Sunday, March 7, 2010

மகளிர் தினம் : தலைவர்கள் வாழ்த்து

புதுடில்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பார்லிமென்ட் சபாநாயகர் மீரா குமார், முதல்வர் கருணாநிதி உட்பட தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்: ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 100 வது ஆண்டு என்பதில் கூடுதல் சிறப்பு.


இந்த மகிழ்ச்சியான சூழலில், தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இந்தியப் பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.சபாநாயகர் மீரா குமார்: பெண்கள் குறித்த சமுதாயத்தின் மன நிலையை மாற்ற முன்வர வேண்டும். பெண்கள் உரிமையைக் காப்பதும், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும், நம்முடைய கூட்டு முயற்சியில்தான் நடக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு விடுதலை கிடைக்கும். அவர்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.


முதல்வர் கருணாநிதி:தி.மு.க., அரசு பல்வேறு மகளிர் முன்னேற்றத் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது. நூறாவது ஆண்டு உலக மகளிர்தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழக மகளிர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா:மகளிர் தினம் என்பது பெண் விடுதலையின் முதல்படி என்று சொன்னால் அது மிகையாகாது. பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும், பெற வேண்டிய உரிமைகளுக்காக போராடவும் பெண்கள் தங்களை அர்பணித்துக் கொள்ளும் நாள் மகளிர் தினம்.


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ:ஈ.வே.ரா., பெண்ணுரிமைச் சங்கநாதம் எழுப்பினார். உலகிலேயே எங்கும் நடந்திராத வீரகாவியத்தை ஈழத்துப் பெண்கள் போர்க்களத்தில் படைத்தனர். மகளிருக்கு எதிரான குற்றம் புரிவோரைக் கடும் தண்டனைக்கு ஆளாக்க வேண்டும். பெண்ணின் பெருமை சிறக்கட்டும். பெண் உரிமை வெல்லட்டும்.


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: வீதிதோறும் திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளை மூடினால், தமிழ்ச் சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள மகளிர், பொருளாதார விடுதலை பெற்று வளம்பெற வழி வகுக்கும்.


தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:ஆண், பெண் குழந்தைகள் என்ற வேறுபாடு பார்க்காமல், பெண்களையும் பெற் றோர்கள் நன்றாக படிக்க வைக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் பெருகி வருகின்றன. உதாரணமாக ஈவ்டீசிங், கடத்தி கற்பழிப்பு கொலை செய்வது, வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்கள் இழைக்கப் படுவது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு, அரசு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment