Sunday, March 7, 2010

ஈரோடு

* 1.பெருந்துறையில் விறுவிறுப்பாக நடந்த இளைஞர் காங்., தேர்தல்

பெருந்துறை: திருப்பூர் லோக்சபாவுக்கு உட்பட்ட பெருந்துறை சட்டசபை, இளைஞர் காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று துவங்கியது. பெருந்துறை சட்டசபை தொகுதியில் 4,800 இளைஞர் காங்கிரஸ் வாக்காளர் உள்ளனர். 96 கிராம கிளைகள் மற்றும் 8 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. கிராம கிளைக்கு ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், மூன்று செயலாளர் பதவி உண்டு. டவுன் பஞ்சாயத்தில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், எட்டு செயலாளர் பதவி உண்டு. பெருந்துறை தொகுதியில் மூன்று கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.முதல் கட்ட தேர்தல் நேற்று துவங்கியது. பெருந்துறை, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம் ஆகிய டவுன் பஞ்சாயத்து மற்றும் 36 கிராம கிளைகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்களர்கள் வரிசையில் நின்று அமைதியாக ஓட்டு போட்டனர். வாக்கு பதிவு காலை 8 முதல் மாலை 4 மணி வரை நடந்தது.


இரண்டாம் கட்ட தேர்தல் இன்று செங்கப்பள்ளியில் நடக்கிறது. கருமாண்டிசெல்லிபாளையம், ஊத்துக்குளி, குன்னத்தூர் ஆகிய டவுன் பஞ்சாயத்து மற்றும் 36 கிராம கிளைகளுக்கு தேர்தல் நடக்கிறது.மூன்றாம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. நல்லாம்பட்டி, பள்ளபாளையம் ஆகிய டவுன் பஞ்சாயத்து மற்றும் 24 கிராம கிளைகளுக்கு நடக்கிறது.திருப்பூர் லோக்சபா தேர்தல் அதிகாரியாக கர்னடாக மாநிலத்தை சேர்ந்த ராஜ். பி. வைஷ்ணவி உள்ளார். பெருந்துறை தொகுதி தேர்தல் அதிகாரியாக கேரளாவை சேர்ந்த பிரதீப், துணை தேர்தல் அதிகாரிகளாக ஈரோடு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் காந்தி, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் பொது செயலாளர் சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Top
* 2.பவானிசாகர் பூங்காவில் படகு சவாரி துவக்கம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் பூங்காவில் தற்போது படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அணையை புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பவானிசாகர் அணை பராமரிப்பு இல்லாமல் பார்க்கும் இடமெல்லாம் வெற்றிடமாய் காட்சியளித்தது. இது குறித்து காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன்பிறகு அணையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக துவங்கியது. தண்ணீர் இல்லாமல் காலியாக கிடந்த படகு துறையில் தண்ணீர் நிரப்பி தற்போது படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. பூங்காவினுள் இருந்த நீர் ஊற்றுகள் பழுதாகி இயங்காமல் இருந்தது. தற்போது நீரூற்றுகளை பழுது நீக்கி வானத்தை நோக்கி தண்ணீர் பீய்ச்சியடிப்பது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.


பவானிசாகர் அணை உதவி கோட்ட பொறியாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பவானிசாகர் அணை பூங்காவின் வளர்ச்சிக்காக எம்.எல்.ஏ., சுப்பிரமணியம் மற்றும் பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோரின் கடும் முயற்சியால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி மூலம் பவானிசாகர் பூங்காவில் வண்ண, வண்ண மலர்கள் மற்றும் பார்ப்பதற்கு பசுமையாய் காட்சியளிக்கும் புல்வெளிகள், குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்கள் உள்ளிட்டவை மூலம் பூங்காவை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் அறை கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. சில மாதத்தில் பவானிசாகர் பூங்கா புது பொலிவு பெற்று திகழும். இவ்வாறு அவர் கூறினார்.
Top
* 3.இளைஞர் காங்., நிர்வாகிகள்: தேர்தலில் களமிறங்கிய 401 வேட்பாளர்கள்

ஈரோடு: மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராம, டவுன் பஞ்சாயத்து வார்டுகளுக்கான இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மொத்தம் 401 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈரோடு லோக்சபா தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதி உள்ளன. சென்ற மாதம் 28ம் தேதி, குமாரபாளையம், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி சட்டசபை பகுதிக்கும், 3ம் தேதி, ஈரோடு கிழக்கு, காங்கேயம், தாராபுரத்துக்கும் வேட்பு மனு தாக்கல் நடந்தது. இதற்கான தேர்தல் நேற்று நடந்தது.


கிராம பஞ்சாயத்துகளில் தலைவர், துணைத் தலைவர், மூன்று பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நேற்று மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட காசிபாளையம் நகராட்சி ஐந்து வார்டு, சூரம்பட்டி நகராட்சி ஐந்து வார்டு, பெரியசேமூர் ஏழு வார்டு, வடமுகம் வெள்ளோடு, வில்லரசம்பாளையம், குட்டபாளையம், கதிரம்பட்டி பகுதிக்கான தேர்தல் துவங்கியது. பகுதி வாரியாக நாளை வரை மூன்று நாட்கள் தேர்தல் நடக்கிறது.


தேர்தலில் வாசன் கோஷ்டி சார்பில் மாநில தலைவருக்கு ராஜாவும், பார்லிமென்ட் தலைவர் பதவிக்கு மக்கள் ராஜனும் போட்டியிட்டனர். இளங்கோவன் கோஷ்டி சார்பில், பார்லிமென்ட் தலைவர் பதவிக்கு சுரேஷ் மற்றும் 401 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். வழக்கமாக நடக்கும் சட்டசபை, பார்லிமென்ட் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் ஓட்டு பெட்டிகள் மாநிலம் முழுவதும் வாடகைக்கு எடுக்கப்பட்டு, உறுப்பினர்கள் ஓட்டு போடுவதற்காக வைக்கப்பட்டிருந்தது. காலை 8 முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடந்தது.காலை முதலே ஓட்டு போட கட்சி உறுப்பினர்கள் ஆர்வமாக வரிசையில் நின்றனர். அதிகளவு பெண்கள் ஓட்டு போட்டனர். இன்றும், நாளையும் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவு இளைஞர் காங்கிரஸ் இணையதளத்தின் மூலம் வெளியிடப்படுகிறது.வரும் 11 முதல் 13ம் தேதி வரை தாராபுரம், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் நடக்கிறது. காங்கேயம் சட்டசபை தொகுதிக்கு 11 முதல் 14ம் தேதிவரை தேர்தல் நடக்கிறது.


தேர்தல் பார்வையாளராக கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த குமார் உள்ளார். அவர் கூறியதாவது:மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து, நகராட்சி வார்டு பகுதி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. மொடக்குறிச்சிக்கு 9ம் தேதி வரையும், ஈரோடு மேற்கு தொகுதிக்கு வரும் 10ம் தேதி வரையும், குமாரபாளையத்துக்கு நாளையுடனும் தேர்தல் முடிகிறது. 401 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


ஒரு தொகுதிக்கு ஒரு உதவி தேர்தல் பார்வையாளர், நான்கு ஓட்டு பதிவு அலுவலர் செயல்படுகின்றனர். சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல் போல விதிகளை பின்பற்றி முறையாக நடத்துகிறோம். காலை 8 மணிக்கு ஓட்டுபதிவு துவங்கி மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, இளைஞர் காங்கிரஸ் இணையதளத்தின் மூலம் முடிவுகள் வெளியிடப்படுகிறது.
இதையடுத்து, தாராபுரத்துக்கு 11 முதல் 13ம் தேதி வரையும், காங்கேயத்துக்கு 11 முதல் 14 வரையும், ஈரோடு கிழக்கு 11 முதல் 13 வரையும் தேர்தல் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Top

பொது

* 1.நிலத்தை பதப்படுத்த சணப்பை மகசூல் அதிகரிக்கும் நம்பிக்கை

கோபிசெட்டிபாளையம்: கோபி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிலத்தை பதப்படுத்த அடி உரமாக சணப்பையை பயிரிட்டு வருகின்றனர். இதன் மூலம் மகசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வசதி கொண்ட விவசாய பகுதிகளாக கோபி அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகள் உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கருப்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.


நாளடைவில் ஏற்பட்ட கால்நடைகள் வளர்ப்பு குறைவு போன்ற காரணங்களால் இயற்கையான கழிவுகளை நிலத்தில் உரமாக பயன்படுத்த முடியவில்லை. தற்போதுள்ள நவீன வாழ்க்கை முறையில் ஃபிளாஸ்டிக் நிறைந்த குப்பைகளையும் நிலத்தில் உரமாக பயன்படுத்த முடியவில்லை. விவசாயிகள் மகசூலை பெருக்கவும், பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காக்கவும் செயற்கையான உரங்களை அதிகளவில் பயன்படுத்தினர். நாளடைவில் ஏற்பட்ட உரத்தட்டுபாடு, உரத்துக்கான அதிக செலவு ஆகிய காரணங்களால் விவசாயிகள் இயற்கையான உர முறைகளை பின்பற்ற தொடங்கினர். ஒரு போகம் முடிந்த பிறகு மறுபோகத்திற்கான காலத்துக்குள் அடி உரமாக பயன்படுத்தப்படும் சணப்பையை பயிரிட விவசாயிகள் முடிவு செய்தனர்.


இரண்டு மாத பயிரான சணப்பை இரண்டு அடி உயரம் வளர்ந்தவுடன், அப்படியே நிலத்தில் அறுத்து போட்டு விடுவர். பின்னர் உழவு ஓட்டினால் சணப்பை இழைகள் நிலத்தில் மக்கி அடி உரமாக மாறி விடுகிறது. இதில் கரும்பு, நெல், வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை பயரிடலாம். கோபி அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசன பகுதிகளில் முதல் போகத்திற்கு வரும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி தான் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இதனால் தரிசாக உள்ள விவசாய நிலங்களில் அடி உரமாக சணப்பையை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
Top
* 2.உர உற்பத்தி மையத்துக்கு 5 கிலோ மண்புழு இலவசமாக வழங்கல்

கோபிசெட்டிபாளையம்: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் டி.என்.பாளையம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 மண் புழு உர உற்பத்தி மையங்களுக்கு ஐந்து கிலோ மண்புழு இலவசமாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு மண் புழு வகைகள், புழு வளர்ப்பு முறைகள், குடில் அமைப்பது. உர உற்பத்தி முறைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து வேளாண் துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் 10 விவசாயிகளுக்கு தலா ஐந்து கிலோ மண் புழுவை, வேளாண்மை அலுவலர்கள் வைத்தீஸ்வரன், சரோஜா ஆகியோர் வழங்கினர். "விதை கிராம திட்டத்தின் கீழ் மான்ய விலையில் பயிறு வகைகள், தானியங்கள் சேமித்து வைக்க சேமிப்பு கலங்கள் மஞ்சள் அண்டா வகை மற்றும் மூடியுடன் கூடிய ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் வகைகள் மான்ய விலையில் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி, காசிப்பாளையம் மற்றும் நால்ரோடு விரிவாக்க மையங்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்' என டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் பாபு கூறினார்.
Top
* 3.17,583 பருத்தி மூட்டை ரூ.2.22 கோடிக்கு ஆத்தூரில் ஏலம்

ஆத்தூர்: ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 17 ஆயிரத்து 583 பருத்தி மூட்டைகள் 2 கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஆத்தூர் புதுப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஞாயிற்று கிழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்துக்கு விவசாயிகள் ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி 15 ஆயிரத்து 544 மூட்டை, டி.சி.ஹெச்., 1,667 மூட்டை, கொட்டு பருத்தி 372 மூட்டை என 17 ஆயிரத்து 583 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். டி.சி.ஹெச்., ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிக பட்சமாக 5,136 ரூபாயும், குறைந்த பட்சமாக 4,599 ரூபாய்க்கு ஏலம் போனது. ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக 3,606 ரூபாய், குறைந்த பட்சமாக 3,286 ரூபாய்க்கு ஏலம் போனது. கொட்டு பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 2,540 ரூபாயும், குறைந்த பட்சமாக 1,899 ரூபாய்க்கு ஏலம் போனது. நேற்று ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கடந்தாண்டு நவம்பரில் துவங்கி தொடர்ந்து நடந்து வரும் பருத்தி ஏலத்துக்கு ஒரே நாளில் 17 ஆயிரத்து 583 பருத்தி மூட்டைகள் கொண்ட 6,154 குவிண்டால் பருத்தி இரண்டு கோடிய 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது சாதனையாக உள்ளது.
Top
* 4.காய்கறிகள் விலை குறைவு

கோபிசெட்டிபாளையம்: கோபி உழவர் சந்தையில் கடந்த இரண்டு மாதத்துக்கு பிறகு காய்கறிகள் விலை கணிசமான அளவில் குறைய தொடங்கியுள்ளது.கோபி மொடச்சூர் உழவர் சந்தையில் கடந்த ஜனவரியில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 18 ரூபாய்க்கும், பிப்ரவரியில் எட்டு ரூபாய்க்கும், தற்போது நான்கு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் 20 ரூபாயில் இருந்து 10 க்கும், முருங்கை 50 ரூபாயில் இருந்து 20 க்கும், சின்ன வெங்காயம் 20 ரூபாயில் இருந்து 12 க்கும், பெரிய வெங்காயம் 24 ரூபாயில் இருந்து 12 க்கும், உருளைக்கிழங்கு 24 ரூபாயில் இருந்து 13 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஜனவரி மாதம் 286 டன் காய்கறி 37 லட்சத்து 55 ஆயிரத்து 396 ரூபாய்க்கு விற்றது. 57 ஆயிரத்து 399 பொதுமக்களும், மூன்றாயிரத்து 572 விவசாயிகளும் வந்தனர். பிப்ரவரி மாதம் 259 டன் காய்கறிகள் 30 லட்சத்து ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்றது. 51 ஆயிரத்து 933 பொதுமக்களும், மூன்றாயிரத்து 170 விவசாயிகளும் கோபி உழவர் சந்தைக்கு வந்துள்ளனர்.


"கோபி உழவர் சந்தையில் இருந்து பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கோபி, அந்தியூர், கவுந்தப்பாடி போக்குவரத்து கிளைகளுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. பஸ் மற்றும் இதர வாகனங்களில் இருந்து காய்கறிகளை இறக்க இரண்டு தள்ளு வண்டிகள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ச் மேன் ஷெட், ஆழ்குழாய் கிணறு வசதி மற்றும் கேண்டீன் வசதிகளை ஏற்படுத்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டுள்ளது' என உழவர் சந்தை அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார்.
Top
* 5.இறுதி கட்டத்தை எட்டியது கண்காணிப்பு கோபுரம் பணி

கோபிசெட்டிபாளையம்: கோபியை அடுத்த கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 16 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கண்காணிப்பு கோபுரம் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி வருவாய் கோட்டத்தில் பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோவில், கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்கள், குண்டேரிப்பள்ளம், வரட்டு பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளது. சுற்றுலா பயணிகள் குளித்து மகிழவும், அணையின் அழகை ரசிக்க படகில் செல்லவும் கொடிவேரி அணையில் வசதிகள் இயற்கையாகவே அமைந்துள்ளது. இதனால் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், மதுரை, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் கொடிவேரி அணை சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டி இருக்கும். சுற்றுலா பயணிகள் வசதிக்காக கொடிவேரி அணையில் 25 லட்ச ரூபாய் செலவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோபி-சத்தி சாலையில் இருந்து கொடிவேரி அணைக்கு புதிதாக சாலையும் போடப்பட்டுள்ளது.


கொடிவேரி அணை முனியப்பன் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கோடைக்கால விடுமுறையின் போது சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையின் அழகை 33 அடி உயரமுள்ள புதிய கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து ரசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Top
* 6.படித்த இளைஞர்கள் தையல் தொழிலுக்கு வர வேண்டும்: மாஜி அமைச்சர் பேச்சு

ஈரோடு: ""படித்த இளைஞர்கள் தையல் தொழிலுக்கு வர வேண்டும்,'' என ஈரோட்டில் தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார். ஈரோட்டில் தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 15ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. ஈரோடு நகர தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். நகர பொருளாளர் பழனிசாமி வரவேற்றார். மாவட்ட தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.


நலத்திட்ட உதவிகளை வழங்கி, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:முப்பது ஆண்டுக்கு முன்பு டீ கடை, தையல்கடை, சலூன்களில் தான் பத்திரிக்கைகள் வரும். இன்று அப்படி இல்லை. உடனுக்குடன் "டிவி'யில் காட்டுகின்றனர். மக்களுக்கு அன்று தேவை அதிகம் இல்லை; இன்று தேவை அதிகமாக உள்ளது. அன்று இரண்டு ஆடையுடன் வாழ்க்கையை நடத்தியோர் இன்று நான்கு ஆடை தேவைப்படுகிறது. தையல் தொழில் அத்தியாவசியமானது. சென்னை நகரில் விதவிதமான ஆடைகளை தைக்கின்றனர்.மேலைநாடுகளில் தையல் கலைஞர்களை "டிசைனர்' என அழைக்கின்றனர். எஃப் "டிவி'யில் விதவிதமான உடைகளை காண்பிக்கின்றனர். எனக்கு எந்த தொழிலும் இல்லை என்பதால், அரசியலில் இருக்கிறேன்.


இதுவரை இந்த சங்கம் எந்த கட்சியிலும் சேரவில்லை. இனிமேலும் சேரக்கூடாது. இங்கு மகளிர் அதிகமாக உள்ளனர். நாளை பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்கின்றனர். இனி வரும் காலத்தில் ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு கேட்கும் காலம் வரும். படித்த இளைஞர்களும் இத்தொழிலுக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேயர் குமார்முருகேஸ், ஈரோடு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பெரியசாமி, துணை மேயர் வெங்கடாசலம், மாநகர மாவட்ட தலைவர் ரவி, மாநகர தலைவர் குப்பண்ணாசந்துரு உட்பட பலர் கலந்து கொண்டனர். தையல் கலைஞர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் தையல் நகரம் அமைத்து குறைந்த கடன் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டும். தையல் தொழில் நடத்துவோருக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Top
* 7.பெருந்துறை உழவர் சந்தையில் ரூ. 1.86 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

பெருந்துறை: பெருந்துறை உழவர் சந்தையில் ரூ. 1.86 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.பெருந்துறை உழவர் சந்தை கடந்த 2008 டிசம்பரில் துவக்கப்பட்டது. பெருந்துறை, சென்னிமலை வட்டாரங்களில் இருந்து காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.மின்னனு தராசு மூலம் பொருட்கள் எடை போட்டு விற்பனை செய்யப்படுகிறது. 2009 ஏப்ரல் 1 முதல் 2010 பிப்ரவரி 28ம் தேதி வரை, 14 ஆயிரத்து 503 உழவர்கள், 14 லட்சத்து 61 ஆயிரம் 489 கிலோ காய்கறிகள் கொண்டு வந்து, அதை ஒரு கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 889 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 251 நுகர்வோர் வாங்கி பயனடைந்துள்ளனர்.


பிப்ரவரி மாதத்தில் 3,285 கிலோ கத்தரிக்காய், 14 ஆயிரத்து 290 கிலோ தக்காளி, 13 ஆயிரத்து 274 கிலோ சின்ன வெங்காயம், 15 ஆயிரத்து 641 கிலோ தேங்காய், 3,881 கிலோ சுரைக்காய், 3,243 கிலோ பாகற்காய், 4,113 கிலோ பெரிய வெங்காயம், 935 கிலோ உருளைக் கிழங்கு, 877 கிலோ முட்டை கோஸ், 915 கிலோ கேரட், 15 ஆயிரத்து 736 கிலோ வாழைக்காய், 3,650 கிலோ வெண்டைக்காய் என்ற அளவில் விற்பனையாகி உள்ளது. இத்தகவலை பெருந்துறை உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Top
* 8.சீஸன் துவங்குவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி: மஞ்சள் ஏற்றுமதி பிரகாசமாக இருக்க வாய்ப்பு

ஈரோடு: ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் "ஏப்ரல்' மாதத்தில் சீஸன் துவங்குவதால் ஏற்றுமதி விற்பனை "பிரகாசமாக' இருக்கும் என ஈரோடு வியாபாரிகள் கூறுகின்றனர்.மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது. இந்தியாவில் 185.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 701.66 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் 33 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 158.64 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தியாகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்தியில் முன்னணி மாவட்டமாக திகழ்கிறது.


ஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை மையம் கண்காணிப்பில், ஈரோடு சொசைட்டி, கோபி சொசைட்டி மற்றும் தனியார் கமிஷன் மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, நூற்றுக்கணக்கான தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து 60 சதவீத மஞ்சளும், கர்நாடகா, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, வேலூர் போன்ற பகுதியில் இருந்து 40 சதவீத மஞ்சளும் வரத்தாகிறது. மாவட்டத்தில் மைசூரு சம்பா, எட்டாம் நம்பர், பத்தாம் நம்பர் உள்ளிட்ட ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுவது வழக்கம். எட்டாம் நம்பர் மஞ்சள் டிசம்பர் மாதத்தில் அறுவடை துவங்கி, ஜனவரி மாதத்தில் மார்க்கெட்டுக்கு வரத்தாகும்.


கர்நாடகா, சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருவண்ணாமலை, வேலூர் பகுதியில் இருந்து வழக்கமாக ஃபிப்ரவரி 15ம் தேதிக்கு மேல் புதிய மஞ்சள் வரத்தாகும். அதற்கு பின் புதிய மஞ்சள் சீஸன் வெகுவாக துவங்க ஆரம்பிக்கும். மைசூரு சம்பா, பத்தாம் நம்பர் ரகங்கள் ஃபிப்ரவரி, மார்ச் மாதத்தில்தான் வரத்தாகும்.


மஞ்சள் விலை இரண்டு ஆண்டுக்கு முன் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வரை விலைபோனது. மஞ்சள் வியாபாரிகள் முதல் விவசாயிகள் வரை மஞ்சள் மூட்டைகளை தேக்கி வைத்தனர். ஆனால், 2009-10ல் மஞ்சள் எதிர்பாராத விதமாக குவிண்டாலுக்கு 13 ஆயிரம் ரூபாய் வரை விலைபோனது. இந்த விலையேற்றம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை புருவம்தூக்க செய்தது.


மஞ்சள் விலையேற்றத்துக்கு முக்கியக்காரணம் "ஆன்-லைன்' வர்த்தகமே என வியாபாரிகள் தெரிவித்தனர். 2009 டிசம்பர் 31ல் கடைசி நாளான்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் குவிண்டாலுக்கு குறைந்த விலையாக 10 ஆயிரத்து 927 முதல் அதிகபட்சமாக 11 ஆயிரத்து 409 வரை விலைபோனது. 2010 புத்தாண்டு துவங்கிய முதல் வாரத்தில் ஆங்கிலப்புத்தாண்டு, தைப்பொங்கல் திருநாள் என அடுத்தடுத்து வந்த நாட்கள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. ஜனவரி 4ம் தேதியன்று மஞ்சள் குவிண்டாலுக்கு 11 ஆயிரத்து 455 ரூபாய்க்கு விலைபோனது. அதற்கு அடுத்த வந்த ஃபிப்ரவரி மாதத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை ஏற்ற இறக்கமாகவே இருந்தது. மார்ச் மாத துவக்கத்தில் இருந்து நேற்று வரை மஞ்சள் குவிண்டாலுக்கு பத்தாயிரத்தை எட்டுவதும், குறைவதுமாகவே உள்ளது. ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் கூறியதாவது:


மஞ்சளை பொருத்த வரையில் எப்போது விலையேறும், இறங்கும் என கூறமுடியாது. சென்ற நான்கு நாளில் குவிண்டாலுக்கு 400 ரூபாய் வரை கூடியுள்ளது. தற்சமயம் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருப்பு மஞ்சள் வெகுவாக குறைந்துள்ளது. சென்றாண்டில் மஞ்சள் குவிண்டாலுக்கு 13 ஆயிரம் வரை விலைபோனது. தற்சமயம் குவிண்டாலுக்கு 4,000 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. மார்ச் கடைசி வாரத்திலும், ஏப்ரல் துவக்கத்திலும் சீஸன் துவங்கவுள்ளது. இந்த சமயத்தில் மஞ்சள் ஏற்றுமதி பரபரப்பாக இருக்கும். மொத்தத்தில் மஞ்சளின் எதிர்காலம் "பிரகாசமாக' இருக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Top
* 9.தாளவாடியில் ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் தாளவாடியில் நடந்த ஏலத்தில் ரூ. 25 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனையாகியுள்ளது.சத்தியமங்கலம் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் தாளவாடியில் சாம்ராஜ்நகர் ரோட்டில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது. ஏலத்தில் ஈரோடு, கோயமுத்தூர் பகுதிகளை சேர்ந்த மஞ்சள் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.தாளவாடி பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து 400 மூட்டைகள் ஏலத்துக்கு வந்தது. விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு 9,840 முதல் 10 ஆயிரத்து 179 ரூபாய் வரை விற்பனையானது.


கிழங்கு மஞ்சள் 9,292 முதல் 9 ,486 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் ரூ. 25 லட்சத்துக்கு ஏலம் மூலம் மஞ்சள் விற்பனையாகியுள்ளது.சங்க தனி அலுவலர் சுப்பிரமணியம் கூறியதாவது: விவசாயிகள் கொண்டு வரப்படும் மஞ்சளை பாதுகாக்க குடோன் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால் இரண்டு லட்சம் ரூபாய் வரை விவசாய பொருட்களை வைத்து சரக்கீட்டு கடன் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Top
* 10.நலவாரியம் அமைக்க கோரி பழுது நீக்குவோர் சங்கம் தீர்மானம்

ஈரோடு: மாநில நலவாரியம் அமைக்க கோரி ஈரோட்டில் நடந்த ஈரோடு நகர கனரக தானியங்கி வாகனம் பழுது நீக்குவோர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஈரோட்டில் நகர கனரக தானியங்கி மோட்டார் வாகனம் பழுது நீக்குவோர் சங்க நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். கவிதாலயா ராமலிங்கம் வரவேற்றார். மாநில தலைவர் சதாசிவன், மாநில செயலாளர் ஹரிஹரன், மாநில பொருளாளர் காசி ஆண்டியப்பன், அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவநேசன், மாவட்ட ஆட்டோமொபைல் அசோசியேஷன் தலைவர் நாகராஜன், நாச்சி முத்து ஆகியோர் பேசினர்.


செயலாளர் சிவா, பொருளாளர் சிவக்குமார், துணைத் தலைவர் பழனிச்சாமி, கவுரவ தலைவர் ஆறுமுகம், உபதலைவர் சந்திரசேகர், துணை செயலாளர் ரவிச்சந்திரன், துணை பொருளாளர் பாலசுப்பிரமணியம், நகர பிரதிநிதி சுப்பிரமணி, செயற்குழு உறுப்பினர்கள் மூர்த்தி சசி, மாரியப்பன், அன்பு, கோபால், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில நலவாரியம் மற்றும் ஆட்டோ நகரம் அமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
Top

பிரச்னைகள்

* 1.போலீஸ் துறைக்கு வழங்கப்பட்ட வாகனங்கள்: ஆயுட்காலம் முடிந்து முடங்கி நிற்கும் பரிதாபம்

ஈரோடு: ரோந்து பணிக்காக போலீஸாருக்கு வழங்கப்பட்ட வாகனங்கள், ஆயுட்காலம் முடிந்து விட்டதால் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயன்பாட்டுக்காக அரசு சார்பில் எண்ணற்ற வாகனங்கள் புதிதாக வழங்கப்படுகின்றன. முன்பு துறை உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே விலை உயர்ந்த கார், ஜீப் போன்றவை வழங்கப்பட்டன. தற்போது அடுத்த நிலை அதிகாரிகள் மற்றும் களப்பணிக்கு கூட விலை உயர்ந்த வாகனங்கள் வழங்கப்படுகின்றன. போலீஸார் ரோந்து பணிக்கு குவாலிஸ் கார், இன்ஸ்பெக்டர்களுக்கு சுமோ அல்லது ஜீப், எஸ்.பி., டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., ஆகியோருக்கு பொலிரோ கார் என விலை அதிகமுள்ள வாகனங்கள் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன.


மக்களின் வரி பணத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட வாகனங்களை அரசு துறைகள் முறையாக பராமரிப்பதில்லை. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு வாகனங்கள் இயக்கமின்றி ஓரங்கட்டி நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தின் பின் பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு விடிவு காலம் எப்போது வரும் என தெரியாது. அவசர போலீஸூக்காக பயன்படுத்தப்பட்ட மகேந்திரா வேன், மெட்டடோர், அம்பாசிடர் கார், ஸ்வராஜ் மஸ்தா ஆகிய வாகனங்கள் அப்பகுதியில் நிற்கின்றன.


இந்த வாகனங்கள் இயக்க ஆயுட்காலம் முடிந்து, எஸ்.பி., அலுவலக வளாகத்தில் எலும்பு கூடாக நின்று கொண்டிருக்கிருக்கின்றன. பல ஆண்டுகளாக மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்தும் உரிய பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் டயர், சீட், ஹாரன் உள்ளிட்ட பாகங்கள் காணாமல் போய்விட்டன. சில வாகனங்களில் இன்ஜின்கூட மாயமாகியுள்ளன. மண்ணோடு மண்ணாக புதைந்து போயிருக்கும் வாகனங்களின் மீது செடி, கொடிகள் படர்ந்து புதர் போன்று மூடியுள்ளன. இவற்றை பார்த்தாலே பல ஆண்டுகளாயிருக்கும் என்பது புலனாகிறது.


உதிரி பாகங்களில் பழுது ஏற்பட்ட போதே சரி செய்து இயங்கியிருந்தால் பல வாகனங்களை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், அரசு துறைகளின் நிதி நடைமுறைகளை காரணம் கூறி ஊழியர்கள் ஓரங்கட்டி விட்டனர். மேலும், இயக்க காலம் முடிந்த வாகனங்களை, ஓரளவு நல்ல நிலையில் இருக்கும்போதே ஏலம் விட்டிருந்தால், அரசு கஜானாவில் பணம் சேர்ந்து வேறு பணிகளுக்காக பயன்பட்டிருக்கும். அதை செய்யாததால், மண்ணோடு மண்ணாகி இன்று கடைக்கு கூட போகாத நிலையில் மிகவும் மோசமாக காட்சி அளிக்கின்றன. பல வாகனங்கள் ஊனமாக காட்சியளிப்பது பரிதாபத்துக்குரியது. போலீஸாருக்கு வழங்கப்படும் வாகனங்கள் அனைத்து ஆயுதப்படை பொறுப்பில் உள்ளன.


இன்னும் கொஞ்ச நாள் போனால், வாகனங்கள் மாயமாகி விடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதற்கு முன், பயன்பாட்டுக்கு தகுதியற்ற, ஆயுள் முடிந்த வாகனங்களை ஏலம் விட வேண்டியது அவசியம். அதேபோன்று, இயங்க தகுதியுள்ள வாகனங்களில் இருக்கும் பழுதுகளை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் வாகன பற்றாக்குறையை சமாளிக்கலாம். இதற்கான பணிகளை மேற்கொள்ளும் கடமை, அந்தந்த துறைகளின் உயரதிகாரிகளை சார்ந்தது. இதுகுறித்து எஸ்.பி., நடவடிக்கை மேற்கொள்வாரா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Top

சம்பவம்

* 1.மதுவிலக்கு கோரி மறியல்: ஈரோட்டில் 65 பேர் கைது

ஈரோடு: தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பூரண மதுவிலக்கு கோரி ஈரோடு பஸ் ஸ்டாண்டு முன்பு சாலை மறியல் செய்ய முயன்ற மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பூரண மதுவிலக்கு கோரி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் முன்பு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மறியல் செய்ய முயன்றனர். மாநில துணை பொதுச் செயலாளர் ரிஃபாயி தலைமையில் மறியல் செய்ய முயன்ற மாவட்ட செயலாளர் அமின், மாநகர செயலாளர் அமீர் மற்றும் 12 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டனர்.







Top
* 2.நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து மரணம்

கொடுமுடி: கொடுமுடி அருகே நடந்து சென்ற வாலிபர் மயங்கி விழுந்து இறந்தார். கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் சினிமா தியேட்டர் சந்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மதியம் 2 மணிக்கு நடந்து சென்றார். திடீரென "என்னை காப்பாத்துங்க' என்று அலறியபடி அவர் கீழே விழுந்தார். இதை பார்த்த சிலர் "108' ஆம்புலன்ஸ்க்கு தகவல் தந்தனர். அந்த வாலிபர் கொடுமுடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பயனின்றி அவர் இறந்தார். இறந்த வாலிபர் விஷம் குடித்திருந்தது தெரியவந்துள்ளது. இறந்தவர் யார் என தெரியவில்லை. கொடுமுடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Top
* 3.சாலை விபத்தில் மூதாட்டி பலி

கோபிசெட்டிபாளையம்: கோபி முத்துகாளிமடை பகுதியை சேர்ந்த பெரிய முனியன் மனைவி தங்காள் (80). இவர் குள்ளம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற டெம்போ வேன் மோதியதில் படுகாயமடைந்த தங்காள், சிகிச்சை பலனின்றி கோபி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். கோபி இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரிக்கிறார்.

No comments:

Post a Comment