Sunday, March 7, 2010

கோவை

* 1.மாசாணியம்மன் கோவில் சிறப்பு அர்ச்சனை திட்டம்

பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி, 15 லட்சம் அர்ச்சனை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. கோவையில், ஜூன் மாதம் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. பஸ்கள், அரசு அலுவலகங்களில் "லோகோ' வைத்தும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சார்பில் பேரணியும் நடத்த பட்டு, பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது.


இந்நிலையில், மாநாடு சிறப்பாக நடப்பதற்காக கோவில்களில் சிறப்பு அர்ச்சனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி சரக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவை மாவட்டத்திலுள்ள கோவில்களில் மொத்தம் மூன்று கோடி அர்ச்சனை நடக்கிறது.


பொள்ளாச்சி சரகத்தில் மாரியம்மன், சுப்பிரமணியசுவாமி, கரிவரதராஜபெருமாள் கோவில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உட்பட பல்வேறு இடங்களில் அர்ச்சனை நடக்கிறது. மாசாணியம்மன் கோவிலில் 15 லட்சம் அர்ச்சனை நடக்கிறது. மார்ச் 13ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை இந்த அர்ச்சனை நிகழ்ச்சி நடக்கவுள்ளது.இவ்வாறு, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* 2.இளைஞர் காங்.,தேர்தலில் ஓட்டுச்சீட்டு கிழிப்பு; தேர்தல் நிறுத்தம்

மேட்டுப்பாளையம் : இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில், வாசன் - பிரபு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டு ஓட்டுச் சீட்டை கிழித்தெறிந்தனர்; தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்த மோதலால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் நடந்த இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலுக்காக, கடந்த மாதம் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 165 பதவிகளுக்கு 290 பேர் போட்டியிட்டனர். நகரில் மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும், முன்னாள் அமைச்சர் பிரபு ஆதரவாளர்கள் ஒரு கோஷ்டியாகவும் போட்டியிடுகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு நேற்று காலை 9.00 மணிக்கு தேர்தல் துவங்
கியது. கட்சி மேலிடம், ஹேமந்த்குமாரை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. காலை 10.00 மணி வரை இரு கோஷ்டியினரும் வரிசையாக நின்று ஓட்டுப் போட்டனர். காலை 11.00 மணியளவில் ஓட்டுப்பதிவு சீராக நடந்து கொண்டிருக்கையில், "வாசன் கோஷ்டியினர் கள்ள ஓட்டு போடுவதாக' பிரபு கோஷ்டியினரும், "பிரபு கோஷ்டியினர் கள்ள ஓட்டுபோட முயற்சிப்பதாக' வாசன் கோஷ்டியினரும் மாறி மாறி புகார் தெரிவித்தனர். தேர்தல் நடைபெறும் இடத்தில் இரு கோஷ்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சேர்களை தள்ளிவிட்டனர்.
பிரபு கோஷ்டியினர் ஓட்டுச் சீட்டுகளை கிழித்து வீசினர். அதிர்ச்சியடைந்த தேர்தல் பொறுப்பாளர் ஹேமந்த்குமார் தேர்தலை தள்ளி வைப்பதாக அறிவித்து விட்டு ஓட்டுப்பெட்டிகளை எடுத்துச் சென்றார். இதனால், தேர்தல் நடந்த ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வாசன் கோஷ்டியினர் கூறியதாவது: ஆறு மாதங்களாக தொகுதி முழுவதும் 5,000 உறுப்பினர்களை புதிதாக கட்சியில் சேர்ந்துள்ளோம். பிரபு கோஷ்டியினர் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்காமல் இருந்து விட்டனர். நாங்கள் சேர்த்த புதிய உறுப்பினர்கள், கூட்டமாக வந்து வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர். இதை பார்த்த பிரபு கோஷ்டியினர் கட்சியின் அனைத்து பதவிகளையும் அவர்களே கைப்பற்றி விடுவார்கள் என்று பயந்து, ஓட்டுச் சீட்டுகளை கிழித்து தகராறு செய்தனர். இதனால்,தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மேலிடத்திடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு, வாசன் கோஷ்டியினர் தெரிவித்தனர்.
பிரபு கோஷ்டியினர் கூறுகையில்,""வாசன் கோஷ்டியினர், அத்து மீறி நுழைந்து கள்ள ஓட்டு போட முயற்சி செய்தனர். இதனால், இளைஞர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தோல்வி பயத்தில், வாசன் கோஷ்டியினர் தகராறு செய்து தேர்தலை நிறுத்தி விட்டனர்,'' என்றனர்.

* 3.மலை வாழ் மக்களுக்கு விரைவில் மாற்று இடம்

உடுமலை:மலை வாழ் மக்களுக்கு ஒரு வார காலத்திற்குள் குடியிருக்க மாற்று இடம் தேர்வு செய்யவது என அமைதி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட குழிப் பட்டியில் மலை வாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. சந்தன மரங்கள் நிறைந்த இப்பகுதியில், திடீரென மலை வாழ் மக்கள் மரம், செடிகளை வெட்டி குடியிருப்பு அமைத்தனர்.


இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த அமைதி கூட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உடுமலை கோட்டாட்சியர் சோமசேகரன் தலைமை வகித்தார். தாசில்தார் கணபதி, உதவி வனப்பாதுகாவலர் தியாகராஜன், உடுமலை வனச்சரகர் சரவணன் மற்றும் மலை வாழ் மக்கள் பங்கேற்றனர்.


குடியிருப்புக்கு மட்டுமே அதிக பட்சம் ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்படும், கூடுதலாக வனத்தை அழித்து விவசாயம் செய்ய அனுமதிக்க முடியாது; சம்மந்தப்பட்ட இடத்தை வனத் துறையினர் ஆய்வு செய்து, அரசு அனுமதி பெற்று குடியிருப்புக்கு இடம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இப்பணிகளை இரு தரப்பும் ஒரு வார காலத்திற்குள் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும் என முடிவு செய்யப் பட்டது.

* 4.கோவையில் 'தினமலர்' நடத்திய எம்.பி.ஏ., கல்விக் கண்காட்சி : திரண்டனர் மாணவ, மாணவியர்

கோவை : எம்.பி.ஏ., படிக்க விரும்பும் மாணவ மாணவியருக்கு வழிகாட்ட, "தினமலர்' நாளிதழ் சார்பில்,கோவையில் நேற்று "கேட்வே பி-ஸ்கூல்ஸ்' எனும் எம்.பி.ஏ., கல்விக் கண்காட்சி நடந்தது. ஏராளமான மாணவ மாணவியர் பெற்றோருடன் வந்து, ஆலோசனை பெற்றுச் சென்றனர்.
இன்று நாடு முழுவதும் எம்.பி.ஏ., படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள், அந்நிறுவனங்களில் உள்ள முக்கிய படிப்புகள், வேலை வாய்ப்பு தரும் படிப்புகளை மாணவர்களுக்கு அடையாளம் காண்பித்து வருகிறது "தினமலர்' நாளிதழ். அதன்படி, நேற்று "பார்க் குளோபல் ஸ்கூல் ஆப் பிசினஸ் எக்ஸலன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து,கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில், "கேட்வே எம்.பி.ஏ., ஸ்கூல்ஸ்' எனும் எம்.பி.ஏ., கல்வி கண்காட்சியை நடத்தியது.
பாரதியார் பல்கலை உட்பட ஏராளமான கல்வி நிறுவனங்கள் அரங்குகள் அமைத்திருந்தன. பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி அனுஷா மகேஷ் கண்காட்சியை திறந்து வைத்தார். பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் நிர்வாகவியல் கல்வி பற்றிய பயனுள்ள இலவச புத்தகம் வழங்கப்பட்டது.
கண்காட்சியையொட்டி எம்.பி.ஏ., படிப்பு பற்றிய விளக்க கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பங்கேற்றனர். பலர் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். எம்.பி.ஏ., படிப்பு பற்றி மாணவ மாணவியர் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு நிர்வாகவியல் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.
கண்காட்சியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு கல்லூரியும் தனியே ஸ்டால்கள் அமைத்திருந்தன. ஒவ்வொரு ஸ்டாலிலும் எம்.பி.ஏ., படிப்பிற்கான அடிப்படை கல்வித்தகுதி, கட்டணம், சலுகைகள், இலவசமாக வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், சீருடைகள், பயிலரங்குகள், இன்டஸ்ட்ரியல் விசிட், வெளிநாடு அழைத்து செல்லுதல், வேலை வாய்ப்புகள், உள்நாட்டில் கிடைக்கும் வேலை, வேலைவாய்ப்பு கிடைக்கும் நிறுவனங்கள், நாடுகள், ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்படும் சம்பளவிகிதம் ஆகியவற்றை தெளிவாக பட்டியலிட்டு குறிப்பிட்டு காட்டினர்.
கல்லூரியில் சாக்பீஸ் தொடாமல் லேப்டாப் சகிதமாக கற்றுத்தரும் கல்விமுறை, செய்முறை பயிற்சி, ஆய்வகப்பயிற்சி, தொழில்மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி மேற்கொள்ளுதல், தொழிற்சாலைகளில் பணிபுரியும் முதன்மை நிர்வாகிகளை அழைத்து கருத்தரங்கு நடத்துதல், வர்த்தக விசாரணை மேற்கொள்ளும் விதம் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் குறித்து விவரித்தன.ர்
மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப்களையும், வயர்ப்ரி இன்டர்நெட் வசதியையும் சில கல்லூரிகள் இலவசமாக வழங்குகின்றன. சில கல்லூரிகள், இன்டர்நெட் இணைப்புகளுக்கு 5 முதல் 10 டெர்மினல் பாயின்ட்டுகளை அதிகப்படுத்தி கொடுத்துள்ளன. பெரும்பாலான கல்லூரிகளில் படிப்பு முடித்தவுடன், வேலைவாய்ப்பு நூறு சதவீதம் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 50 லட்ச ரூபாய் வரை ஆண்டுக்கு சம்பாதிக்கலாம் என்று கல்லூரி சேர்க்கையின் போதே உத்தரவாதம் அளிக்கின்றனர்.
வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள். அதன் கிளைகள் சில கல்லூரிகளின் வளாகத்திலேயே செயல்படுகின்றன. முதலாம் ஆண்டு படிக்கும் போதே, மாணவர்களின் திறமைக்கு தகுந்தாற்போல் பன்னாட்டு நிறுவன வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இரண்டாம் ஆண்டு முடித்தவுடன் பணிக்கான உத்தரவு கையில் வழங்கப்படுகிறது.
மாணவ மாணவியருக்கு ஏற்படும் சந்தேகங்களை நேரடியாக கூறியதோடு, எல்.சி.டி. டிஸ்ப்ளே மூலம் கல்லூரிகள் விளக்கின. மேலும், கல்லூரிகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து வீடியோ மூலம் விளக்கப்பட்டது; மாணவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது.


எம்.பி.ஏ., படிப்பவர்களில் 92 சதவீதத்தினர் இன்ஜினியர் : ஐ.எம்.எஸ். மேலாண் இயக்குனர் கம்லேஷ் சஜ்னானி பேசியதாவது: இன்று எம்.பி.ஏ., படிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்தியாவில் இப்படிப்பு படிக்கும் 92 சதவீதத்தினர் பொறியாளர்கள். சமூக, பொருளாதார மாற்றங்கள்தான் காரணம்.சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக நுகர்வோரைக் கொண்டுள்ள இந்தியாவில் புதுமையான ஐடியாக்கள் கொண்ட எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன.
எம்.பி.ஏ., படிக்க சில கல்வி நிறுவனங்களில் ஸ்காலர்ஷிப் உண்டு. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டிலும் உண்டு. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் எம்.பி.ஏ., வன நிர்வாகம், வேளாண் நிர்வாகம், சுற்றுச்சூழல் ஆகிய படிப்புகளுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
எம்.பி.ஏ., வன நிர்வாக படிப்பு(ஐ.ஐ.எப்.எம்) இந்தியாவில் 288 கல்லூரிகளில் உள்ளது. எம்.பி.ஏ., படிப்பு பற்றியும், அப்படிப்பில் உள்ள வாய்ப்புகள் பற்றியும் அறிய இன்டெர்நெட்டில் ஏராளமான தகவல்கள் உள்ளன. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சாந்தாராம்,தேசிய மனிதவள மேம்பாட்டு பிரிவின் சென்னை மைய தலைவர்:
இத்துறையில் எதிர்காலத்தில் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பதை கூற முடியாது. நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். ஆகவே வேலைக்காக மட்டும் இப்படிப்பை தேர்வு செய்வது தவறு. எம்.பி.ஏ., முடித்தபின் பணியில் சேரும் நிறுவனத்தில், உங்களுக்கு கீழே பணிபுரியும் ஊழியர்களை கையாளும் விதம் மிகவும் முக்கியம். உலகளவிலான சந்தையில் போட்டியிடுகிறோம் என்பதை நினைவில் வைத்து அதற்கேற்ப தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கு வேண்டுமானாலும் பணிபுரியதயாராக இருக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்தின் எந்த வளர்ச்சி கட்டத்தில், அந்த நிறுவனத்தில் பணிக்கு சேருகிறோம் என்பது முக்கியம். கடுமையாக உழைப்பவர்களின் முன்னேற்றம், அவர்களின் கைகளில்தான் உள்ளது. நிறுவனத்தின் கைகளில் அல்ல.


வெற்றி வேட்கை இருந்தால் வர்த்தகத்தில் சாதிக்கலாம் : பார்க் குளோபல் ஸ்கூல் ஆப் எக்செலன்ஸ் இயக்குனர் லஷ்மண் குமார் பேசியதாவது: எம்.பி.ஏ., படித்து முடித்தவர்களுக்கு இன்று ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஒரு தொழில் முனைவோர் புது விஷயங்களை கண்டுபிடிப்பவராக இருக்க வேண்டும். சாதாரண ஐடியாக்களை கூட பிசினஸ் ஆக மாற்றும் சூத்திரம் தெரிந்திருக்க வேண்டும். ஐடியாவும், பிசினசில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையும் வேண்டும்.
சென்னையில் தோசைமாவு சப்ளை செய்யும் பிசினஸ் இன்று 50 கோடி ரூபாய் வர்த்தகத்துடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு பொருளை தயாரிப்பதோடு, தேவைப்படும் அனைத்து இடங்களிலும் தேவைப்படும் நேரங்களில் அதை கிடைக்குமாறு செய்வது முக்கியம்.
ஸ்ரீனிவாஸ் கோவிந்தராஜன், டீன், பிராக்சிஸ் பிசினஸ் ஸ்கூல், கோல்கட்டா: பல நிறுவனங்கள் இன்று இன்ஜினியரிங் படிப்பு பின்னணியுள்ள எம்.பி.ஏ., மாணவர்களை தேடுகின்றன. குறிப்பாக, சப்ளை செயின் மேனேஜ்மென்டில் சிறந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இத்துறையில் அக்கவுன்ட்ஸ் மற்றும் சிறிது கணித அறிவு இருப்பது நல்லது. இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் துறையில் பணிபுரிய கணித அறிவு முக்கியம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 85 சதவீதத்தினர் மனித வள மேம்பாடு, ஐ.டி., உள்ளிட்ட சேவை துறைகளில் சேர்ந்துள்ளனர். நுகர்வோரின் தேவையை புரிந்து கொள்ளுதல், அதற்கேற்ப வடிவமைத்தல், அதை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்த்தல் ஆகிய மூன்றும் இத்துறையில் முக்கியம். எம்.பி.ஏ., படிப்பில் 70 சதவீதம், வகுப்பறையின் வெளியில்தான் நடக்கிறது.


வழிகாட்டுவோராக மட்டும் இருங்கள், பெற்றோர் : ஐ.ஐ.எம்.,இந்தூர் இயக்குனர் ரவிச்சந்திரன் பேசியதாவது: படிப்பில் முதலில் தேர்வு செய்யும் பிரிவு முக்கியம். அப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனம் சிறந்ததாக இருப்பது அதை விட முக்கியம். இன்று இன்சூரன்ஸ் போன்ற சர்வீஸ் துறைக்கு மவுசு அதிகம். இது மாறிக் கொண்டே இருக்கும். எந்த துறை முக்கியம் என கூற முடியாது. நூறில் 80 பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் படிப்பை தாங்கள்தான் முடிவு செய்கின்றனர். பிள்ளைகளுக்கு எது வருமோ அதை படிக்க வைக்க வேண்டும். படிப்பு தேர்வு செய்யும் பொறுப்பை அவர்களிடம் விட்டு விட வேண்டும். பெற்றோர் வழிகாட்டுபவர்களாக மட்டுமே இருக்க வேண்டும். விற்பனை, சந்தைப்படுத்துதல் போன்ற பணிகளில் கூச்ச சுபாவம் உள்ளவர்களை படிக்க வைப்பது பலன் தராது. எங்கு நம் திறமையை மேம்படுத்த அதிக வாய்ப்புள்ளதோ அங்கு படிக்க வைக்கலாம்.


கேள்வியால் துளைத்தெடுத்த மாணவர்கள் : எம்.பி.ஏ., கல்வி கண்காட்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர், நிர்வாகவியல் நிபுணர்களை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
"தினமலர்' நாளிதழ் சார்பில் கோவையில் நேற்று நடந்த எம்.பி.ஏ., கல்வி கண்காட்சியில், மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிப்பவர்கள்; பல்வேறு நிறுவனங்களில் எம்.பி.ஏ., படிப்பவர்கள். உயர்கல்வியின் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொள்ள, சில பெற்றோரும் வந்திருந்தனர்.
எம்.பி.ஏ., படிப்பு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இப்படிப்புக்கான எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து நிர்வாகவியல் நிபுணர்கள் அளித்த விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. ஒவ்வொரு நிபுணர் பேசி முடித்த பின்னும் மாணவ, மாணவியர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர் சிலரும் கேள்விகள் எழுப்பி, நிபுணர்களை திணறடித்தனர். நிகழ்ச்சி முடிந்த பின்னும் நிபுணர்களை மாணவர்கள் சுற்றி வளைத்து சந்தேகங்கள் கேட்டனர்.
கருத்தரங்கு முடிந்தபின் அனைவரும் எம்.பி.ஏ., கல்வி நிறுவன அரங்குகளை மொய்த்துத் தள்ளினர். தங்கள் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்.பி.ஏ., படிப்புகள், உள்கட்டமைப்பு வசதிகள், வளாக நேர்காணல் விபரங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அரங்குகளில் விளக்கப்பட்டன.
கண்காட்சிக்கு வந்திருந்த அனைவருக்கும், "தினமலர்' சார்பில் வழங்கப்பட்ட இலவச புத்தகத்தில், இந்தியாவில் எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்களின் முகவரி, விண்ணப்பிப்பது எப்போது, இப் படிப்புக்கான வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்கள் அளிக்கப்பட்டிருந்தன.

* 5.பள்ளி ஆண்டு விழா

கோவை: சுந்தராபுரம், காந்தி நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு நர்சரி, பிரைமரி பள்ளி ஆண்டு விழா, செங்கப் பக்கோனார் திருமண மண்டபத்தில் நடந்தது. குறிச்சி நகராட்சி தலைவர் பிரபாகரன், குறிச்சி நகராட்சி 20வது வார்டு கவுன்சிலர் பெருமாள்சாமி தலைமை வகித்தனர். விழாவில், குழந்தைகளின் மாறுவேடப்போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியில் நடந்த விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் வினாயகசுந்தரம், ஆசிரியர், பெற்றோர் பங்கேற்றனர்.
கே.ஜி., பள்ளி: பச்சாபாளையம், கே.ஜி., பப்ளிக்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் கனிமொழி தலைமை வகித்தார். முதல்வர் அம்பிகா ஆண்டறிக்கை வாசித்தார். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஒன்றிய கவுன்சிலர் அமுதஜோதி, பள்ளி செயலாளர் அகிலாண்டீஸ்வரி ஆகியோர் பரிசு வழங்கினர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது. பள்ளி மாணவர் தலைவர் விஷ்ணுபிரசாத் நன்றி கூறினார்.

* 6.அடுத்த போராட்டம் சென்னையில்! 'கள்' இயக்கம் நாளை ஆலோசனை

சோமனூர் : "கள்' இறக்க அனுமதி கோரி, அடுத்த கட்டமாக சென்னையில் போராட்டம் நடத்த "கள் இயக்கம்' தீர்மானித்துள்ளது. ஈரோட்டில் நாளை நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், இது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சண்முகம் கூறியதாவது:


"கள்' இறக்க அனுமதி கோரி, மாநிலம் முழுவதும் விவசாயிகள், மரம் ஏறும் தொழிலாளர்கள், மண் பாண்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக, சென்னையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் அல்லது உண்ணாவிரதம் என ஏதாவது ஒரு போராட்டம் நடத்தப்படும்.


சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும்போது, அங்கு சென்று அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க் களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து போராட்டத்துக்கு ஆதரவு திரட்டப்படும். இந்த போராட்டம் குறித்து "கள்' இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம், நாளை (9ம்தேதி) காலை 10.00 மணிக்கு, ஈரோட்டிலுள்ள ஆக்ஸ்போர்டு ஓட்டலில் நடக்கிறது.


விவசாயிகள், மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர். சென்னையில் நடத்தவுள்ள போராட்டம் குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும். இவ்வாறு, சண்முகம் தெரிவித்தார்.

* 7.சாத்தியமா, குறைந்த நிதியில் கான்கிரீட் வீடு? : குடிசைவாசிகளிடம் போதிய ஆர்வமில்லை

அன்னூர் : தமிழக அரசு சார்பில், குடிசை வீடுகளுக்கு பதில் இலவசமாக 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற, கோவையில் குடிசை பகுதிகளில் வசிப்போரிடம் போதிய ஆர்வமில்லை என கூறப்படுகிறது.


குடிசையில் வசிப்போருக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை தமிழக அரசு, கடந்த மாதம் அறிவித்தது. இத்திட்டத்தில், குடிசையில் வசிப்பவர்களுக்கு 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படவுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஆண்டு மூன்று லட்சம் வீடுகள் கட்ட 1,800 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் குறித்து பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படுகிறது.


ஒரே ஆண்டில் 1,800 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அரசு அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள் ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் கோவை புறநகர் மாவட்டத்தில் இத்திட்டத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை.இது குறித்து, குடிசையில் வசிப்போர் கூறியதாவது:


தற்போது, மத்திய அரசின் "இந்திரா ஆவாஸ் யோஜனா' என்னும் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடு கட்டித் தரப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு கட்ட 55 ஆயிரம் ரூபாயும், கழிப்பிடம் கட்ட 2,200 ரூபாயும் என 57,200 ரூபாய் தரப்படுகிறது. பயனாளிகள் அரசு வழங்கும் தொகையுடன் சொந்த பணத்தை சேர்த்து, சொந்தமாகவோ அல்லது அரசின் மூலமோ வீடு கட்டிக் கொள்ளலாம்.


தற்போதுள்ள, ஐ.ஏ.ஒய்., (இந்திரா ஆவாஸ் யோஜனா) திட்டத்தில் வீட்டை கூடுதல் வசதியுடன் கட்டிக் கொள்ள, வங்கியில் ஊராட்சி மூலம் 20 ஆயிரம் ரூபாய் கடன் குறைந்த வட்டியில் பெற்றுத்தரப்படுகிறது. அத்தொகையை 60 மாத தவணையில் திருப்பிச் செலுத்தலாம். தமிழக அரசின் புதிய திட்டத்தில் வங்கி கடன் வசதி இல்லை.


ஏற்கனவே, ஐ.ஏ.ஒய்., திட்டம் உள்ளதால் அதை விட, வேறு சிறப்பு அம்சங்கள் ஏதும் இல்லை. மேலும், 60 ஆயிரம் ரூபாயில் தரமான வீடு கட்டுவது மிகவும் சிரமம். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கினால்தான் வீடு தரமாக இருக்கும். இவ்வாறு, குடிசை வாழ் மக்கள் தெரிவித்தனர்.


ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: மத்திய அரசின் ஐ.ஏ.ஒய்., திட்டத்தில் ஏற்கனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆண்டுக்கு 20 முதல் 40 இலவச வீடுகள் கட்டித்தரப்படுகின் றன. அரசு நிர்ணயிக்கும் இலக்கு அளவுக்கு வீடு கட்ட மக்கள் முன்வருவதில்லை. ஊராட்சி தலைவர்கள் பயனாளிகளை தேடிப்பிடித்து வீடு கட்டிக்கொள்ளும்படி வற்புறுத்த வேண்டி உள்ளது. புதிய திட்டத்தில், பயனாளிகள் பெயர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியலில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தான் சாதகமானவிஷயம்.


தொழில் வளர்ச்சியுள்ள கோவை மாவட்டத்தில் குடிசை வீடுகளை தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது. அன்னூர் ஒன்றியத்தில் குன்னத்தூர் ஊராட்சியில் ஒரு குடிசை கூட இல்லை. பச்சாபாளையம், வடவள்ளி ஊராட்சிகளில் சில குடிசைகள் இருந்தும் அரசு அறிவித்த விதிமுறைப்படி இல்லாததால் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.


பல்வேறு காரணங்களால் வடக்கலூர், அல்லப்பாளையம், கரியாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளிலும் முதல் கட்டத்தில் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. இதனால், 21 ஊராட்சிகளில் 15 ஊராட்சிகளில் மட்டும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். இத்திட்டம் குறித்து விளக்கமாக கூறியும், மக்கள் ஆர்வமாக முன் வரவில்லை.


இத்திட்டத்தில் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு அளிக்கும் தொகையை குறைந்தபட்சம் ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இவ்வாறு, ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.


புதியதிட்டத்தில் வீடுகளை அரசேகட்டித்தருமா? பயனாளிகள் கட்டிக்கொள்ள வேண்டுமா? வீட்டின் அளவு என்ன? மாடல் எப்படி? வங்கி கடன் கிடைக்குமா?, என்கிற கேள்விகளுக்கு அதிகாரிகளிடம் சரிவர பதில் இல்லை. வீட்டுக்கான தொகையை அதிகரித்து, ஓட்டு வீடுகள் மற்றும் பழைய தொகுப்பு வீடுகளில் குடியிருப்போரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என்று அரசு அறிவிக்குமா, என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* 8.குடிநீரும், தாய்ப்பாலும் கூட விஷமாகும் காலம் நெருங்கிவிட்டது : இயற்கை வேளாண் விஞ்ஞானி ஆதங்கம்

சோமனூர் : குடிநீரும், தாய்ப்பாலும் கூட விஷமாகும் காலம் நெருங்கி விட்டது,'' என, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆதங்கம் தெரிவித்தார்.சோமனூரில் ரசாயன கலப்பற்ற, இயற்கை விவசாய விளைபொருள் விற்பனை மையம் திறப்பு விழா நடந்தது. சோமனூர் மனவளக்கலை ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.


தமிழ் இலக்கியப் பேரவை நிர்வாகிகள் வேலுசாமி, ரத்தினசபாபதி முன்னிலை வகித்தனர். விற்பனை மையத்தை திறந்து வைத்து, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: செயற்கை உரம் என்ற விஷத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் போராட்டத்துக்கு ஒரு கோடி பேரை திரட்ட உள்ளோம். பூச்சி மருந்து மற்றும் உர கம்பெனிகள் லாப நோக்குடன் விற்பனை செய்யும் மருந்துகளை பயன்படுத்தும் விவசாயிகள், தங்களது விளைநிலம் மற்றும் நுகர்வோரை பாதிப்படைய செய்கின்றனர்.


இது, நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். வெளிநாட்டு கம்பெனிகள் ஆண்டாண்டு காலமாக திட்டமிட்டு நமது நாட்டை பாழாக்கும் முயற்சிக்கு துணை போகக்கூடாது. விவசாயத்தை கைவிடுவது, தேசபக்தியற்ற செயல். மொத்தமுள்ள பத்து வகையான புற்று நோய்களில், ஆறு வகை நோய்கள், ரசாயன மருந்துகளால் வருகிறது. ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் பூச்சி மருந்து நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.


குடிநீரும், தாய்ப்பாலும் கூட விஷமாகும் காலம் நெருங்கி விட்டது. இது குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டம், ஆண்டாண்டு காலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில், விவசாயத்துறை அதிகாரிகள், பயிற்சி பெற்று பணியாற்றுகின்றனர். விவசாய விளைபொருளில் 10ல் 8 ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்டுள்ளது; இதை யாரும் அறியாமல் இல்லை.


ஆனால், இதைத் தடுத்து பாதுகாக்க வேண்டிய துறை, பயிற்சி அளவில் மட்டுமே நிற்கிறது. இயற்கையான விவசாயம்தான் சிறந்தது. இதற்கு ஆட்கள் அதிகம் தேவையில்லை; உரம் வேண்டாம்; செலவு குறைவு. அதோடு நோயற்ற வாழ்வும் வாழ முடியும். இவ்வாறு, நம்மாழ்வார் பேசினார். திறப்பு விழாவில், இயற்கை ஆர்வலர்கள், இயற்கை விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

* 9.இந்தியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் : அண்ணா பல்கலை துணைவேந்தர் பேச்சு

கோவை : இந்தியாவில் ஒவ்வொரு பொருளுக்கும் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. விவசாய நிலப்பரப்பு குறைந்து, கட்டடங்கள் பெருகி வருகின்றன. அடுத்த 30 ஆண்டுகளில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும்,'' என, கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் (பொறுப்பு) கண்ணதாசன் பேசினார். கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் குறித்த தேசிய கருத்தரங்கு, கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது.


கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர்(பொறுப்பு) கண்ணதாசன் பேசியதாவது: இந்தியாவில் 60 சதவீதம்பேர் 20 - 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள், எந்த துறையிலும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள். சீனாவில் 60 சதவீதம் பேர் 50 வயதுடையவர்கள்; சாதிக்க நினைத்தாலும் நிறைவேறுமா, என்ற ஏக்கத்திலேயே பல முயற்சிகளை கைவிட்டுள்ளனர்.


உழைப்பதற்கு இந்தியர்கள் தயாராக இருப்பதால், உலகம் முழுவதும் இந்தியர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது; உலக அளவில், இந்திய இளைஞர்களின் தேவை அதிகரித்துள்ளது.


தற்போது கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் ஆகியவை முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இதை, பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளதால், சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் சிறந்த முறையில் செயல்படுகின்றன.


உதாரணமாக, சிங்கப்பூரில் உள்ள "சப் வேயில்' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. அவ்வழியாக செல்பவர்கள், வழக்கத்துக்கு மாறான செயல்களில் ஈடுபட்டால், அடுத்த பத்தாவது நிமிடத்தில் குற்றவாளியை பிடிக்கின்றனர்.


சிங்கப்பூரில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் "கோடிங் கார்டு' உள்ளது. ஒருவர் முகத்தை போட்டோ எடுத்து, கம்ப்யூட்டரில் "சர்ச்' செய்தால், அந்நபரை பற்றிய அனைத்து தகவல்களும் அடுத்த சில நிமிடங்களில் கிடைத்துவிடும். இப்பணியில் சில போலீசார் மட்டுமே ஈடுபடுகின்றனர். மற்ற அனைத்து பணிகளும் ஆட்டோமேஷன் தொழில் நுட்பத்தில் செயல்படுகின்றன. இந்தியாவில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு நிதி உதவி செய்வது குறைந்துள்ளது.


ஐ.ஐ.டி., மற்றும் ஐ.சி.எஸ்., துறைகளில் ஆராய்ச்சி படிப்பு படிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பொருளுக்கும் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. விவசாய நிலப்பரப்பு குறைந்து, கட்டடங்கள் பெருகி வருகின்றன. இதனால், அடுத்த 30 ஆண்டுகளில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும். இதை தவிர்க்கவும், உணவு உற்பத்தியை பெருக்கவும், புதிய பயிர் ரகங்களை கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சிகள் அவசியம். இவ்வாறு, கண்ணதாசன் பேசினார்.


முன்னதாக கருத்தரங்குக்கு, அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் அறிவியல் துறைத்தலைவர் லட்சுமிபிரபா, பேராசிரியர் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கில் பல மாநிலங்களிலிருந்து ஏராளமான ஆராய்ச்சி மாணவர்கள் கட்டுரைகளை சமர்பித்தனர்.

* 10.நீங்கியது தடை; நிரம்புகின்றன குளங்கள் வாய்க்கால் திறப்பால் பாயுது தண்ணீர்

சாமளாபுரம் : வாய்க்கால் திறக்கப்பட்டதால் சாமளாபுரம் மற்றும் பள்ளபாளையம் குளங்கள் நிரம்பி வருகின்றன.சாமளாபுரம் குளத்தின் மீது பாலம் கட்டும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன் துவங்கியது. செந்தேவிபாளையம் அணைக்கட்டிலிருந்து வரும் ராஜவாய்க்கால் தண்ணீர் இந்த குளத்துக்கும், இது நிரம்பிய பின் அடுத்துள்ள பள்ளபாளையம் குளத்துக்கும் செல்கிறது.


சில மாதங்களுக்கு முன் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால், குளத்துக்கு தண்ணீர் வந்தது. குளத்துக்கு வரும் ராஜவாய்க்கால் மீது குறுகிய பாலம் இருந்தது. சோமனூர் - திருப்பூர் ரோட்டில் இந்த பாலம் அமைந்திருந்தது. மிக குறுகலான பாலம் என்பதால், வாகன போக்குவரத்துக்கு பெரும் சிரமமாக இருந்தது.இதையடுத்து, பாலத்தை அகலப்படுத்தி, புதிதாக அமைக்க 1.38 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டது. வாய்க்கால் மீது பாலம் கட்டும் பணிக்காக, பாதை மூடப்பட்டது.


மேலும், இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் அதே பகுதியில் மாற்றுப்பாதையும் அமைக்கப்பட்டது. பாலம் கட்டுமானப் பணிகள் துவங்கிய போது, மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, தண்ணீர் வரும் வாய்க்கால் தடுக்கப்பட்டது. இதனால், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சாமளாபுரம் குளத்தில் தண்ணீர் அளவு குறைந்து போனது.


மேலும், தண்ணீர் வராமல் பள்ளபாளையம் குளமும் முற்றிலும் வறண்டு போய் காட்சியளித்தது. இந்நிலையில், பாலத்தின் கீழ்ப்பகுதியில் கட்டுமானப் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு, தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், குளத்துக்கு தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இந்நிலை தொடர்ந்தால், சாமளாபுரம் குளம் நிரம்பி, அடுத்துள்ள பள்ளபாளையம் குளமும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொது

* 1.பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் ஊராட்சி பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில அமைப்பாளர் பாலு தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர்கள் சக்தி, கணேஷ், நடராஜ் முன்னிலை வகித்தனர். அரசு அறிவித்துள்ள ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை படி சம்பளத்தை உயர்த்தியும், நிலுவை தொகையையும் வழங்க வேண்டும்.


அனைத்து மாவட்டத்திலும் இம்முறை அமல்படுத்தப்பட்டாலும் கோவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாதது கண்டிக்கத்தக்கது. குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் மற்ற மாவட்டத்தில் வழங்கும் சம்பள விகிதத்தை கோவையிலும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Top
* 2.மாரியம்மன் கோவில் விழா பக்தர்கள் பறவை காவடி பரவசம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாரியம்மன் கோவிலில் பிப்., 13ம் தேதி பண்டிகை சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. ஒரு வாரத்திற்கு தினமும் இரவு, பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பகுதிவாரியாக பூவோடு எடுக்கின்றனர்.


நேற்று முன்தினம் இரவு 40 அடி நீளமுள்ள அலகுவேல் குத்தி ஊர்வலம் வந்து, பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரியார் காலனி, திருநீலகண்டர்வீதி, பத்திரகாளியம்மன் கோவில் வீதி, ஜோதிநகர், சீனிவாச புரம், கண்ணப்பன் நகர், குமரன் நகர் மற்றும் மார்க்கெட் ரோடு உட்பட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேற்று முன்தினம் "பூவோடு' எடுத்து அம்மனை வழிபட்டனர்.


27க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் உடலில் அலகுவேல்களை குத்திக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.40 அடி நீளமுள்ள அலகுவேல் குத்தியவாறு ஐந்து பக்தர்களும், 10 முதல் 30 அடி வரை நீளமுள்ள அலகுவேல் மற்றும் காவடி தூக்கிக் கொண்டு 10 பக்தர்களும், வாய்வழியாக 6 பெண்களும் அலகு குத்தியிருந்தனர்.


முதுகில் பட்டாக்கத்திகளை வரிசையாக குத்திக் கொண்டும், பறவை காவடி முதுகில் குத்தப்பட்ட அலகுவேலுடன் ஒரே கொக்கியில் அந்தரத்தில் தொங்கியபடியும் மிகவும் வித்தியாசமாக பக்தர்கள் தங்களை வருத்தி அலகுவேல் குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 192க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.


அலகு குத்திய பக்தர்கள், மார்க்கெட் ரோட்டில் துவங்கி, வெங்கட்ரமணன் வீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்தனர். பின், அங்கிருந்து கோவை ரோடு வழியாக கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாட்டினை அழகு மாரியம்மன் சேவா அணி மற்றும் இந்து, முஸ்லிம் நண்பர்கள் அணியினர் இணைந்து செய்தனர்.

* 3.ஆனைமலையில் வளர்ச்சிப்பணிஉதவி இயக்குநர் ஆய்வு

பொள்ளாச்சி:ஆனைமலையில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் பார்வையிட்டார். ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகரில் நபார்டு திட்டத்தின் கீழ் 15.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார்ரோடும், துவக்கப்பள்ளியில் எம்.எல்.ஏ., பொது நிதியில் இருந்து நான்கு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிட வளாகமும் கட்டும் பணி நடக்கிறது.


பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜாய் கிறிஸ்டி நேற்று முன்தினம் இந்த வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். பேரூராட்சி தலைவர் அசோக் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் ஜாபர் அலி மற்றும் செயல் அலுவலர் செல்வராஜ் உட்பட பலர் உடனிருந்தனர்.துவக்கப்பள்ளியில் கட்டுமானப்பணியை பார்வையிட்ட உதவி இயக்குநர் ஜாய் கிறிஸ்டி, "கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பேரூராட்சிகளில் நடக்கும் வளர்ச்சிப் பணிகளை நேரிடையாக சென்று பார்வையிட்டு வருகிறோம். இங்கு நடந்து வரும் பணிகள் சிறப்பாக உள்ளன; ஏப்., முதல் வாரத்திற்குள் பணியை முடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.


தொடர்ந்து, பேரூராட்சி சார்பில் செயல்படுத்த படும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தில், சாக்கடை கழிவு நீர் சுத்திரிக்கப்பட்டு, மீண்டும் கிடைக்கும் தண்ணீர் ஆற்றில் விடப்படும் முறைகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.

* 4.மகளிர் தின சிறப்பு தள்ளுபடி

பொள்ளாச்சி:மகளிர் தினத்தையொட்டி, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மூன்று நாட்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப் பட்டுள்ளது.பொள்ளாச்சி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: கோ-ஆப் டெக்சில், கோடை சீசன் காட்டன் ரக ஆடைகளின் கண்காட்சி நடந்து வருகிறது.


உலக மகளிர் தினத்தையொட்டி கைத்தறி ஆடைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 7,8 மற்றும் 9 ஆகிய 3 நாட்கள் மட்டுமே நடக்கிறது சிறப்பு தள்ளுபடியாக, ஐந்து சதவீதம் அறிவிக்கப் பட்டுள்ளது. கைத்தறி ஆடைகளுக்கு 25 சதவீத தள்ளுபடி மூன்று நாட்களுக்கு வழங்கப்படும். பவர்லூம் ஆடைகளுக்கு தள்ளுபடி பொருந்தாது என்றார்.

* 5.வியாபாரிகள் சங்க துவக்க விழா

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்கம் துவக்க விழா கிணத்துக்கடவில் நடந்தது. பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன் சங்கத்தை துவக்கி வைத்தார். சங்கத்தின் தலைவர் பஞ்சலிங்கம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சின்னச்சாமி முன்னிலை வகித்தார். செயலாளர் தமிழ்பித்தனர் வரவேற்றார்.


அம்பேத்கர் பல்கலை கழக செனட் உறுப்பினர் அதிபதி சங்க உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கினார். பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை செயலாளர் கண்ணன், பொள்ளாச்சி வியாபாரிகள் சங்க செயலாளர் சேதுபதி, பொள்ளாச்சி நிலக்கடலை வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகமாணிக்கம், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர். நாகராஜ் நன்றி கூறினார்.

* 6.பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் சின்னாம்பாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.


தெற்கு ஒன்றிய தலைவர் தனலட்சுமி முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி வேதியியல் துறை மற்றும் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் நடந்தமுகாமில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், பேப்பர் பை, சணல் பொருட்களின் பயன்பாடு ஆகிய வை குறித்து விளக்கப்பட்டது. கல்லூரி என்.எஸ். எஸ்., திட்ட அலுவலர்கள், வேதியியல் துறை தலைவர் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

* 7.லாரி வாடகை உயர்வுக்கு ஆதரவு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி லாரி உரிமையாளர்களின் வாடகை உயர்வுக்கு புக்கிங் எஜன்டுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அறிவிக்கப்பட்டுள்ள லாரி ஸ்டிரைக்கில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.


இது குறித்து நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்திடம் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.இந்நிலையில், பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள லாரி வாடகை உயர்வுக்கு லாரி புக்கிங் ஏஜன்ட்கள் சங்கம் ஆதரவளித்துள்ளது.


இது குறித்த ஆலோசனை கூட்டம், தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்தது. டீசல் விலை உயர்வு ஏற்க உயர்த்தப் பட்டுள்ள 10 சதவீத லாரி வாடகை உயர்வை ஏற்கப்படுகிறது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* 8.ஊதிய உயர்வு கோரி எல்.ஐ.சி., ஊழியர்கள் தர்ணா

கோவை : ஊதிய உயர்வு கோரி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் கோவை, திருச்சிரோடு எல்.ஐ.சி., அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தை, கோவை எம்.பி., நடராஜன் துவக்கி வைத்தார். இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஊழியர் சங்கத் தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.


இணைச் செயலாளர் உமாமகேஸ்வரி, இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் கிரிஜா உள்பட பலர் பங்கேற்றனர்.கோவை, இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ் பேசியதாவது: நடப்பு நிதியாண்டில் எல்.ஐ.சி.,யின் சொத்து மதிப்பு 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மார்ச் இறுதிக்கணக்கு முடிவில், 12 லட்சம் கோடியாக சொத்து மதிப்பு உயரும்.


எல்.ஐ.சி., நிறுவனம் லாப நோக்கில் செயல்பட ஊழியர்களில் உழைப்பு முக்கிய காரணம்; ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனம் மெத்தன போக்கை கடைபிடிக்கிறது. இதனால், தொழிலாளர் அமைதியிழந்து போராட் டத்தில் ஈடுபட நிர்வாகமும் மற்றும் மத்திய அரசுமே காரணம்.


தொடர்ந்து மவுன நிலை நீடித்தால் போராட்டம் தீவிரமடையும். இவ்வாறு, சுரேஷ் பேசினார். போராட்டத்தில், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

* 9.மரம் வளர்ப்போர் கருத்தாய்வு கூட்டம்

கோவை : கருத்தாய்வு கூட்டம், வன விரிவாக்க மையம், மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம் சார்பில் கோவை, பாரதிபார்க் ரோட்டிலுள்ள துணை வன பாதுகாவலர் அலுவலக வளாகத்தில்நடந்தது.


வனமரபியல் கோட்டவன பாதுகாவலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து பேசுகையில், ""காகித கூழ் மரங்களுக்கு ஆண்டு தோறும் அரசு விலை நிர்ணயிக்கிறது. அரசுக்கு சொந்தமான நிலத்தில்விளையும் மரங்களை தொழிற்சாலைகள், தங்கள் சொந்த செலவில் அறுத்து எடுத்து செல்கின்றன.


ஆனால், தனியார் நிலத்தில் விளையும் மரங்களின் கொள்முதல் நேர்மாறாக உள்ளது. விவசாயிகளே வெட்டி எடுத்து, போக்குவரத்து செலவுகளை ஏற்று, தொழிற்சாலைகளுக்கு அனுப்ப வேண்டியுள்ளது,'' என்றார். கூட்டத்தில், விதை கிடங்கு சரகர் புஷ்பாகரன், வன விரிவாக்க அலுவலர் துரைசாமி, மாவட்ட மூலிகை மரம் வளர்ப்போர் சங்க தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* 10.மஞ்சள் அறுவடைக்கு பின் செய்ய வேண்டியது என்ன? : விவசாயிகளுக்கு அறிவுரை

கோவை : புது மஞ்சள் அறுவடைக்குப்பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தமிழ்நாடு விளைபொருள் விற்பனை வாரியம் விவசாயிகளுக்கு சில தகவல்களை தெரிவித்துள்ளது.விற்பனை வாரியத்தின் கோவை மையம் அறிக்கை: மஞ்சள் பயிரின் தண்டை 10 நாட்களுக்கு முன் தரையின் மேல் மட்டத்தில் 10 செ.மீ.,விட்டு அறுத்து விட வேண்டும்.


இவ்வாறு செய்தால், மஞ்சளின் ஈரப்பதம் குறைவதுடன் விரைவில் முதிர்ச்சி அடையும். "மஞ்சள் கொத்து' கருவியை பயன்படுத்தி, மஞ்சளை கொத்தி எடுக்க வேண்டும். ஈர மஞ்சளில் இருந்து ஐந்தில் ஒரு பகுதி பதப்படுத்திய மஞ்சள் கிடைக்கும். பச்சை மஞ்சளை சுத்தமான நீரில் வேக வைக்க வேண்டும். மஞ்சள் வெந்துவிட்டதை அதன் வாசனையில் இருந்து அறியலாம்.


வாசனை வந்ததும் வேகவைப்பதை நிறுத்தி, விரலால் மஞ்சளை அறுத்து வெந்துள்ளதை உறுதி செய்யவேண்டும்; அதிகமாக வேக வைக்க கூடாது; நிறம் மக்கி விடும். சரியாக வேக வைக்காவிட்டால், காய வைக்கும் போது உடைந்து சிறு சிறு துண்டுகளாகிவிடும். வேக வைத்த மஞ்சளை வெயிலில் 7 செ.மீ., உயரத்துக்கு பரப்பி 15 நாட்கள் வரை காய வைக்க வேண்டும். காய வைக்கப்பட்ட மஞ்சளில் சிறு, சிறு வேர்களும், செதில்களும் இருந்தால் அதை சுத்தப்படுத்த வேண்டும்.


மஞ்சளுக்கு மெருகேற்றுவதும், நிறமேற்றுவதும் மிகவும் முக்கியம். மெருகேற்றும் கருவி கொண்டோ அல்லது கூடைகளை பயன்படுத்தியோ மெருகேற்ற வேண்டும். நூறு கிலோ மஞ்சளை மெருகேற்ற 40 கிராம் படிகாரம் , 2 கிலோ மஞ்சள் தூள், 140 கிராம் ஆமணக்கு எண்ணெய், 30 கிராம் சோடியம் பை சல்பேட், 30 மி.லி., சோடியம் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்த்து தயாரிக்கப்பட்ட கரைசலில் நிறம் ஏற்றலாம்.


இவ்வாறு, பதப்படுத்தப்பட்ட மஞ்சளை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு சென்று, தினசரி விலை நிலவரம் அறிந்து, கூடுதல் விலைக்கு சரியான எடையில் விற்று பயன்பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* 11.விழிப்புணர்வு பிரசாரம்

பொள்ளாச்சி:சுற்றுச்சூழல் பாதிப்பு, சுற்றுச்சூழலை காப்பது குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பொள்ளாச்சி அடுத்த ரெட்டியாரூர் என்.ஜி. என்.ஜி., மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மூன்று நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.


துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தகுமாரி (அரசூர்), மல்லிகா (கம்பாலபட்டி), அமிர்தவல்லி (பூவலபருத்தி), உமாதேவி (பாரமடையூர்), தில்லைநாயகம் (அர்த்தநாரி பாளையம்), சரஸ்வதி (ரெட்டியாரூர்) மரக்கன்றுகளை நட்டனர்.சொல்லரங்கம், பேச்சு போட்டி, வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

* 12.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் விலைவாசி குறையும் : ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் உறுதி

பொள்ளாச்சி:அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதங்களில் விலைவாசியை குறைப்போம் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் உறுதி அளித்தனர். பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


நகர செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாசலம், ஜெ., பேரவை மாவட்ட தலைவர் தாமரைதுரை முன்னிலை வகித்தனர்.எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது:


தாமோதரன் ( கிணத்துக்கடவு):விலைவாசி உயர்வு தி.மு.க., அரசின் சாதனையாகும். மத்தியில் காங்., அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆறு முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டது. தி.மு.க., அரசு இலவச திட்டங்கள் என்ற பெயரில் 80 ஆயிரம் கோடி கடன் ஏற்படுத்தியுள்ளது. இதன் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது எனவே, தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.


வேலுமணி (பேரூர் ) பேசியதாவது:மக்களை பற்றி கவலைப்படாமல் விலைவாசியை ஏற்றிக் கொண்டே செல்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, கட்டுக்குள் கொண்டு வரும் என்றார். எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் முகில் சிறப்புரையாற்றினார்.


ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா மாட்டு வண்டியில் வந்தார். காய்கறி, தானியங்களை மாலையாக அணிந்து,உணவு மற்றும் அத்தியாவசிய பொருட் களை பார்க்க மட்டுமே முடியும் என்று துண்டுபிரசுரம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

* 13.சாரண - சாரணியர் பயிற்சி முகாம்

வால்பாறை:வால்பாறையில் ஆளுநர் விருதுக்கான சிறப்பு பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.ஆனைமலை மாவட்ட பாரத சாரண சாரணியர் பயிற்சி முகாம் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. ஆளுநர் விருதுக்கான இந்த முகாம் துவக்க விழாவிற்கு, முதன்மை ஆணையர் சிவசெங்குட்டுவன் தலைமை வகித்தார்.


மாவட்ட பொருளாளர் சார்லஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் ரூத்பேபி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தங்கராசா வரவேற்றார்.முகாமை துவக்கி வைத்து டேன்டீ தொகுதி மேலாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், "மாணவர்கள் நல்ல ஒழுக்கத்துடன் கல்வி கற்க இது போன்ற பயிற்சிகள் அவசியம் தேவை. மாணவர்கள் சேவை மனப்பான்மையோடு நடந்துகொள்ள வேண்டும்.


இயற்கையான சூழலில் பயிற்சிகள் நடத்தப்படுவது மாணவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்' என்றார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்தும் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



இதற்கான ஏற்பாடுகளை பயிற்றுனர் சதாசிவம், மாவட்ட பொறுப் பாளர்கள் உதயன், கென்னடி, ராஜா ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட உதவி செயலாளர் காளியப்பன் நன்றி கூறினார்.

* 14.அம்மன் திருக்கல்யாணம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே புளியம்பட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த 16ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. மார்ச் 2ம் தேதி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபட்டனர். கும்ப ஸ்தாபிதம் செய்து சக்தி அழைத்து வருதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது.


ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மார்ச் 3 ம் தேதி பட்டு சீர் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறு, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாவிளங்கு, பொங்கல் படைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து, கம்பம் மற்றும் கும்பம் கங்கையில் விடுதல், மஞ்சள் நீராடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. மார்ச் 5ம் தேதி மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.


பிரச்னைகள்

* 1.வால்பாறையில் கடும் வறட்சி வனவிலங்குகள் தவிப்பு

வால்பாறை:வால்பாறையில் நிலவி வரும் கோடை வெயிலில் உணவு கிடைக்காமல் வரையாடுகள் தவிக்கின்றன.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மலைப்பகுதியில் உலகின் அரிய வகை வனவிலங்குகளான சிங்கவால் குரங்குகள், வரையாடுகள், புலிகள் அதிக அளவில் உள்ளன.


அழிந்துவரும் வனவிலங்குகளின் ஒன்றான சிங்கவால் குரங்குகள் வால்பாறையில் புதுதோட்டம், குரங்குமுடி, அக்காலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் உள்ளன. பழவகைகளை உணவாக உட்கொள்ளும் இந்த சிங்கவால் குரங்குகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தான் அதிகமாக காணப்படுகிறது.இதே போல் அரிய வகை இனமான வரையாடுகள், ஆழியாரிலிருந்து வால்பாறை நோக்கிவரும் வழியில் 9 வது கொண்டை ஊசி வளைவு அருகே அதிக அளவில் காணப்படுகிறது.


இதே போல் அக்காமலை கிராஸ் ஹில்ஸ் பகுதிகளிலும் வரையாடுகள் அதிக அளவில் காணமுடிகிறது.வால்பாறையில் தற் போது கோடை வெயில் கொளுத்துகிறது. இதனால் வனப்பகுதிளில் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டுயானைகள் பகல் நேரத்திலேயே குடிநீரை தேடி எஸ்டேட் பகுதிகளில் உள்ள ஆறுகளுக்கு வரத்துவங்கியுள்ளது.


இதே போல் வரையாடு, சிங்கவால் குரங்கு, மான், காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வனப்பகுதியில் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றன. வால்பாறை மலைப்பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் வனப்பகுதியில் பல இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

* 2.செம்மொழி மாநாடு சிறப்பு விருந்தினர்களுக்கு அவதி உறுதி! ஊட்டிக்கு சென்றால் நெரிசலில் சிக்கி திணறணும்

மேட்டுப்பாளையம் : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு முன்னிட்டு மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோட்டை விரிவுபடுத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில், மாநாடுக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தொண்டர்கள் ஊட்டிக்கு செல்லும் போது, நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாக நேரிடும்.உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் வரும் ஜூனில் நடக்கிறது.


மாநாடு முன்னிட்டு 300 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் கோவையில் முழுவீச்சில் நடக்கின்றன. நெடுஞ்சாலைத் துறை 59.85 கோடி ரூபாயில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது. தவிர, உயர்மட்ட கோபுர விளக்குகள் 19 இடங்களில் 90 லட்சம் ரூபாயிலும், ஏழு கோடி ரூபாயில் நவீன கழிப்பிடங்கள், பூங்காக்களை அமைக்கும் பணியும் நடக்கிறது.


ரயில்வே பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க, தமிழக துணைமுதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் அடிக்கடி கோவை வந்து ஆய்வு செய்து உத்தரவிட்டு வருகின்றனர். இவ்வளவு பணிகளும், முஸ்தீபுகளும் கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை மையமாக வைத்தே நடக்கின்றன.


அதே வேளையில், புறநகர் பகுதிகளில் பல புறக்கணிக்கப்பட்டுள்ளன. மாநாடுக்கு வரும் சிறப்பு அழைப்பாளர்கள், வெளிமாவட்டத்தினர் அதிகளவில் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால், பல ஆயிரம் வாகனங்கள் கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டிலும், ஊட்டி மெயின் ரோட்டிலும் செல்லவுள்ளன. மேட்டுப்பாளையம் - ஊட்டி மெயின் ரோடு மிகவும் குறுகலாக உள்ளதால், தற்போது இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கைக்கே போதுமானதாக இல்லை.


அவ்வாறு இருக்க, மாநாடுக்கு வருவோரும் இந்த சாலையில் ஊட்டி சென்றால், நிச்சயமாக நெரிசலில் சிக்கி மிகுந்த அவதிக்கு உள்ளாக நேரிடும். இந்த ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை, கடந்த மாதம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதிரடியாக அகற்றியது. ஆனால், கடை உரிமையாளர்கள் சாக்கடை கால்வாய் கூட தெரியாத அளவுக்கு, மீண்டும் சாலையோர பகுதிகளை ஆக்கிரமித்து, கான்கிரீட் தளம் அமைத்துள்ளனர். இதனால், ஆக்கிரமிப்பை அகற்றியும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், ரோட்டின் இரு பக்கமும் தள்ளுவண்டிக்காரர்கள் ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது. காந்தி மைதானம் முன் ரோட்டிலேயே லாரிகளை நிறுத்தி காய்கறி லோடு இறக்கி, ஏற்றுவதால் தினமும் ஊட்டி மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் மேட்டுப்பாளையம் நகரில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசல் அளவு கடந்துவிட்டது.


நெரிசலில் இருந்து வாகனங்கள் மீள இரண்டு, மூன்று மணி நேரமாகிறது. செம்மொழி மாநாடு முன்னிட்டு, கோவையின் வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசு, மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டை அகலப்படுத்தி சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மேட்டுப்பாளையம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

* 3.மணியார்டர் சேவையில் 'ஏனோ தானோ' : இழப்பீடு தர ஆர்.எம்.எஸ்.,க்கு உத்தரவு

கோவை : மணியார்டர் தொகையை மிக தாமதமாக ஒப்படைத்து, சேவையில் குறைபாடு செய்த ஆர்.எம். எஸ்., நிர்வாகம், பாதிக்கப் பட்ட நபருக்கு 5,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என கோவை நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.


கோவை, ராமநாதபுரம், எஸ்.ஆர்., அய்யர் "லே - அவுட்'டில் வசிப்பவர் கோபி; தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு, டிச.,7ல், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் வசிக்கும் தனது தாயாரின் மருத்துவ செலவுக்காக 1,000 ரூபாயை, ரயில்வே மெயில் சர்வீஸ் மூலமாக மணியார்டர் அனுப்பினார். மறுநாளே போய்ச் சேர வேண்டிய மணியார்டர் தொகை, டிச.,13 வரை போய்ச்சேரவில்லை.


இது குறித்து கோபி, கோவை ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் விசாரித்த போது முறையான பதில் இல்லை. மாறாக, அங்கிருந்தவர்கள், "நீங்களே நேரடியாக சென்று பணத்தை கொடுத்திருக்கலாமே' என, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின், மிகவும் தாமதமாக 24 நாட்களுக்கு பின் டிச.,31ல் மணியார்டர் போய்ச் சேர்ந்தது. ஆர்.எம்.எஸ்., சேவையில் அதிருப்தியடைந்த கோபி, ஆர்.எம். எஸ்., அலுவலக கண்காணிப்பாளர் மீது கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, இழப்பீடு கோரினார்.


நீதிபதி ஸ்ரீராமுலு, உறுப்பினர் ரத்தினம் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினர். "மருத்துவச் செலவுக்காக அனுப்பிய தொகையை, மிகவும் தாமதமாக முகவரியில் சேர்த்து சேவை குறைபாட்டில் ஈடுபட்டது, மனுதாரருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியது ஆகியவற்றுக்காக 5,000 ரூபாய் இழப்பீடு மற்றும் வழக்கு செலவுத் தொகையாக 1,000 ரூபாயை ஒரு மாதத் துக்குள் ஆர்.எம்.எஸ்., நிர்வாகம் வழங்க வேண்டும்' என தீர்ப்பளித்தனர்.

* 4.குண்டுவெடிப்பு கைதிகள் இருவருக்கு 'பரோல்'

கோவை : குடும்பத்தினரை சந்திக்க, குண்டு வெடிப்பு கைதிகள் இருவர், 10 மணி நேர பரோலில் சென்றனர்.கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் முகமது ரபீக், ஹக்கீம். இவர்கள், கோவை மத்திய சிறையில் உள்ளனர். தங்களது குடும்பத்தினரை சந்திக்கபரோல்' கோரி சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தனர்.


இருவருக்கும் 10 மணி நேர பரோல் வழங்கி சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி, நேற்று காலை 8.00 மணிக்கு சிறையில் இருந்து முகமது ரபீக்கை கரும்புக்கடை பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கும், ஹக்கீமை உக்கடம், கோட்டைபுதூரிலுள்ள வீட்டுக்கும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பரோல் முடிந்ததும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


சம்பவம்

* 1.சூதாட்ட கிளப்களில் ரெய்டு

கோவை : கோவை நகரில் உள்ள சூதாட்ட கிளப்களில் போலீசார் திடீர் சே �தனை நடத்தியத்தில்,சூதாடிய 93 பேர் பிடிபட்டனர்; ரூ.3.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை, ஆவராம் பாளையம் ரோட்டில் பேலஸ் கிளப் உள்ளது. இம்மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, கமிஷனர் உத்தரவின் பேரில், உதவிகமிஷனர் நகராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், கிளப் மேலாளர் ஜெயக்குமார் உட்பட 69 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், ஜி.கே.டி., நகரில் உள்ள கிரின் போர்ஸ் கிளப்பில் சூதாட்டம் நடந்து வந்தது. இங்கு நடந்த சோதனையில், சரவணக்குமார் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

* 2.பிரேதம் வாங்க மறுப்பு : ஜி.எச்.,ல் பரபரப்பு

கோவை : தீக்குளித்து பலியான ஊழியரின் பிரேதத்தை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
உக்கடம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாரூக்(38). என்.எச்.,ரோட்டில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளாக வேலை செய்து வந்தார். உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, நேற்று முன் தினம் கடை முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவரது பிரேதத்தை வாங்க மறுத்த உறவினர்கள், அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். "பாரூக் வேலை செய்த கடையின் உரிமையாளர் நேரில் வர வேண்டும்' என கோரினர். கடை உரிமையாளர் மீது, தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து, பாரூக் பிரேதத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

* 3.மதுக்கடையை மூட கோவையில் ஆர்ப்பாட்டம் கல்வீச்சில் போலீசார் காயம்; 175 பேர் கைது

கோவை : மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோவையில் நேற்று மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, டாஸ்மாக் மதுக்கடைகள் முன் நேற்று மனித நேய மக்கள் கட்சியினர்ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் உக்கடம், குனியமுத்தூர், சுந்தராபுரம் மற்றும் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவையில், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில செயலாளர் உம்மர் தலைமை வகித்து பேசுகையில், "தமிழக மக்களின் உயிரையும், அவர்களது குடும்பத்தையும் பழி வாங்கும் டாஸ்மாக் மதுக்கடையை அரசே ஏற்று நடத்துவது கண்டிக்கத்தக்கது.
மக்களின் பணத்தை பறித்து, இலவச திட்டங்கள் துவக்கி வைப்பது துரோகச் செயல். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்றார்.
தொடர்ந்து, மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பிரிவினர், போலீஸ் கட்டுப்பாட்டை மீறி, பாதுகாப்பு தடுப்புக்களை தள்ளி, டாஸ்மாக் கடையை நோக்கி சென்றனர். இவர்களை போலீசார் தடுத்தும் நிற்காமல், கோஷமிட்டபடியே டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கினர்.
கடை பூட்டப்பட்டிருந்ததால், கதவு மற்றும் பெயர் பலகை சரமாரியாக தாக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்க முயன்ற போலீசார் மீது கல் விழுந்தது. இதில், உக்கடம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமச்சந்திரன், ஆயுதப்படை பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்தனர். இவரை, அருகில் இருந்த போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
போட்டோகிராபர்கள் காயம்: மனித நேய மக்கள் கட்சியினர் கல்வீச்சில், பத்திரிக்கை போட்டோகிராபர்கள் இருவரும் காயமடைந்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டதாக 175 பேரை போலீசார் கைது செய்தனர்.

* 4.'ரிசர்வ் சைட்'டில் வீடு அதிரடியாக அகற்றம்

பெ.நா.பாளையம் : கூடலூர் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு வீடு அகற்றப்பட்டது.கூடலூர் பேரூராட்சி, 17வது வார்டில், 50 சென்ட் நிலம் "ரிசர்வ் சைட்'டாக உள்ளது. இதன் ஒரு பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப் பட்டுள்ளது. மீதி இடத்தில் 10 சென்ட் இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்தார்.


ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ள பேரூராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. கால அவகாசம் அளித்தும் இடத்தை காலி செய்யாததால், பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, "ரிசர்வ் சைட்' டில் இருந்த வீட்டை அகற்றினர்; இதன் மதிப்பு பல லட்சம் ரூபாயை தாண்டும்.


கூடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் கூறுகையில், பேரூராட்சிக்குட் பட்ட பகுதியில் உள்ள "லே - அவுட்'களில் பொதுமக்களின் உபயோகத்துக்காக ஒதுக்கப் பட்ட "ரிசர்வ் சைட்'களை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். முறையான நோட்டீஸ் கொடுத்து அகற்றும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது,'' என்றார்.

* 5.மதுக்கடை முன் மறியல் ம.ம.க.,வினர் கைது

குறிச்சி : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி, "டாஸ்மாக்' மதுக்கடைகள் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் 158 பேரை போலீசார் கைது செய்தனர்.சுந்தராபுரம் சந்திப்பிலுள்ள மதுக்கடை முன் நடந்த மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு, மனித நேய மக்கள் கட்சியின் (ம.ம.க.,) மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் பஷீர் தலைமை வகித்தார்.


"டாஸ்மாக்' மதுக்கடை நோக்கி சென்ற 71 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது, கோவை-பொள்ளாச்சி ரோட்டில் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே போன்று, குனியமுத்தூர் பஸ் ஸ்டாப் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரபீக் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

* 6.கிணத்துக்கடவில் இளநீர் ரூ.17 : கேட்டால் 'ஷாக்'; குடித்தால் 'கூல்'

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில் வெயிலுக்கு ஏற்றவகையில் இளநீர் விலையும் உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், கடும் வெயில் சூட்டெரித்து வருகிறது. வெயிலின் சூட்டினை தணிக்க, இளநீர் கடைகளும் ரோட்டில் அதிகளவில் முளைத்துள்ளது.ஆனால், கோடை வெயில் கொளுத்துவதால் அனைத்து கடைகளிலும் இளநீர் விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.


கிணத்துக்கடவு, தாமரைக்குளம், முள்ளுப்பாடி, கோவில்பாளையம் பகுதிகளில் உள்ள இளநீர் கடைகளில், ஒரு இளநீர் விலை ரூ.10க்கும், சிவப்பு இளநீர் ரூ.12க்கும் விற்பனை செய்து வந்தனர். தற்போது, ஒரு இளநீர் விலை ரூ.15க்கும், சிவப்பு இளநீர் விலை ரூ.17க்கும் விற்பனை செய்ய துவங்கிவிட்டனர்.


வெளியூர் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி இளநீர் குடித்து செல்கின்றனர். அவர்களிடம் விலையை உயர்த்தி இளநீர் விற்பனை செய்யப்படுகிறது. இதே உள்ளூர் பொதுமக்களிடமும் அதே விலைக்கு இளநீர் விற்பனை செய்வதை பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளவில்லை.


மக்களின் கவனம் தர்பூசணி மீது திரும்பியுள்ளதால், இளநீர் விற்பனை குறைய துவங்கி உள்ளது. தோப்பில் ஒரு இளர்நீர் ரூ.5க்கு எடுத்து வந்து ரூ.15க்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். எனவே, அந்தந்த ஊராட்சிகள் இளநீர் விற்பனைக்கு தனியாக வரி வசூலித்தால் தான் அநியாயமாக விலை உயர்த்தி விற்பனை தடுக்க முடியும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

* 7.மரம் கடத்திய வேன் பறிமுதல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள மரக்கடைக்கு வேனில் எடுத்து வந்த மரங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மரங்கள் வெட்டியதற்கு தேவையான ஆதாரங்கள் இல்லாததால் வேனுடன் மரத்தையும் பறிமுதல் செய்தனர். மரத்தை கொண்டு வந்த வியாபாரிகள், "தேவம் பாடிவலசு கிராமத்தில் பட்டா பூமியில் இருந்த மரங்களை விலைக்கு வாங்கி வெட்டியதாகவும், பட்டா நிலத்தில் வளர்க்கப்படும் 36 வகை மரங்களை வெட்டுவதற்கும், வெளியிடங்களுக்கு எடுத்து செல்வதற்கும் அனுமதி தேவை யில்லை என்பதற்கான அரசு உத்தரவு உள்ளது' என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாதாடினர்.


அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் நிலத்தில் வளர்க்கும் 36 வகை மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி பெறத்தேவையில்லை என்று உத்தரவு உள்ளது. ஆனால், பட்டா நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்ட தாசில்தார் அனுமதி பெற்றிருக்க வேண்டும். புறம்போக்கு நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றனர்.அனுமதியின்றி வெட்டிய மரங்களை எடுத்து வந்த வேனை, பொள்ளாச்சி வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

* 8.பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மாட்டு வண்டி பேரணி

குறிச்சி : பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, ம.தி.மு.க.,வினர் மாட்டு வண்டி பேரணி நடத்தினர். மதுக்கரை, க.க.,சாவடி சந்தைப்பேட்டை அருகே மதுக்கரை ஒன்றிய ம.தி.மு.க., சார்பில் நடந்த பேரணிக்கு, ஒன்றிய பொறுப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்.பி., கிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்து பேசியதாவது:பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. மரபணு மாற்ற விதைகளை நடைமுறைப்படுத்த மேற்கொள்ளப்படும் மறைமுக முயற்சிகளை நிறுத்தவேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை நிலை உயர "கள்' இறக்க மாநில அரசு அனுமதிக்கவேண்டும். கேரளா மற்றும் பிற இடங்களிலிருந்து மதுக்கரை பகுதியில், ரசாயன கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, கிருஷ்ணன் பேசினார்.
தொடர்ந்து பேரணி, க.க.,சாவடி கிழக்கு, எட்டிமடை, காளியாபுரம், திருமலையாம்பாளையம், பாலத்துறை, குரும்பபாளையம் வழியாக மதுக்கரை மார்க்கெட் பகுதியை அடைந்தது. பேரணியில், இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சரவணன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தெற்கு மாவட்ட செயலர் சதாசிவமூர்த்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

* 9.பாலமலையில் ஜீப் உருண்டது : 9 பேர் காயம்; விசாரணை

பெ.நா.பாளையம் : பாலமலை பள்ளத்தில் ஜீப் உருண்டு, ஒன்பது பக்தர்கள் காயமடைந்தனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பாலமலையில் அரங்கநாதர் கோவில் உள்ளது. கோவனூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து பாலமலைக்குச் செல்ல தனியார் ஜீப் இயக்கப்படுகிறது.


சம்பவத்தன்று பாலமலையில் இருந்து அடிவாரம் சென்ற ஜீப்பில் ஒன்பது பேர் பயணம் செய்தனர். ஒன்பதாவது வளைவில் வேகமாக சென்ற ஜீப் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில், ஜீப்பில் பயணம் செய்த ஒன்பது பேரும் காயத்துடன் உயிர்தப்பினர்.


அதிர்ஷ்டவசமாக ஜீப், அருகிலிருந்த 300 அடி ஆழ பெரும் பள்ளத்தில் கவிழவில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். காயமடைந்த நபர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


பொழுது போக்கு

* 1.தடகள விளையாட்டு

பொள்ளாச்சி:சர்வதேச திறனாளர்களுக்கான தடகள விளையாட்டு போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


குண்டு எறியும் போட்டியில் பொள்ளாச்சி லதாங்கி பள்ளி மாணவி மிருதுபாஷிணி முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் அஜித்ராம், தருண் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மாணவர்களை லதாங்கி பள்ளி செயலாளர் ரமேஷ் ராஜ்குமார், பள்ளி தாளாளர் சாந்திதேவி, முதல்வர் மாலினி பாராட்டினர்.

No comments:

Post a Comment