தற்போது இரண்டு ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இளநீர் விற்பனை சூடு பிடிக்க துவங்கியுள்ளதால், தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இளநீர் காலை நேரத்தில் அதிகம் விற்பனை செய்யபடுவதால், காலை 6 மணியில் இருந்து 7 மணிக்கு சைக்கிளில் விற்பனை செய்யும் இளநீர்கள் விற்பனை முடிந்து சென்று விடும் நிலையுள்ளது.
தேங்காய் உற்பத்தி பாதிப்பு காரணமாக இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதல் தரமான இளநீர்கள் கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் சென்னை, வேலூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு தர்மபுரி பகுதியில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு செல்கிறது.
கோடை காலத்துக்கு முன் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தர்மபுரி விவசாயிகளிடம் முன் பணம் கொடுத்து தங்கள் தேவைக்கு ஏற்ப அறுவடை செய்து வருவதால், உள்ளூர் விற்பனைக்கு இளநீர் குறைந்த அளவே கிடைத்து வருகிறது. குறிப்பாக இரண்டாம், மூன்றாம் தர காய்கள் மட்டுமே உள்ளூர் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது. இளநீர் தட்டுப்பாடு காரணமாக பல வியாபாரிகள் சற்று முற்றிய காய்களையும் இளநீர் விற்பனைக்காக பறித்து வருவதால், தேங்காய் உற்பத்தி கடந்த நாட்களை விட தற்போது 30 முதல் 40 சதம் குறைந்துள்ளது.
கடந்த நாட்களில் மூன்று தேங்காய் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை மாறி, ஒரு தேங்காய் 5, 6, 7 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் கோடை வெயில் அதிகரிக்கும் நிலை இருப்பதால், தேங்காய் மற்றும் உள்ளூர் விற்பனைக்கு இளநீரும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெயில் உக்கிரம் மாலை நேரங்களில் தணிவதால், வெயில் புழுக்கத்தில் வீட்டில் அடைந்து கிடக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையில் மாலை நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூடுவதோடு, இரவு 8 மணிக்கு மேலும் காற்றுக்காக உட்கார்ந்த பின் வீடுகளுக்கு திரும்புகின்றனர்.
Top
* 2.அ.தி.மு.க., தே.மு.தி.க., வேட்பாளர்கள் பிரச்சாரம்
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் அ.தி.மு.க., தே.மு.தி.க., வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். தொடர்ந்து, தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
பா.ம.க., - தி.மு.க., பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சியினர் மவுனமாக இருந்து வந்தனர். தற்போது மனுத்தாக்கலை தொடர்ந்து கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் கட்சி தொண்டர்களுடன் கிராமம், கிராமமாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகன், பென்னாகரம், மடம், குள்ளத்திராம்பட்டி, ஏரியூர், நெருப்பூர், நாகமரை கொண்டஹள்ளி, பெரும்பாலை என 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களிடையே ஓட்டு சேகரித்தார்.
தே.மு.தி.க., வேட்பாளர் காவேரிவர்மன் பாப்பாரப்பட்டி, திருமல்வாடி, மண்ணேரி உள்ளிட்ட பகுதிகளில் கட்சியினருடன் சென்று பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்தார். கட்சி வேட்பாளருக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்களும் ஆங்காங்கே தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
Top
* 3.பென்னாகரம் இடைத்தேர்தல் பரிசல் ஓட்டிகளுடன் ஆலோசனை
ஒகேனக்கல்: இடைத்தேர்தலையொட்டி காவிரி படுகை பகுதியில் வெளியாட்கள் வருவதை தடுப்பது குறித்து பரிசல் ஓட்டிகளுடன் ஒகேனக்கல்லில் ஆலோசனை நடந்தது. டி.எஸ்.பி., பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். எஸ்.ஐ., நரேந்திரன் முன்னிலை வகித்தார்.
பரிசல் ஓட்டிகள் சங்க தலைவர் சங்கர், செயலாளர் தவசி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். பரிசல் ஓட்டுனர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை மற்றும் அடையாள அட்டைகளுடன் உயிர் காக்கும் ஆடைகளை அணிய வேண்டும். சுற்றுலா வரும் பயணிகளுக்கு உயிர் காக்கும் ஆடை வழங்கிட வேண்டும்.
பரிசல் துறையில் வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால், உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பரிசலில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு கூடுதலாக பயணிகளை ஏற்றக்கூடாது. கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Top
* 4.குடும்ப வன்முறை தடுப்பு தலைமையாசிரியருக்கு பயிற்சி
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடும்ப வன்முறை களுக்கு எதிரான புரிதலை ஏற்படுத்துதல் குறித்த தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தலைமையாசிரியர் பொன்னுசாமி தலைமை வகித்தார். வீகேன் மாவட்ட கன்வீனர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான வசதிகளான கல்வி, விளையாட்டு போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பது.
பெண்சிசு கொலை தடுப்பது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களுக்கு குடும்ப வன்முறை பற்றி ஒரு நிமிடம் புரிதல் ஏற்படுத்த வேண்டும் போன்றவைகளை வலியுறுத்தப்பட்டது. இதில், 30 க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வீகேன் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் ஆறுமுகம், ஜெயந்தி, சுகுமார், அமுதா, பிரகாசம், ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
Top
பிரச்னைகள்
* 1.வறுத்தெடுக்கும் அனல் காற்று ஓடி ஒளியும் போலீஸார்
பென்னாகரம்: இடைத்தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் வேளையில், தொகுதியில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. அனல் காற்றும் வீசுவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் நிழலை தேடி ஓடுகின்றனர். பென்னாகரம் வறட்சியான பகுதி. குடிநீருக்காக மக்கள் அல்லல்படும் நிலை இங்கு அதிகமாக உள்ளது.
மழை பொய்த்து விட்டதால் விவசாய நிலங்களும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. கோடைகாலம் நெருங்கும் முன்பே, இப்பகுதியில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் முகத்தை பாதி மூடிய நிலையிலும், கூலிங்கிளாஸ், தொப்பி அணிந்தவாறு செல்கின்றனர். குளிர்பான கடைகளும் பெருகி வருகின்றன.
இடைத்தேர்தல் நடப்பதால் வெளிமாவட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். சிலருக்கு மரத்தடி நிழல் வாய்ப்பு கிடைத்துள்ளது. பலர் வெட்டை வெளியில் காத்து கிடக்கும் நிலையும் உள்ளது. போலீஸார் பலர் நிழலைத் தேடி கிடைத்த இடங்களில் ஒதுங்கி இளைப்பாறுகின்றனர்.
வரும் நாட்களில் வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும், பிரச்சாரத்தின் வேகமும் அதிகரிக்கும். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், "இடைத்தேர்தல் எப்போது முடியுமோ' என புலம்பியடி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
Top
சம்பவம்
* 1.பளபளக்கும் சாலைகள்: மாற்று கட்சியினர் பீதி
பென்னாகரம்: இடைத்தேர்தல் எதிரொலியாக, பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ரோடுகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ரோடு இல்லாமல் சிரமப்பட்ட மக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியை தி.மு.க., மேற்கொண்டு வருகிறது. பென்னாகரம் தொகுதியில் 48 பஞ்சாயத்துக்கள் உள்ளன.
தொகுதியில் அமைந்துள்ள மலையோர கிராமங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். சில மாதம் முன்பு வரை, இங்கு குறிப்பிடும்படியாக சாலை வசதி எதுவும் இல்லை. ஆனால், தேர்தல் வரும் நிலை ஏற்பட்ட உடனேயே பல இடங்களிலும் தார் சாலைகள் அமைக்கும் பணி துவங்கி விட்டது.
இடைத்தேர்தல் எதிரொலியாக ஆளும் கட்சியினர் மக்களை கவர்ந்திழுக்க இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவே பலரும் கூறுகின்றனர். ரோடு வசதி நல்ல முறையில் இருந்தாலும் தங்கள் பகுதிக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.
அதேபோல, ரோடு வசதி செய்யாத இடங்களில் கடந்த சில நாட்களாக பணிகள் துரித மாக நடக்கிறது. தேர்தல் அறிவிப்புக்கு பின் தொகுதியில் அரசு திட்டங்களை செயல் படுத்தக் கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்தாலும், "இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணி, அதைத் தான் தொடர்கிறோம்' என்பது தி.மு.க.,வினரின் வாதம்.
குண்டும், குழியுமாக கிடந்த, இண்டூரில் இருந்து பாப்பாரப்பட்டி செல்லும் ரோடு ஐந்து கி.மீ., தூரத்துக்கு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கானாப்பட்டி ஏரிக்கரையில் இருந்து தற்போது ரோடு போடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இந்தப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மக்கள் வசதிக்காக செய்யப்படும் இதுபோன்ற பணிகள் தி.மு.க.,வுக்கு சாதகமாக அமைந்து விடுமோ' என்றும், "வெற்றி வாய்ப்பை நாம் இழந்துவிடுவோமோ' என மாற்று கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment