Sunday, March 7, 2010

தேனி

* 1.ஆண்டிபட்டி பகுதியில் மாட்டு தீவனங்களுக்கு தட்டுப்பாடு : கால்நடை வளர்ப்பு விவசாயிகள் கவலை.

ஆண்டிபட்டி : தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வெளியூர்களில் இருந்து தீவனத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மானாவாரி, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இறவை பாசனம் உள்ளது. விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் தங்கள் உபதொழிலாக கொண்டுள்ளனர். மானாவாரி நிலங்களில் பயிராகும் சிறுதானிய பயிர்கள், பயறு வகைகளின் தழைகளை சேமித்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தி கொள்வர். இந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் மானாவாரி நிலங்களில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை.
இறவை பாசனத்தில் காய்கறிகள், பூக்கள், கரும்பு சாகுபடி அதிகம் உள்ளது. கால்நடைகளுக்கான தீவனம் இதில் கிடைப்பதில்லை. அதிகமாக கால்நடை வைத்திருப்பவர்கள் இறவை பாசன நிலங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர் சாகுபடி செய்து கொள்கின்றனர். மானாவாரி விவசாயம் குறைந்ததால் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோடை துவங்கும் முன்பே மேய்ச்சல் நிலங்கள் வறண்டு காய்ந்து விட்டதால், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடிவதில்லை. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் வெளியூர்களில் இருந்து கூடுதல் விலை கொடுத்து தீவனங்களை வாங்கி லாரிகள், டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து இருப்பு வைக்க துவங்கியுள்ளனர். தீவனத்திற்கான செலவு கூடுதலாவதால் கால்நடை வளர்ப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
Top
* 2.மாணவர்கள் நலன் கருதி ஒலிபெருக்கிக்கு கட்டுப்பாடு

கூடலூர் : பிளஸ் டூ தேர்வு தற்போது நடந்து வருவதாலும், தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளதாலும், கூடலூர் பகுதியில் ஒலிபெருக்கிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது.
கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் ஒலிபெருக்கி உரிமையாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டியில் இருந்து ஒலிபெருக்கி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக ஒலிபெருக்கிக்கு கட்டுப்பாடுகள் விதித்து ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. குழாய் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக்கூடாது. பகல் நேரங்களில் குறைந்த சத்தத்தில் ஒலிபரப்ப வேண்டும். பொதுத் தேர்வு நடக்கும் மையங் களை நோக்கி ஒலிபரப்பும் பெட்டியை வைக்கக்கூடாது. இந்த நடைமுறையை ஏப்ரல் 30 வரை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் மன்ற செயலாளர் பார்த்திபன், ஒருங்கிணைப்பாளர்கள் அசோகன், புதுராஜா, செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, தெய்வேந்திரன், முருகன், குணசேகரன், கணேசன், ஒலிபெருக்கு உரிமையாளர் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் ஜெயம், பொருளாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 3.கம்பம் ஓடைக்கரைத் தெருவில் ஆக்கிரமிப்புக்களால் நெருக்கடி

கம்பம் : ஓடைக்கரை தெரு ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கம்பம் நகரில் மெயின்ரோடு மட்டுமல்லாது அனைத்து தெருக்களிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துள்ளன. தெருக்கள் குறுகி, பொதுமக்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. குறிப்பாக தியாகி வெங்கடாசலம் தெரு, குட்டியாபிள்ளை தெரு, காளியம்மன் கோயில் வீதி, கிராமச்சாவடி தெரு, வேலப்பர் கோயில் வீதி, காந்திஜி வீதி, கம்பமெட்டு ரோடு உள்ளிட்ட பல வீதிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. மெயின்ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை சமீபத்தில் அகற்றியது.
நகராட்சி தன் பங்கிற்கு சில தெருக்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது. குறிப்பாக ஓடைக்கரை தெருவில் இரண்டு முறை அகற்றியது. ஆனால் அந்த தெருவில் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியின் நகரமைப்பு பிரிவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அத்தோடு மிகவும் நெருக்கிடியில் உள்ள தியாகி வெங்கடாச்சலம் தெரு, குட்டியாபிள்ளை தெரு உள்ளிட்ட பல தெருக்கள் கண்டுகொள்ளப்படவில்லை.
ஆக்கிரமிப்பை அகற்றிய ஓடைக்கரை தெருவில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த வீதியில் நடுரோட்டில் ஆடுகள் மற்றும் கோழிகள் அறுக்கப்படுகின்றன. இதனால் தெருவில் போகும் பொதுமக்கள் முகம் சுளிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆடு மற்றும் கோழிகள் அடிப்பதற்கென்று நவீன ஆடு அடிக்கும் தொட்டி 22 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஆனால் ஒருவரும் அங்கு செல்வதில்லை. எனவே ஓடைக்கரை தெருவில் மீண்டும் முளைத்துள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், மட்டன் மற்றும் கோழிக்கறி கடைகளை வேறு இடத்திற்குமாற்றவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Top

பொது

* 1.மனுநீதி நாளை புறக்கணிக்க வி.ஏ.ஓ., க்கள் சங்கம் முடிவு

தேனி : மனுநீதி நாள் முகாமில் பெறப்படும் தகுதியற்ற மனுக்களுக்கு உதவி வழங்க அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தமிழ்நாடுகிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் நடந்தது. செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன மனுநீதி நாள் முகாமில் ஓய்வூதியம் குறித்த மனுக்கள் மீது ஆய்வு செய்தபின் தகுதியற்ற நபர் என தெரிவிக்கப்பட்டும், சம்பந்தப் பட்ட நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால் ஏற்படும் இழப்பினை அதிகாரிகள் மாற்றம் செய்யப்படும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் பாதிப்பு ஏற்படுகின்றன. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. தகுதியற்ற நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்க கட்டாயப்படுத்தினால் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக மனுநீதி நாளை புறக்கணிப்பது என்றும், மார்ச் 23 ல் மாவட்ட அளவில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என் பது உட்பட பல தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
Top
* 2.நூலக பொது நிதியில் புத்தகங்கள் வழங்கல்

தேனி : மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு 61 ஆயிரம் தமிழ் புத்தகங்கள் நுலக பொது நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.
மாவட்ட நூலகர் கேசவன் கூறியதாவது: மாவட் டத்தில் 2009-10 ல் ராஜாராம் நூலக அறக்கட்டளை சார்பில் 15 ஆயிரம் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இது தவிர குடிமைப்பணிகள், குழந்தைகள் புத்தகங்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு 920 ஆங்கில புத்தகங்கள் வந்துள்ளன. நூலக நிதியில் இருந்து 61 ஆயிரம் தமிழ் புத்தகங்கள் அனைத்து கிளை மற்றும் ஊரக நூலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளன. 400 குடிமைப்பணிகளுக்கான புத்தகங்கள் நகராட்சி பகுதியில் உள்ள ஒன்பது நூலகங்களுக்கு வழங்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கான 500 புத்தகங்கள் நூலகத்திற்கு வழங்கப்பட உள்ளதுற என்றார்.
Top
* 3.உதவித்தொகை வழங்கும் விழா

பெரியகுளம் : பெரியகுளம் தாலுகா அளவிலான தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தாசில்தார் சின்னக்காளை, மண்டல துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ.,க்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர். 466 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், 33 பேருக்கு நலிந்தோர் உதவித்தொகை மற்றும் 32 பயனாளிகளுக்கு திருணம உதவிகள் உட்பட 30 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கான உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.
Top
* 4.மருத்துவ முகாம்

தேனி : போலீசாருக்கான இலவச காது, மூக்கு தொண்டை சிகிச்சை முகாம் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. பாலகிருஷ்ணன் எஸ்.பி., முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் ராமசுந்தர் தலைமையில் டாக் டர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் 200 போலீசாருக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Top

பிரச்னைகள்

* 1.வனவிலங்குகள் கணக்கெடுப்பு விபரம்: வெளியிடுவதில் தாமதம்

கம்பம் : மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வனவிலங்கு கணக்கெடுப்பு விபரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
வனப்பகுதிகளில் குறிப்பிட்ட காலக்கெடுவில் வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்படும். வனவிலங்குகள் எண்ணிக்கை, எந்த இனம் குறைந்துள்ளது, எது அதிகரித்துள்ளது, காரணம் என்ன, வனவிலங்குளின் பாதுகாப்பு குறைபாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆய்வு செய்யப்படும். வழக்கமாக நடத்தப்படும் கணக்கெடுப்பு போலில்லாமல் இந்த முறை வனப்பகுதியில் "கிரீன் கவர்' ஏரியா, குறிப்பிட்ட மரங்களின் நிலை போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கணக்கெடுப்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பிரதிநிதிகளும், மாணவர்களும் பங்கேற்றனர். கணக்கெடுப்பு காலமும் அதிகரிக்கப்பட்டு, தொடர்ந்து ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்டது.
தேனி வனக்கோட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர், போடி, ஹைவேவிஸ், மேகமலை உள்ளிட்ட வன சரகங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கணக்கெடுப்பு முடிந்து பல நாட்களாகி விட்டபோதும், கணக்கெடுப்பின் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மாவட்ட வன அதிகாரி சீனிவாசரெட்டி கூறுகையில், "இன்னும் முழுமையாக கணக்கெடுப்பு விபரங்கள் சம்பந்தப்பட்ட சரகங்களில் இருந்து வந்து சேரவில்லை. மேலும் இது ஒரு பெரிய அளவிலான கணக்கெடுப்பு. எனவே சரி செய்து விபரங்களை வெளியிட கால அவகாசம் தேவைப்படும்' என்றார்.
Top

சம்பவம்

* 1.வருசநாடு மலைப்பகுதியில் சந்தேக வாலிபர் கைது

வருசநாடு : வருசநாடு மலைப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு வனச்சரகத்திற்கு உட்பட்டது ஓயாம்பாறை மலைப்பகுதி. இப்பகுதியில் தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்த மாயி என்பவருக்கு இலவம் தோட்டம் உள்ளது. நேற்று இவர் இலவம் காய் பறித்து கொண்டிருந்த போது 38 வயது மதிக்கத்தக்கவர் இந்தியில் பேசி உணவு கேட்டுள்ளார். உணவுக்கு பதிலாக பிஸ்கட் கொடுத்துள்ளனர். சாப்பிட்டுவிட்டு மாயியின் வீட்டை சுற்றி பார்த்துள்ளார். சந்தேகமடைந்த மாயி, சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரித்துள்ளார். விசாரித்ததால் ஆத்திரமுற்ற வாலிபர் மாயியை தாக்கினார்.
இதையடுத்து மாயி, அவரது உறவினர் வனம் உடன் சேர்ந்து அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து பாலகிருஷ்ணன் எஸ்.பி., க்கு தகவல் தெரிவித்தனர். வருசநாடு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், கியூபிராஞ்ச் இன்ஸ்பெக்டர் முருகன், ரேஞ்சர் சுந்தரவடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட வாலிபர் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவரா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Top
* 2.மேய்ச்சலுக்கு சென்ற 35 ஆடுகள் பலி

கூடலூர் : ஆனைமலையன்பட்டியை சேர்ந்த சந்திரன் என்பவருக்குச் சொந்தமான 150 ஆடுகள் குள்ளப்பகவுண்டன்பட்டியில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வரும் போது 75க்கும் மேற்பட்ட ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்துள்ளன. உடனடியாக அரசு கால்நடை டாக்டர் குணசேகரன் மயங்கி விழுந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். இதில் 35 ஆடுகள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
டாக்டர் குணசேகரன் கூறுகையில், "மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் ஏதேனும் மருந்து கலந்த பொருட்களை உணவாக உட்கொண்டிருக்கலாம். இதனால் இறப்பு நேர்ந்திருக்கலாம். பரிசோதனையில் தெரியவரும்' என்றார்.
Top
* 3.போலி சான்றிதழ் வழக்கு போடி வாலிபருக்கு சிறை

போடி : போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்த வாலிபருக்கு போடி கோர்டில் இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பளிக்கப் பட்டது.
போடி - அணைக்கரைப்பட்டி அருகே துரைராஜபுரம் காலனியில் வசிப்பவர் ராஜகுமாரன் (25). இவர், 2001 ல் போடி சி.பி.ஏ., கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு சேர்ந்துள்ளார். மதிப்பெண் சான்றிதழ் கல்லூரி கல்வித்துறை மூலம் சரிபார்க்க அனுப்பப்பட்டது. இதில் ராஜகுமாரனின் மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரியவந்தது. கல்லூரி நிர்வாகம் போடி டவுன் போலீசாரிடம் கொடுத்த புகாரில் ராஜகுமாரனை போலீசார் கைது செய்து போடி மாஜிஸ்திரேட் கோர்டில் ஒப்படைத் தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் முகபூப் அலிகான், ராஜகுமாரனுக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Top
* 4.வீட்டு மனை ஆக்கிரமிப்பு

தேனி : கீழ் கூடலூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மா(56). இவருக்கும் காக்கிலி சிக்கைய கவுடர் தெருவை சேர்ந்த ஜெயராஜ்(40) என்பவருக்கும் வீட்டு மனை இடம் வாங்கியதில் பிரச்னை உள்ளது. இது தொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்நிலையில் ஜெயராஜ், நிலத்தை ஆக்கிரமித்து கொண்டதாக பாலகிருஷ்ணன் எஸ்.பி.,யிடம் தர்மா புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின் பேரின் கூடலூர் போலீசார் ஜெயராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Top
* 5.ஏலச்சீட்டு நடத்தி மோசடி

தேனி : தேனி பாரஸ்ட் ரோடு ஐந்தாவது தெருவை சேர்ந்த ஹரிகோவிந்தன் மனைவி சாந்தி(35). இவர், என்.ஆர்.டி., நகர் ஜவஹர் ரோட்டை சேர்ந்த தாமோதரன்(70) என்பவரிடம் மாதம் 5000 ரூபாய் செலுத்தி ஏலச்சீட்டு சேர்ந் துள்ளார். மொத்தம் 37 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி உள்ளார். சீட்டு முடிந்தும் தாமோதரன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் பணம் கொடுக்காமல் தரக்குறைவாக பேசியுள்ளார். சாந்தி புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Top
* 6.திரிணாமுல் காங்., நிர்வாகி மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு

தேனி : போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் மோசடி செய்ததாக திரிணாமுல் காங்கிரஸ் மாநில துணை தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி அன்னஞ்சி அருகே பைபாசில் திண்டுக்கல்லை சேர்ந்த காந்தி என்பவருக்கு சொந்தமான 2.89 ஏக்கர் நிலம் இருந்தது. இதை 1992ல் தேனியை சேர்ந்த பாலகுருசாமி "பவர்' எழுதி வாங்கி "பிளாட்' போட்டு கண்டமனூர், வருஷநாடு பகுதிகளை சேர்ந்த 64 பேருக்கு விற்றுள்ளார். 64 பேர் பெயரில் 2000 த்தில் அந்த இடம் பட்டா மற்றும் சப் டிவிஷன் ஆகி உள்ளது. இந்நிலையில் தேனியில் ஸ்ரீ பாலாஜி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தி வரும் பெரியகுளம் பூந்தோட்ட தெருவை சேர்ந்த வைரமணி(56) என்பவர் காந்தியிடம் இருந்தும், அவரது மகன் அய்யாச்சாமியிடம் இருந்தும் அந்த நிலத்தை வாங்கியது போல் போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை கையகப்படுத்தினார்.
இது குறித்து நில உரிமையாளர்களில் ஒருவரான கண்டமனூரை சேர்ந்த கணேசன்(57) புகாரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வழக்கு பதிவு செய்து வைரமணியை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய ஆறுபேரை தேடி வருகின்றனர். கைதான வைரமணி திரிணாமுல் கட்சியின் மாநில துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் வைரமணி மீது மடிப்பாக்கம் குமரன் தெருவை சேர்ந்த ரோஸ்மேரி என்பவர் தனது நிலத்தை மோசடி செய்ததாக நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்தும் விசாரிக்க உள்ளனர். இவர் மீது கோயில் நிலம் அபகரிப்பு உட்பட பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக டி.எஸ்.பி., உமா தெரிவித்தார்.
Top
* 7.தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி : தேனி மாவட்ட சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் தேனி யில் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட பொது செயலாளர் ஷபீர் தலைமை வகித்தார். கம்பம் சட்டசபை தொகுதி குழு தலைவர் கலீல் ரஹ்மான் ஆர்ப் பாட்டத்தை துவக்கி வைத் தார். மாவட்ட செயலாளர் சுல்தான் உட்பட பலர் பேசினர்.

No comments:

Post a Comment