Sunday, March 7, 2010

திருப்பூர்

* 1.சர்ச்சை! அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டாய 'டிசி'? திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி மீது புகார்

பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை கருத்தில் கொண்டு, திருப்பூர் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில், படிப்பில் பின்தங்கிய மாணவர் களுக்கு கட்டாய "டிசி' கொடுத்து, வெளியேற்றபட் டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் சின்னசாமி அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2,000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, பண்டிகை நாட்கள், "அட்டஸ்டேஷன்', தேர்வு கட்டணம் என பல்வேறு காரணங் களைக்கூறி, மாணவர்களிடம் இருந்து அதிக பணம் வசூலிப்பதாக, புகார் எழுந்தள்ளது. மேலும், பள்ளியின் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில், படிப்பில் பின்தங்கியிருந்த மாணவர் களுக்கு கட்டாயமாக "டிசி' கொடுத்து, வெளியேற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்புகார்களை பட்டியலிட்டு, முதலமைச்சர் தனிப்பிரிவு, பள்ளி கல்வித்துறை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் அனுப் பப்பட்டுள்ளது. இப்பிரச்னையில், 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனுப்பியுள்ள புகார்: பத்தாம் வகுப்பு "பி' பிரிவு மாணவர்கள் நவீன்குமார், ஜாபர், கணேஷ் குமார், மணிகண்டன், "சி' பிரிவு கிருஷ்ணமூர்த்தி, தினேஷ்குமார், கார்த்திக், சிவக்குமார் மற்றும் "ஈ' பிரிவு ஜீவா, சதீஷ் ஆகியோர், கடந்த டிச., - ஜன., மாதங்களில் கட்டாயமாக "டிசி' கொடுத்து வெளியேற்றப் பட்டுள்ளனர்.
மாணவர் சேர்க்கையின்போது, அரசு விதிமுறைக்கும் அதிகமாக பணம் வசூலிக்கப்படுகிறது. தேர்வு கட்டணம், தீபாவளி போன்ற பண் டிகை நாட்களுக்கு கட்டணம் மற்றும் இடைப்பருவத்தேர்வு கட்டணம், விளையாட்டுக்கான பனியன் கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு, புகார் அனுப்பப் பட்டுள்ளது.
பெற்றோர் கூறுகையில், "ஒழுங் காக படிக்கவில்லை எனக்கூறி, கையெழுத்து வாங்கிவிட்டு, "டிசி'யை கொடுத்தனர். பாதியில் பள்ளியில் இருந்து நிறுத்தியதால், தற்போது வீட்டில் உள்ளான். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்வுக்கு முன் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், மாணவர்களின் எதிர் காலம் பாதிக்காமல் இருக்கும்,' என்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை கூறியதாவது: யாருக்கும் கட்டாயப்படுத்தி "டிசி' கொடுக்கவில்லை. படிப்பில் விருப்பம் இல்லாத மாணவர்கள் சிலர் பள்ளிக்கு வருவதை தானாகவே நிறுத்திவிட்டனர். "ரிவிஷன்' டெஸ்டில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் கூட, பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கும் "டிசி' கொடுத்திருப்போம்.
அரசு விதிமுறைக்கு மாறாக எவ் வித பண வசூலும் செய்யவில்லை. பல வழிகளில் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் எனது சார்பில் செய்கிறோம். பள்ளியின் நிர்வாகம் சிறந்த முறையில், மாணவர்களின் நலனுக்காக செயல் பட்டு வருகிறது, என்றார்.
தனியார் அல்லது அரசு பள்ளி என எதுவாக இருந்தாலும், படிக்காத மாணவர்களை ஒன்பதாம் வகுப்பில் இருந்து வெளியேற்றுவது அல்லது "டிசி' கொடுப்பதை தவிர்க்க வேண்டும்; படிப்பில் தடுமாறும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, டியூசன் ஏற்பாடு செய்து, அம்மாணவன் தேர்ச்சி அடைவதற்கான முயற் சியை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களை, பள்ளிக்கு அழைத்து வர, அரசு தரப்பில் எத் தனையோ திட்டங்கள் வகுக்கப் பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல் பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்தப்பட்டால், அம்மாணவன் வேலைக்கோ அல்லது பெற்றோரால் வெறுக்கப் பட்டு, தவறான வழிக்கோ செல்ல நேரிடும்.
விளையாட்டு தனத்தால், படிப் பில் ஈடுபாடு காட்டாமல் உள்ள மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி சிறந்த மாணவனாக உரு வாக்க வேண்டுமே தவிர, பாதியில் வெளியேற்றப்பட்டால், வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மாணவர்களும், தங்களது எதிர் காலத்தை நினைவில் கொண்டு, திறம்பட படிக்க வேண்டும்.


- நமது நிருபர் -
Top
* 2.விளம்பர பேனர் விவகாரம்; அ.தி.மு.க., எச்சரிக்கை

திருப்பூர் : "உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், திருப்பூரில் தி.மு.க., வினரால் வைக்கப்பட்டுள்ள பேனர் களை அகற்றாவிட்டால், நகரெங்கும் விளம்பர பேனர்கள் வைக்கப்படும்' என, அ.தி.மு.க., எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் நகரப்பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலும் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. நெடுஞ்சாலைத்துறையினர், வருவாய்த்துறையினர், மாநகராட்சியினர் இணைந்து விளம்பர பேனர் களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க.,வினரால் வைக்கப்பட்ட செம்மொழி மாநாட்டு பேனர்கள் மட்டும் அகற் றப்பட வில்லை. குறிப்பாக, மேம்பாலம் பகுதியில் அதிகளவு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
"ரயில்வேக்குச் சொந்தமான இடம் என்பதாலும், மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதி வருவதாலும், மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட நிர்வாகம் நழுவியது. மாநகராட்சி கமிஷனரோ, "பணம் கட்டி ஒப்பந்தம் செய்து, விளம்பரம் செய்துள்ளனர். எனவே, உடனடியாக எடுக்க முடியாது. ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்,' என சப்பைக்கட்டு கட்டினார்.
"கடந்த காலங்களில், அதே பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தனியார் விளம்பர பேனர்கள், உச்சநீதிமன்ற உத்தரவைக்காட்டி அகற்றப்பட்டன. அப்போது, ஒப்பந்தம் எதுவும் இல்லையா. ஆளும்கட்சி என்பதால், அகற்ற தயக்கம் காட்டுகின்றனர். இது பாரபட்சம்; அத்துமீறும் செயல்' என, மற்ற கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், "பேனர்களை அகற்றாவிட்டால், நகர் முழுவதும் கண்டன பேனர்கள் வைக் கப்படும்' என, அ.தி.மு.க., வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளது.
அ.தி.மு.க., நகர செயலாளர் ஆனந் தன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்சி கூட்டம், டி.எஸ்.பி., தலைமையில் நடந்தது. இதில், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், கட்சிகளின் இதர நிகழ்ச்சிகளுக்கான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி தொடர்பான பேச்சு எழுந்தது; நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன் வைத்து, நிகழ்ச்சி முடிந்த மறுநாள் எடுத்து விட வேண் டும், என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம், ஒருதலைப் பட்சமாக அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களை மட்டும் எடுத்து விட்டு, ஆளும்கட்சியினர் வைத்தவற்றை விட்டுவிட்டனர். ஆளும்கட்சியினர், மாநகராட்சி பகுதி எங்கும், உச்சநீதிமன்ற உ“ததரவை மீறி, "ஹோர்டிங்ஸ் போர்டு' வைத்துள்ளனர். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்தையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கண் டித்து, நகர் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top
* 3.ஆத்துக்கிணத்துப்பட்டிக்கு விடிவு பிறந்தது!

உடுமலை : "ஆத்துக்கிணத்துப்பட்டி கிராம குடிநீர் பிரச்னைக்கு, ரூ.12.65 லட்சம் செலவில் பிரதான குழாய்களை புதுப்பித்து ஒரு வாரத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்' என, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டு கால பிரச்னைக்கு "தினமலர்' செய்தி எதிரொலியால், நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதால், ஆத்துக்கிணத்துப்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், ஆத்துக்கிணத்துபட்டி ஊராட்சிக்கு தாமரைப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குடிமங்கலம் நீரேற்று நிலையத்தில் இருந்து பல்லடம் ரோட்டோரத்தில் ஆறு கி.மீ., தூரத்துக்கு பதிக்கப்பட்டிருந்த பிரதான குழாய்கள் மூலம் கிராமத்துக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது.
மேடான பகுதிக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, போதிய அழுத்தம் இல்லாமல் மேல்நிலைத்தொட்டிக்கு குடிநீர் சேரவில்லை. இதனால், கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. மேலும், பல்லடம் ரோடு விரிவாக்க பணிகளின் போது, பிரதான குழாய் முழுவதும் ரோட்டின் மத்தியப் பகுதிக்கு சென்றது. உடைப்பு பணிகளை கூட, சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குடிநீர் பிரச்னைக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது, பழுதடைந்த பிரதான குழாயை மாற்றி புதிய குழாய் அமைக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். குடிமங்கலம் நீரேற்று நிலையத்தில் இருந்து கிராமத்திற்கு பிரதான குழாய் செல்லும் வழித்தடத்தில் ஆய்வு செய்த போது, ஆறு கி.மீ.,க்குள் பிரதான குழாயில் 40 இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பல்லடம் ரோடு மற்றும் கிராம இணைப்பு ரோட்டோரத்தில் பதிக்கப் பட்டுள்ள பிரதான குழாயில் அதிக உடைப்புகள் ஏற்பட்டு, குடிநீர் விரயமாவது கண்டறியப்பட்டது. கிராமத்திலுள்ள மேல்நிலைத்தொட்டி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள நிலத்தடி நீர் தேக்க தொட்டி ஆகியவற்றை ஆய்வு செய்த குழுவினர், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதிய தண்ணீர் கிராமத்திற்கு செல்வதில்லை என்பதை கண்டறிந்தனர்.
குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த குடிமங்கலம் நீரேற்று நிலையத்திலிருந்து ஆத்துக்கிணத்துப்பட்டி வரை ஆறு கி.மீ.,க்கு பதிக்கப்பட்டுள்ள பிரதான குழாய் முழுவதுமாக புதுப்பிக்கப்படும்; சீரான அழுத்தத்தில் குடிநீர் செல்ல ஆத்துக்கிணத்துப்பட்டி பிரிவு வரை 140மிமீ., குழாயும், பிற இடங்களில் 90மிமீ., குழாயும் அமைக்கப்படும். இதனால், நீரேற்று நிலையத்தில் இருந்து கிராம மேல்நிலைத்தொட்டிக்கு நேரடியாக குடிநீர் செல்லும். நீரேற்று நிலையத்திலும் கூடுதலாக மோட்டார் பொருத்தப்படும். பணிகள் முழுவதும் 12 லட்சத்து 65 ஆயிரம் செலவில் ஒருவாரத்திற்குள் முடிக்கப்படும் என குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஊராட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் தெரிவித்தார். பல ஆண்டு கால குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, கோடை காலத்திற்கு முன்பே கிடைத்துள்ளதால் ஆத்துக்கிணத்துப்பட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Top
* 4.மனிதநேய மக்கள் கட்சியினர் மறியல்; 450 பேர் கைது

திருப்பூர் : தமிழகத்தில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடைகளை மூடக்கோரி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், திருப்பூரில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது; 450 பேரை போலீசார் கைது செய்தனர்.
"தமிழகத்தில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட வேண்டும்; பூரண மதுவிலக்கு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் பழைய வளர்மதி குடோன் எதிரில் இருந்த மதுக்கடை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடை நுழைவாயில் முன் கட்சி கொடிகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலாளர் ஹாலிதீன் தலைமை வகித்தார். பொருளாளர் ஷாஜகான், மாநகர செயலாளர் ஹைதர் அலி, இக்பால் உட்பட ஏராளமானோர் மறியலில் பங்கேற்றனர்.
கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஷாஜகான் பேசியதாவது: கடந்த 2008-09ம் ஆண்டுகளில் "டாஸ்மாக்' மதுக்கடைகளில் ரூ.13 ஆயிரத்து 500 கோடிக்கு மது விற் பனை நடந்துள்ளது. நடப்பாண்டில், 15 ஆயிரம் கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் வரும் வருவாயை பயன்படுத்தி, இலவச கலர் "டிவி' உள்ளிட்ட பல கவர்ச்சி திட்டங்களை அரசு நடை
முறைப்படுத்துகிறது.
மதுக்கடைகளை செயல்படுத்தி, அதன்மூலம் மக்களின் உடல் நலத் தை கெடுத்து மருத்துவமனைக்குச் செல்ல வைக்கிறது; அங்கு, அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் சலுகையாக தரப்படுகிறது. குடிமக்களின் குடும்பங்களை கெடுக்கும் வேலையை, அரசே செய்வது ஆரோக்கியமற்ற போக்காக உள்ளது. தேசத்தின் முன்னேற்றமும், மக்களின் ஆரோக்கியமும் போதை கலாசாரத்தால் சீரழிகிறது. எனவே, பூரண மதுவிலக்கு கொள்கையை அறிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும், என்றார்.
ரூரல் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து, நடராஜ் தியேட்டர் ரோட்டில் உள்ள மண்டத்தில் தங்க வைத்தனர். போக்குவரத்து பாதிப்பு: அதிக போக்குவரத்து உள்ள ரயில்வே மேம்பால ரோட்டில், ரோட்டுக்கு நடுவில் வாகனங்களை நிறுத்தி கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல், அவிநாசி ரோடு, பி.என்., ரோடு மற்றும் மேம்பாலம் பகுதியில் வாகனங்கள் தேங்கி நின்றன. 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்த மறியல் போராட்டத்தால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Top
* 5.பஸ் ஸ்டாண்ட் அருகே வழித்தட ஆக்கிரமிப்பு : அகற்றினால் நெரிசல் குறையும்

திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து, காமாட்சியம்மன் கோவில் பகுதிக்குச் செல்லும் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறுகியுள்ள இவ்வழியை அகலப்படுத்தி, இரு சக்கர வாகனங்கள் செல்லும் அளவுக்கு மாற்றினால், பஸ் ஸ்டாண்டுக்குள் டூவீலர்களால் ஏற்படும் நெரிசல் தவிர்க்கப்படும்.
திருப்பூர் மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்டது காமாட்சியம்மன் கோவில் வீதி. இப்பகுதியில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்டுக்கு குறுக்குச்சந்து உள்ளது. இவ்வழியாகச் சென்றால், பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள டூவீலர் ஸ்டாண்டுக்கு செல்ல முடியும்.
பஸ் ஸ்டாண்டுக்குள் உள்ள மாநகராட்சி டூவீலர் ஸ்டாண்டுக்கு, பஸ்கள் உள்ளே நுழையும் பிரதான வழியில் மட்டுமே செல்ல முடியும். டூவீலர் ஸ்டாண்டின் முன்பகுதியிலும், பஸ் ஸ்டாண்டுக்குள்ளும் நூற்றுக்கணக்கான டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன.
ஸ்டாண்டில் இருந்து எடுக்கப்படும் டூவீலர்கள், நிறுத்துவதற்காக வரும் டூவீலர்கள் என அனைத்து வாகனங்களும், பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்து செல்கின்றன. இதனால், தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று வழியாக குறுக்கு சந்தைப் பயன்படுத்த முடியும். பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து, காமாட்சி அம்மன் கோவில் வீதிக்குச் செல்லும் குறுக்கு சந்து, 12 அடி அகலம் உடையது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு, நடந்து மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. போதாக்குறைக்கு, குறுக்குச்சந்தின் ஓரமாக சாக்கடை வடிகால் அமைக்கப்படாமல், நடுவீதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குழிதோண்டி, வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
இதை மாற்றி, ஆக்கிரமிப்பை அகற்றி, ஓரமாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, குறுக்குச்சந்து துவங்கும் இடத்தில், டூவீலர்கள் செல்லும் வகையில் சரிவான பாதை ஏற்படுத்த வேண்டும். டூவீலர் ஸ்டாண்டில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள், இவ்வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும், என உத்தரவிட வேண்டும். இதன்மூலம், பஸ் ஸ்டாண்டுக்குள் தேவையற்ற நெரிசல் ஏற்படாது.
Top

பொது

* 1.சேவூர் கோவிலில் உழவாரப்பணி

அவிநாசி : சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நேற்று சேக்கிழார் புனிதர் பேரவையினர், உழவாரப்பணி மேற் கொண்டனர்.
திருப்பூரில் செயல்பட்டு வரும் சேக்கிழார் புனிதர் பேரவை சார்பில், சேவூரில் உள்ள அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நேற்று நடந்தது. அவ்வமைப்பின் செயலாளர் முத்துநடராஜன் தலைமை வகித்தார். பிருந்தாவன் நிட்டிங் உரிமையாளர் மணி துவக்கி வைத்தார்.
கோவிலின் உள் மற்றும் வெளிப்பிரகாரம் முழுவதும் பிளீச்சங் பவுடர் தெளித்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டன. சுற்றுப்பாதையில் மண் டிக்கிடந்த புதர் மற்றும் செடி, கொடிகள் அகற்றப் பட்டன. அனைத்து சன்னதிகளும் தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டு, குத்துவிளக்கு, பாத்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன. உழவார பணியில் சேக்கிழார் புனிதர் பேவையைச் சேர்ந்த 80 பெண்கள் உட்பட 125 பேர் பங்கேற்றனர்.
Top
* 2.முதல்வருக்கு எதிராக போராட்டம் : தமிழ்நாடு கள் இயக்கம் எச்சரிக்கை

திருப்பூர் : "விவசாயிகளை ஏளனமாக பேசிய முதல்வர், வருத்தம் தெரிவிக்காவிட்டால், விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம்' என, "தமிழ்நாடு கள் இயக்கம்' தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கள் இயக்கம் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்: ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகமான "பஞ்ச நிவாரணத் திட்டம்' தற்போது, "தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' என்ற பெயரில் அறிமுகமாகி உள்ளது.
பாசனக் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டு நடவுப்பணி மும்முரமாக நடக்கிறபோதும், அடுத்து வரும் களை எடுப்பு மற்றும் அறுவடையின் போதும், அந்தப் பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், வேளாண் பணி பெரிய அளவில் முடங்குகிறது. நாட்டில் எந்த பகுதியில் வறட்சி, பஞ்சம், வேலைவாய்ப்பு இல்லையோ, அப்பகுதியில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். காலநிலை அறியாமல் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. கிராம மக்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட இத்திட்டம், ஓட்டுக்களைப் பெறும் திட்டமாக திசை மாறி விடக்கூடாது.
"விவசாயத்துக்கு ஆள் வராவிட்டால், விவசாயிகளே இறங்கி வேலை செய்ய வேண்டியதுதான்' என்ற முதல்வரின் பேச்சு, விவசாயிகளை ஏளனம் செய்வதாக உள்ளது. வேளாண் மக்களை நேரில் அழைத்து இத்திட்டத்தின் நன்மை தீமைகளை அரசு அறிய வேண்டும்; தவறுக்கு முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் அறிவிக்கும். இவ்வாறு, நல்லசாமி கூறியுள்ளார்.
Top
* 3.விடுப்பு போராட்டம் நடத்த வருவாய்த்துறையினர் முடிவு

தாராபுரம் : "வருவாய் துறையில் உள்ள காலி பணியிடங் களை நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தப்படும்' என, மாநில செயற்குழு உறுப்பினர் முருகதாஸ் கூறியுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வருவாய்த்துறையில் காலியாக உள்ள 6,000 பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர், உதவி யாளர் ஆகிய பெயர்களை இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் 30 சதவீதம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். துணை தாசில் தார் பதவி உயர்வு பட்டியலுக்கான காலியிட எண் ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் கலெக்டருக்கு வழங்க வேண்டும். தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோர்களுக்கு சிறப்பு படியை அதிகரிக்க வேண்டும். அலுவலக உதவியாளர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இருந்து வருவாய்த்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
சுனாமி, தேர்தல், கலர் "டிவி', பாஸ்போர்ட் பிரிவுகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வரும் 10ம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்தி மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும், என்று கூறியுள்ளார்.
Top
* 4.'ஒழுக்கத்தை கடைபிடித்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்'

அவிநாசி : "தனி மனித ஒழுக்கத்தை கடை பிடித்தால், நிச்சயம் நல்லதே நடக்கும்; ஒட்டுமொத்த சமுதாயமும் பயனடையும்' என, அவிநாசியில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
நலம் தரும் நவகோள்களின் ஆன்மிக ஆய்வு கருத்தரங்கம், அவிநாசி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் பூவாசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. அறக்கட்டளை தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் சொக்கலிங்கம் வரவேற்றார்.
ஜோதிட ஆராய்ச்சியாளர் ஆதவா பேசியதாவது: யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; ஆனால், நவ கோள்களை யாராலும் ஏமாற்ற முடியாது. இவற்றுக்கு இறைவனும் விதிவிலக்கல்ல. கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களை அங்கேயே கொட்டினால், குரு தோஷம் ஏற்படும்; நமது செயல்களுக்கான விளைவுகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும். சலவை தொழிலாளியிடம், புரோகிதர்களிடம் எக்காரணத்தை முன்னிட்டும் கடன் சொல்லவே கூடாது.
இறைநிலையை அறிந்து கொள்வது; இயற்கையை அறிவது மூலம் நம்மை நாமே அறியலாம். குடும்பம், சமுதாயம், உலகம் ஆகியவற்றுக்கு நன்மை செய்வதே நமது பிறப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கான உரிமையை இறைவன் நமக்கு அளித்துள்ளான். இன்றைய உலகிலுள்ள 95 சதவீதம் பேர், தெரிந்தே பல செயல்களை செய்து விளைவுகளையும் அனுபவிக்கின்றனர். சிலர் மட்டுமே வாழ்வின் தத்துவத்தை புரிந்து கொண்டு நிம்மதியாக வாழ்கின்றனர்.
நவ கோள்களுக்கு என்று உள்ள அனைத்து துறைகளுமே நமக்கு நன்மையையும், தீமையையும் சரியாக தருகின்றன. இவற்றிலிருந்து யாரும் தப்பவே முடியாது. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல; இயற்கைக்கும் சரியாக பொருந்தும். இயற்கையில் ஏற்படும் அனைத்து விளைவுகளுமே நவ கோள்களின் மூலமே ஏற்படுகிறது. மனிதனது பிரச்னைகளுக்கு ஒட்டுமொத்த காரணம், அவனது செயல்விளைவுகள் மட்டுமே. அதை உணர்ந்து தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால், நிச்சயம் நல்லதே நடக்கும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் பயனடையும், என்றார்.
Top
* 5.உடுமலையில் நாளை குடிநீர் 'கட்'

உடுமலை : உடுமலை நகராட்சி திருமூர்த்தி நகர் தலைமை குடிநீர் பணியிட மெயின் 2வது குடிநீர் திட்ட குழாய்களில், அதிகப்படியான நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.
எனவே, கோடை காலத்தையொட்டி, நீர்க்கசிவுகளை சீரமைக்கும் வகையில், நகர் முழுவதும் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் குடிநீரை சேமித்து, காய்ச்சி பருக வேண்டும் என உடுமலை நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Top
* 6.மழை வேண்டி இளைஞர்கள் நடத்திய 'ரேக்ளா' போட்டி

உடுமலை : மழை வேண்டிய உடுமலை அருகே உள்ள ஆமந்தகடவு இளைஞர்கள் நேற்று "ரேக்ளா' போட்டி நடத்தினர்.
இப்பகுதி இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில், இரண்டாம் ஆண்டு ரேக்ளா போட்டி நேற்று நடந்தது. ஆமந்தகடவு-பெரியபட்டி ரோட்டில் நடந்த போட்டிகளை முன்னாள் ஊராட்சி துணை தலைவர் லட்சுமணசாமி துவக்கி வைத்தார். 200மீ., மற்றும் 300 மீ., பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. கேரளா மாநிலத்திலிருந்து அதிகளவு வண்டிகள் பங்கேற்றன. கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர் மாவட்டத்திலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
200 மீ., பிரிவில் 104 வண்டிகளும், 300 மீ., பிரிவில் 60 வண்டிகளும் போட்டியிட்டன. காலை 10.00 மணிக்கு துவங்கிய போட்டி மாலை 6.00 மணிக்கு மேல் நீடித்தது. விவசாய தொழில் செழிக்க பருவமழை வேண்டி ஆமந்தகடவு இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பில் நடத்தப் பட்ட ரேக்ளா போட்டியை காண சுற்றுப்பகுதியை சேர்ந்த பல கிராம மக்கள் திரண்டனர்.
குடிமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறைந்த நேரத்தில் இலக்கு தூரத்தை எட்ட நான்கு கால் பாய்ச்சலில் காளைகளை பாய்ந்து ஒடியதை பார்வையாளர்கள் ரசித்தனர்.
Top
* 7.விரிவாக்க மையங்களில் ஆலோசனை : விண்ணப்பம் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை : "வேளாண் பொறியியல் துறை விண்ணப்பங்களை விவசாயிகள் பதிவு செய்ய வியாழக்கிழமை தோறும் வேளாண் விரிவாக்க மையங்களில் ஆலோசனை மையம் செயல்படும்', என விவசாயிகள் பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஐசோபாம் பயறு வகை பெருக்குதிட்டத்தின் கீழ் வேளாண்துறை சார்பில் விவசாயிகள் பயிற்சி முகாம் பெதப்பம்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. ஆழியார் தென்னை நாற்று பண்ணை உதவி பேராசியர் வாசுகி பங்கேற்று கொண்டைக்கடலை, கொத்தமல்லி சாகுபடியில் இரட்டை சால் பயிர் சாகுபடி, ஊடுபயிர், டி.ஏ.பி., தெளித்தல் உட்பட அதிக மகசூல் பெற பின்பற்ற வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.
வேளாண் உதவி இயக்குநர் சைலஸ் பேசியதாவது: வேளாண்துறை சார்பில் பயறு வகை களின் உற்பத்தியை பெருக்கவும், மக்களின் புரதசத்து தேவையை நிறைவு செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்பாண்டில் ஒருங்கிணைந்த பயறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 எக்டேர் செயல் விளக்கபண்ணைகள் அமைத்திட மானியம் ஒதுக்கப் பட்டுள்ளது. டி.ஏ.பி., உரம், நுண்ணூட்ட சத்துகள் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது என்றார்.
வேளாண் பொறியியல் துறை இளநிலை பொறியாளர் நீலகண்டன் பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும் மானியங்கள் குறித்தும், விவசாயிகள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஒவ்வொரு வியாழக்கிழமையும் பெதப்பம்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் ஆலோசனை மையம் நடத்தப்படுகிறது என்றார்.
ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு குறித்து துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ் பேசினார். வேளாண் அலுவலர் ஷர்மிளாபானு உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 8.பொதுக்குழு கூட்டம்

திருப்பூர் : ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம், திருப்பூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் குடிலில் நடந்தது; தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், "ஓய்வு பெற்ற ஊழியர்களின் குறைகளை தீர்க்க முயற்சி செய்வது; ஊதிய உயர்வின் நிலுவைத் தொகையை மாவட்ட கருவூலம் உடன டியாக வழங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் கலியப் பெருமாள், பொருளாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் சுகுமார், செயலாளர் சுப்பையன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 9.பள்ளி ஆண்டு விழா

திருப்பூர் : பாரதி கிட்ஸ் சேத்ராயம் பள்ளியின் ஒன்பதாவது ஆண்டு விழா, திருப்பூர் சவுடஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது.
குழந்தைகளுக்கான போட்டியை எம்.எல்.ஏ., கோவிந்தசாமி துவக்கி வைத்தார். முதல் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பட்டம் வழங்கப்பட்டது. யோகா, கராத்தே, இசைவாத்திய திறமைகளை மாணவ, மாணவியர் செய்து காட்டினர். பள்ளி ஆண்டு விழா வில், டி.எஸ்.பி., ராஜா பங் கேற்றார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் ஹேம லதா, பள்ளி தலைவர் முத்துச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 10.சிந்தனை மன்ற கூட்டம்

திருப்பூர் : சிந்தனை மன்ற கூட்டம், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடந்தது.
சமுதாய நிகழ்வுகள், ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட சமுக பிரச்னைகளை மாணவியர் தெரிந்து கொள்ள, இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிஷா, மண், கர்ண மோட்சம் என்பன உள்ளிட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. பதியம் இலக்கிய தளத்தின் தலைவர் பாரதிவாசன், மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
Top
* 11.தக்காளி வரத்து அதிகம் விலையும் குறைந்தது

திருப்பூர் : கோடை காலம் துவங்கி விட்டதால், தோட்டங்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால், மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ளது.
திருப்பூரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு பொங்கலூர், கொடுவாய், பெருந்தொழுவு போன்ற கிராமங்களில் இருந்து தக்காளி மற்றும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. ஜன., மாதத்தில், தக்காளி விளைச்சல் குறைவாக இருந்ததால், மார்க்கெட்டுகளில் கிலோவுக்கு 12 ரூபாய் வரை விலை கிடைத்தது. சில்லரை விற்பனையில், கிலோ 20 ரூபாய்க்கும் அதிகமானது.
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, மூகூர்த்த சீசனாக இருந்ததால் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பிப்., மாதம் துவக்கத்தில் இருந்து தக்காளி விளைச்சல் அதிகரித்தது; தற்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், அனைத்து பகுதியிலும் இருந்து மார்க் கெட்டுகளுக்கு தக்காளி வரத்து உள்ளது. இதனால், விலையும் குறையத்துவங்கிஉள்ளது.
தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று தக்காளி வரத்து அதிகம் இருந்ததால், ஆறு கிலோ கொண்ட கூடை 15 ரூபாய் வரை விற்பனையானது. கடைகளில் சில்லரை விற்பனையாளர்கள் ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் வரை விற்பனை செய்தனர். தொடர்ந்து வரத்து அதிகரித்தால், விலை இன்னும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Top
* 12.இலக்கியம் படித்தால் மனம் பக்குவப்படும்'

திருப்பூர் : ""அறிவியல் படிப்பு புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவும்; இலக்கியம் படித்தால் மனம் பக்குவப்படும். ஆங்கிலத்தை படிக்காமல் தவிர்க்க முடியாது; அதே சமயம் தமிழ் மொழியும் முக்கியம்,'' என தமிழ்நாடு தேர்வாணையத்துறை உறுப்பினர் சுப்ரமணியம் பேசினார். பெருமாநல்லூர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி ஆண்டு விழா, "ஸ்பிரிட்சர் 2010' கொண்டாடப்பட்டது; பள்ளி தாளாளர் மனோகரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு தேர்வாணையத்துறை உறுப்பினர் சுப்ரமணியம் பேசியதாவது: கல்வியில் சிறந்து விளங்கும்போது, மதிப்பும் உயர்கிறது. அறிவியல் பாடத்துக்கு முக்கியத்துவம் தந்து படிப்பது போல், மொழிப்பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அறிவியல் படிப்பு புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவும்; இலக்கியம் படித்தால் மனம் பக்குவப்படும். ஆங்கிலத்தை படிக்காமல் தவிர்க்க முடியாது; அதேசமயம் தமிழ் மொழியும் முக்கியம். விருப்பமானதை விளைவிக்கும் ஆற்றலை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். 14 வயதுக்கு உட்பட்டோர் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. ஏழை மாணவர்கள் வாழ்வில் மேம்பட கட்டாயம் கல்வி கற்ற வேண்டும்.
அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி தர அரசு பள்ளிகளால் மட்டும் முடியாது. எனவே தான் தனியார் பள்ளிகள் வரத்துவங்கின. இப்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை விட, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகின்றனர், என்றார்.
தொடர்ந்து, விளையாட்டு போட்டி மற்றும் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. குழந்தைகளின் கலை நிகழ்ச்சி மற்றும் நாடகம் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ரேவதி, கோவை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் நடராஜன், கல்லூரி கல்வி இயக்ககத்தின் முன்னாள் இயக்குனர் குமாரசாமி, கோவை சட்டக்கல்லூரி பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், விக்னேஷ்வரா நர்சிங் ஹோம் தேவராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 13.மாவட்ட அளவில் கராத்தே போட்டி

திருப்பூர் : திருப்பூர் ரோட்டரி கிளப் மற்றும் கிங் ஆப் கராத்தே சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, ராயபுரம் ரோட்டரி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு அனைத்து தற்காப்பு கலைகள் சம்மேளன மாநில தலைவர் அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார்.
போட்டியில், 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 6-7 வயது கட்டா பிரிவில் ஜெய்சன் நர்சரி, பிரைமரி பள்ளி மாணவி பரணி மற்றும் 10 வயது பிரிவில் மாணவன் கார்த்திக் முதல் பரிசு பெற்றனர். 11-13 வயது மாணவியர் பிரிவில், சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவன் ஜெயசூர்யா மற்றும் மாணவர்கள் பிரிவில் பிஷப் உபகாரசாமி பள்ளி மாணவன் பாலசுப்ரமணியம் முதல் பரிசை வென்றனர். பிளாக் பெல்ட் பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி மாணவி பானுபிரதாப்நேகி முதல் பரிசை பெற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டி.எஸ்.பி., ராஜா, சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். ரோட்டரி கிளப் உதவி கவர்னர் விவேகானந்தா, தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள் நாகேஷ், செந்தில், தங்கமணி, தற்காப்பு கலைகள் சம்மேளன மாவட்ட தலைவர் ராஜா, கிங் ஆப் கராத்தே சங்க இயக்குனர் கமலிகா உட்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 14.சாயப்பட்டறைக்கு மின் சலுகை அளிக்க பா.ஜ., வலியுறுத்தல்

திருப்பூர் : "சாயப்பட்டறைகளுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை எதிர்த்து இரண்டு லட்சம் கையெழுத்து பெற வேண்டும்' என்றும் திருப்பூர் பா.ஜ., செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம், அனுப்பர்பாளையத்தில் நடந்தது; மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூட்டத்தில், "சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு, மத்திய அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளது போதுமானதாக இல்லை; கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து இயங்க, சாயப்பட்டறைகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும்.
"ஏழை, எளிய மக்கள் பாதிக்கும் வகையில் விலைவாசி உயர்வு உள்ளது. விலை உயர்வை கண்டித்து, பாஜ. சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. திருப்பூர் பா.ஜ., சார்பில் இரண்டு லட்சம் கையெழுத்து பெற்று அனுப்புவது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர் ராஜகோபால், பொது செயலாளர்கள் விஜயராகவன், ருத்ரகுமார், மாவட்ட செயலாளர்கள் விஜயகுமார், தமிழ் செல்வன், செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Top
* 15.கோவில்களை இடிப்பதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு

திருப்பூர் : ரோடு அகலப்படுத்தும் பணி என்ற பெயரால், தொடர்ந்து கோவில்களை இடித்து வந்தால், நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.
இந்து முன்னணி வடக்கு மாநகர் செயற்குழு கூட்டம், திருப்பூரில் நடந்தது; மாவட்ட செயலாளர் பாலமுருகன் வழிகாட்டுதல்படி, நடந்தது. கூட்டத்தில், "ரோடுகளை அகலப்படுத்தும் பணி என்ற பெயரால், கோவில்கள் இடிக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை மற்றும் திருப்பூர் மேயர் செல்வராஜ் ஆகியோரை கண்டித்தும், இதே நிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்,' என முடிவு செய்யப்பட்டது. நகர செயலாளர்கள் சுரேஷ், கேசவன், குமார், துணை தலைவர் ரவி, பொறுப்பாளர்கள் பெருமாள், ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Top
* 16.இளைஞர் காங்கிரஸ் தேர்தல் விறுவிறுப்பு

திருப்பூர் : திருப்பூர் தெற்கு தொகுதிக்கான இளைஞர் காங்., உட்கட்சி தேர்தல் நேற்று விறுவிறுப்பாக துவங்கியது.
இளைஞர் காங்., உட்கட்சி தேர்தல், நாடு முழுவதும் நடந்து வருகிறது. திருப்பூர் தெற்கு தொகுதிக்கான தேர்தல், நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது. திருப்பூர் மாநகராட்சி 21வது முதல் 52வது வார்டு வரை, நல்லூர் நகராட்சியில் 15 வார்டுகள் என 47 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. நேற்றைய தேர்தலில் காங்., தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓட்டை பதிவு செய்தனர். தேர்தலில் 400க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலில் 3,000க்கும் அதிகமான வாக்காளர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊராட்சி மற்றும் நகராட்சியில் வார்டுக்கு ஐந்து பேர் கொண்ட கமிட்டி, மாநகராட்சியில் 10 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுக்கப்படுகிறது. தலைவர், துணை தலைவர், பெண் பொது செயலாளர், சிறுபான்மையினர் பொது செயலாளர், தாழ்த்தப்பட்டோருக்கான பொது செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
திருப்பூர் நகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் துணை மேயர் செந்தில்குமார் அணிக்கும், முன்னாள் தேசிய செயலாளர் கோபி அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நல்லூர் நகராட்சியின் 15 வார்டுகளில் நடந்த உட்கட்சி தேர்தலில், நகராட்சி தலைவர் விஜயலட்சுமி அணி மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் தங்கவேல் அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டியால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Top
* 17.வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 21 தொழில் குழுக்கள்

திருப்பூர் : "பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில், 21 தொழில் குழுக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில், ஏதேனும் ஒரு தொழிலை முன்னாள் ராணுவத்தினர் தேர்வு செய்து பயன்பெறலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பி.எம்.ஆர்.ஓய்., மற்றும் ஆர்.இ.ஜி.பி., ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. ஆறு சிறப்பு அம்சங்களை கொண்ட இத்திட்டத்தில், 21 வகையான தொழில் குழுக்கள் அடங்கியுள்ளன. கைத்தொழில், கிராமப்புற தொழில், தோல் தொழில், பேப்பர் பொருள் தயாரிப்பு, ரப்பர் பொருட்கள் தயாரிப்பு, கட்டட கட்டுமான பொருட்கள் உற்பத்தி, கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் உற்பத்தி, விளையாட்டு சாதனங்கள் தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் பொருட்கள் உற்பத்தி, ஸ்டேஷனரி பொருட்கள், வேளாண் இடுபொருட்கள், பதப்படுத்திய உணவு பொருட்கள், தையல் மற்றும் ஆயத்த ஆடைகள் உற்பத்தி, பட்டுப்புழு வளர்ப்பு, காயர் பொருட்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி போன்ற தொழில் குழுக்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
உற்பத்தி பிரிவில் தொழில் முனைவோருக்கு 25 லட்சம் ரூபாய், சேவைப்பிரிவில் தொழில் முனைவோருக்கு 10 லட்சம் ரூபாய் திட்ட அளவு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டு, அவர்கள் தொழில் துவங்க 95 சதவீதம் வங்கிக்கடனாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 35 சதவீதம் வரை அரசு மானியமாக அனுமதிக்கப்படும். பட்டியலில் இடம் பெற்றுள்ள தொழில்களில் ஏதேனும் ஒரு தொழிலை துவங்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு, கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் மூலம் தேவையான உதவி செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Top
* 18.எல்.பி.எப்., நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர் : தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எல்.பி.எப்., தொழிற்சங்க, திருப்பூர் மண்டல நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எல்.பி.எப்., பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது; கோவை மண்டல முன்னாள் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். திருப்பூர் மண்டலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மண்டல தலைவராக கண்ணன், துணை தலைவராக பொன்னுசாமி (பொது), பழனியப்பன் (சுமை தூக்குவோர்), செயலாளராக பழனிசாமி, துணை செயலாளராக நாராயணன், பொருளாளராக வேணுகோபால், செயற்குழு உறுப்பினர்களாக கோவிந்தராஜ், தர்மராஜ், கிரிஸ்டோபர், பாலமாணிக்கம், சிங்காரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பனியன் தொழிற்சங்க பொது செயலாளர் ராமகிருஷ்ணன், கோவை மண்டல செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு மின் கழகத் தொழிற்சங்க அமைப்பு செயலாளர் சின்னக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Top
* 19.மருத்துவமனை சுற்றுசுவர் விழும் அபாயம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு, தேங்கியுள்ள கழிவுநீரால் சுற்றுசுவர் விழும் அபாயத்தில் உள்ளது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பஸ்ஸ்டாப்பில் உள்ள டீ ஸ்டால்கள், கடைகளிலிருந்து கழிவு விடப்படும் நீர், மருத்துவமனை முன்புறம் உள்ள சுற்றுசுவரில் தேங்கி நிற்கிறது. பல மாதங்களாக நீர் இப்படி தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மாலை நேரங்களில் கொசு அதிகமாக பரவுகின்றது. இதனை மருத்துவமனை ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.
மழைக்காலங்களில் தண்ணீர் மேலும் அதிகமாக தேங்குவதால், சுற்றுசுவர் விழுந்து விடும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுவராக இருப்பதால் எப்போது வேண்டுமானலும் விழும் அபாயம் உள்ளது. மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து தண்ணீரை வெளியேற்ற குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழாய்கள் ஆங்காங்கு உடைந்துள்ளன. அடுத்த இரண்டு மாடியிலும் சுவரை ஒட்டியபடியே தண்ணீர் விழுகிறது; சுவர் முழுவதும் பாசி பிடித்துள்ளது. கட்டடத்தில் இருக்கும் கான்கீரிட் கம்பிகள் தொடர்ந்து ஈரம் ஆவதால், பலவீனம் அடைய வாய்ப்புள்ளது. கட்டடத்தில் பாதிப்பு ஏற்படும் முன், மருத்துவமனை நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
Top
* 20.நல வாரியங்களில் உறுப்பினர் சேர்க்கை

திருப்பூர் : அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் வகையில், நல வாரிய உறுப்பினராக பதிவு செய்ய, சீர்மரபினருக்கும், நரிக்குறவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நெல்லைவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், சீர்மரபினர் நல வாரியமும் செயல்பட்டு வருகிறது. அதே அமைச்சகத்தின் கீழ், தமிழ்நாடு நரிக்குறவர் வாரியம் செயல்பட்டு வருகிறது.
அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையிலும், சீர் மரபினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். உறுப்பினர்களாக பதிவு செய்பவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரால் அடையாள அட்டை வழங்கப்படும்.
அதே போல், நரிக்குறவர்களுக்கு கல்வி, மாற்றுத் தொழில் புரிவதற்கான உதவி மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க, தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர். தகுதி உடையவர்கள், உறுப்பினராக பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை, திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவர். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top
* 21.லாரி, வேன் வாடகை உயர்வு

திருப்பூர் : டீசல் விலை உயர்வால், லாரி மற்றும் வேன் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.
"திருப்பூர் எக்ஸ்போர்ட் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேசன்' வெளியிட்டுள்ள அறிக்கை: டீசல் விலை உயர்வால், லாரி மற்றும் வேன் வாடகை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top
* 22.கல்குவாரி அருகே குடியிருப்பு மின் இணைப்பு வழங்க முடிவு

திருப்பூர் : "கல்குவாரி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கலாம்,' என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து, பல ஆண்டுகளாக நீடித்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி மற்றும் திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் கணபதி நகர், நெசவாளர் காலனி அருகே கல்குவாரி உள்ளது. கல்குவாரிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை. மாவட்ட நிர்வாகம் வரை புகார் தெரிவித்தும், பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடித்தது. கடந்த மாதம் 19ம் தேதி, அப்பகுதி மக்கள் டி.ஆர்.ஓ., முரளிதரனிடம் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணை 23ம் தேதி நடக்கும் என, தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் குடியிருப்பு பகுதி மக்கள் மட்டுமே வந்திருந்தனர்; கல்குவாரி தரப்பில் இருந்து யாரும் வரவில்லை.
இதனால், குடியிருப்பு பகுதி மக்களிடம், அவர்கள் தரப்பு கருத்துக்களை கேட்ட ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன், கல்குவாரி நிர்வாகம், பொதுமக்கள், மின்வாரியம் என மூன்று தரப்பினரும் பங்கேற்கும் விசாரணை கூட்டம் பிப்., 26ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்தார். அன்று நடந்த கூட்டத்தில், இருதரப்பு விளக்கங்களை கேட்ட அவர், பேச்சுவார்த்தையை மார்ச் 5க்கு ஒத்திவைத்தார்.
அன்றைய தினம் நடந்த பேச்சுவார்த்தையில், "குவாரியை காரணம் காட்டி, மின் இணைப்பு தர மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது; தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, குவாரி உரிமத்தை ரத்து செய்து விட்டாவது, மின் இணைப்பு வழங்க வேண்டும்' என்று பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அனைவரின் கருத்துக்களையும் பதிவு செய்த அதிகாரிகள், "கல்குவாரிக்கு அருகே உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கலாம்; அதற்கு, மின்வாரித்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தனர்.
Top
* 23.மலை வாழ் மக்களுக்கு விரைவில் மாற்று இடம்

உடுமலை : "மலைவாழ் மக்களுக்கு ஒரு வாரத்துக்குள் மாற்று இடம் தேர்வு செய்யப்படும்' என, அமைதி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உடுமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட குழிப்பட்டியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. சந்தன மரங்கள் நிறைந்த இப்பகுதியில், திடீரென மலைவாழ் மக்கள் மரம், செடிகளை வெட்டி குடியிருப்பு அமைத்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்த அமைதி கூட்டம், உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உடுமலை ஆர்.டி.ஓ., சோமசேகரன் தலைமை வகித்தார். தாசில்தார் கணபதி, உதவி வனப்பாதுகாவலர் தியாகராஜன், உடுமலை வனச்சரகர் சரவணன் மற்றும் மலைவாழ் மக்கள் பங்கேற்றனர்.
"குடியிருப்புக்கு மட்டுமே அதிகபட்சம் ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்படும்; கூடுதலாக வனத்தை அழித்து விவசாயம் செய்ய அனுமதிக்க முடியாது; சம்பந்தப்பட்ட இடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்து, அரசு அனுமதி பெற்று குடியிருப்புக்கு இடம் ஒதுக்குவது' என, முடிவு செய்யப்பட்டது. இப்பணியை இரு தரப்பும் ஒரு வாரத்துக்குள் சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Top
* 24.மரக்கன்று வழங்கும் விழா

திருப்பூர் : சுற்றுப்புறச்சூழல் வார விழாவையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மரக்கன்றுகள் வழங்கும் விழா, திருப்பூர் பிரண்ட் லைன் பள்ளியில் நடந்தது.
சுற்றுப்புறச்சூழல் வாரம், திருப்பூர் பிரண்ட் லைன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், மார்ச் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டது. துவக்க விழாவில், ரோட் டரி முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன் பங்கேற் றார். பள்ளி குழந்தைகளுக்கு 3,000 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வனவாழ் உயிரினங்கள் அழிந்து வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வனவிலங்குகள் போல் குழந்தைகள் மாறுவேடம் அணிந்து, கலை நிகழ்ச்சி நடத்திக் காட்டின.
Top

பிரச்னைகள்

* 1.உழவர் சந்தை நேரத்தில் இடையூறு : விவசாயிகளுக்கு பாதிப்பு

திருப்பூர் : திருப்பூரில் உழவர் சந்தை செயல்படும் நேரத்தில், வியாபாரிகள் காய்கறி விற்பனை செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் நேரத்தில், சந்தையின் வெளிப் பகுதியில் வியாபாரிகளின் காய்கறி விற்பனை நடக்கிறது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித் துள்ளனர். காய்கறி விலை வீழ்ச்சி அடையும் போது, விவசாயிகள் சோர்வடைகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: தெற்கு உழவர் சந்தையின் வெளிப்புறப் பகுதியில், காலை நேரங்களில் அதிகமான கடைகள் செயல்படுவதால், உழவர் சந்தை விற்பனை பாதிப்படைகிறது. பொங்கலூர், பல்லடம், என சுற்றுப்பகுதிகளில் இருந்து உழவர் சந்தைக்கு விவசாயிகள் காய்கறி கொண்டு வருகின்றனர். காலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை விற்பனை சூடாக நடக்கிறது.
உழவர் சந்தை செயல்பட துவங்கும் அதிகாலை நேரத்திலேயே வியாபாரிகளும் காய்கறி விற்பனையை துவக்கி விடுகின்றனர். உழவர் சந்தை ரோடு, பல்லடம் ரோடு பகுதிகளில், உழவர் சந்தை செயல்படும் நேரத்தில் விற்பனை நடக்கிறது. சந்தைக்கு நுகர்வோர் வரும் பாதையில் விற்பனை நடப்பதால், சந்தைக்குள் வரும் நுகர்வோர் எண்ணிக்கை குறைந்து விடுகிறது.
விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளின் விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது. பகலில் காய்கறிகளை பறித்து, அதிகாலை 2.00 மணி முதல் கிராமங்களில் இருந்து காய்கறி எடுத்து வருகின்றனர்; இரவு, பகல் பார்க்காமல் உழைக்கும் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போது, வெளிப் புறங்களில் விற்பனை செய்வது வருத்தம் அளிக்கிறது. உழவர் சந்தை நேரத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு வியாபாரிகளின் விற்பனையை தடை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.
Top
* 2.பொது இடங்களில் 'குடி'மகன்கள் தொல்லை : ரோடுகளில் மது குடிப்பதால் பெண்கள் அச்சம்

திருப்பூர் : "டாஸ்மாக்' மதுக்கடை பார்களில் கூட்டம் அதிகரித்தால், ரோடுகளில் அமர்ந்து மது குடிப்பதை "குடி'மகன் கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்; அவ்வழியாகச் சென்றுவர பெண்கள் அச்சப்படுகின்றனர்.
திருப்பூரில், சில மதுக்கடைகளுக்கு அருகில் விசாலமான பார்கள் செயல்படுகின்றன. சில பகுதிகளில் சிறிய அளவிலான பார்கள் உள்ளன. 15 முதல் 20 பேர் மட்டுமே அமர்ந்து மது குடிக்க முடியும். 10 பேர் வரை நின்று கொண்டு மது குடிக்கலாம். சனி மற்றும் ஞாயிறுக்கிழமை களிலும், விசேஷ தினங்களிலும் பார்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. நண்பர்களாக வரும் கூட்டம், மணிக்கணக்கில் அமர்ந்து பேசிக்கொண்டே, போதை ஏற்றுவ தால், பாரில் மற்ற "குடி'மகன்களுக்கு உட்கார இடம் இருப்பதில்லை.
இத்தகைய நேரங்களில், மதுக் கடையை ஒட்டிக்காணப்படும் கடைகளின் முன்பகுதிகள் மற்றும் வீதியோரங்கள், ரோடுகளில் மது பாட்டில்கள், நொறுக்கு தீனி வகைளுடன் வட்டமாக அமர்ந்து மது குடிப்பதை "குடி'மகன்கள் பலரும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். சனிக்கிழமை இரவிலும், ஞாயிறுக் கிழமைகளில் பகலிலும் ரோடுகளை ஆக்கிரமித்து பலரும் மது குடிக்கின்றனர்.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, எஸ்.வி., காலனி, தாராபுரம் ரோடு, கருவம்பாளையம், செல்லம் நகர், குமார் நகர், பாளையக்காடு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள "டாஸ் மாக்' பார்களின் முன், ரோடுகளில் மது குடிப்பது அதிகரித்து வருகிறது.
போதை தலைக்கேறிய சிலர், தகாத வார்த்தைகளை சத்தமாக பேசி கூச்சலிடுவதும், ரோட்டில் வந்து செல்பவர்களிடம் வம்பு செய்வதும் தொடர்கிறது."குடி'மகன்கள் ஆக்கிரமித்திருக்கும் பகுதிகள் வழியாக பெண்கள் சென்று வரவே அச்சப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. பனியன் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில், வேலைக்குச் சென்று வரும் பெண் தொழிலாளர்கள் "குடி'மகன்களின் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.
மது குடித்துவிட்டு காலி பாட்டில் களை ரோட்டிலேயே உடைத்து வீசுவது; அதிக போதையால் ரோட்டிலேயே அலங்கோலமாக விழுந்து கிடப்பதும் தொடர்கிறது. இதுபற்றி, அப்பகுதி கவுன்சிலர்கள் மற்றும் கட்சி சார்ந்தவர்கள், போலீசாரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
"பார்'களில் சுகாதாரமில்லை: "டாஸ்மாக்' மதுக்கடைகளில் நடத் தப்படும் "பார்'கள் சுகாதாரமின்றி செயல்படுகின்றன. உணவு பொருட் கள் சமைக்கப்படும் பகுதிகள் அசுத்தமாக காட்சியளிக்கின்றன. சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், உணவு வகைகளை வைத்திருக்கும் பாத்திரங்கள் அழுக்கடைந்து அருவருக்கத்தக்க நிலையில் உள்ளன. பல பார்களில் கை கழுவும் வசதி இல்லை. இதனால், பலரும் மது அருந்திய பகுதிகளிலேயே கைகளை கழுவுகின்றனர். போதை தலைக்கேறி, சிலர் வாந்தி எடுத்து, பாருக்குள் அசிங்கப்படுத்துகின்றனர். பார்களில் கழிப்பிட வசதி இல்லாததால், பாருக்கு ஒட்டிய பகுதிகளை, சுவரோரங்களை சிறுநீர் கழிப் பிடமாக பயன்படுத்தி அசுத்தப் படுத்துகின்றனர்.
Top
* 3.அமராவதி அணை நீர்மட்டம் சரிவு : நெற்பயிர் சாகுபடிக்கு திடீர் சிக்கல்

உடுமலை : அமராவதி அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகும் அபாய சூழ்நிலை நிலவுகிறது.
உடுமலை அருகே கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. கல்லாபுரம் ராஜவாய்க்கால் பாசனத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன. கல்லாபுரம் பகுதிக்கு அமராவதி அணையிலிருந்து 10 மாதங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் கிடைப்பதால், விவசாயிகள் மற்ற பயிர்கள் சாகுபடியை விட நெற் பயிர் சாகுபடி செய்ய அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர்.
பழைய ஆயக்கட்டு பாசனத்தில் குறுவை, சம்பா என ஆண்டிற்கு இரண்டு பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற வகையில் நெல் ரகங்கள் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் போக நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், நெல் பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காமல் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: கல்லாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், பல ஆண்டுகளாக ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற் பயிர்சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஒப்பந்த அடிப்படையில் கூலி வழங்கப்படுகிறது.
நெல் நடவு செய்த மாதத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு பிறகு அறுவடை நடைபெறும். ஆண்டுதோறும் அறுவடை செய்யப்படும் நெல் வியாபாரிகள் மூலமாக தாராபுரம், கரூர், கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த நவ., மாதம் போதிய அளவு தண்ணீர் இருந்ததால், நெற் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், போதிய தண்ணீர் கிடைக் குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது, 130 நாட்கள் பயிரான நெல் பால் பிடிக்கும் தருணத்தில் உள் ளது. நெற் பயிர்களுக்கு 20 நாட்களுக்கு மேல் தண்ணீர் வேண்டும். ஆனால், தற்போதுள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் குறைந்ததால், போதிய தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காவிட் டால், கருகும் அபாயம் உள்ளது. ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சாகுபடி செய்த நெற் பயிர்கள் அறுவடை தருணத்தில் போதிய தண்ணீர் கிடைக்காவிட்டால், மகசூல் பாதித்து நஷ்டம் ஏற்படும் இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
Top
* 4.தேர்வு முடிந்ததும் புத்தகத்தைக் கிழித்து ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் மாணவர்கள்

திருப்பூர் : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்து, மையங்களில் இருந்து வெளிவரும் மாணவர்கள் புத்தகம், கேள்வித்தாள் உள்ளிட்ட காகிதங்களை கிழித்தெரியும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர். ரோட்டில் குப்பை ஏற்படுவதோடு, பொதுமக்களின் அதிருப்திக்கும் ஆளாகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த முதல் தேதி துவங்கி, நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத் தேர்வுகள் முடிந்துள்ளன. பிளஸ் 2 மதிப்பெண்கள் முக்கியமான ஒன்று என்பதால், அனைத்து மாணவர்களும் ஆண்டு முழுவதும், போராடி படிக்கின்றனர். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பும், மாணவர்களிடம் அதிக அளவில் திணிக்கப்படுக்கிறது.
இதனால், விளையாட்டு, "டிவி' என தனக்கு விருப்பப்படும் செயல்களில் ஈடுபடுவதை குறைத்துக்கொண்டு ஓராண்டு முழுவதும் படிப்பில் கவனத்தை செலுத்துக்கின்றனர். ஆர்வமாக படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற எதிர்பார்ப்புகள் உந்துதலாக இருந்தாலும், சராசரியாக படிக்கும் மாணவர்களுக்கு, படிப்பில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்களுக்கும், இது மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது.
தேர்வுகள் நெருங்கி வருகையில், காலை, மாலை என அதிக நேரம் படிப்பிற்கு ஒதுக்குவதோடு, பயமும் அதிகரிக்கிறது. ஒரு வித பயத்துடன் தேர்வை எழுதி முடித்து வெளியே வரும்போது, மகிழ்ச்சியில் நண்பர்களுடன் சேர்ந்து பாடப் புத்தகங்கள், நோட்டு, கேள்வித்தாள் ஆகியவற்றை கிழித்து ரோட்டில் தூக்கி எறிகின்றனர்.
இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயலை பார்க்கும் பொதுமக்கள், மாணவர்கள் மீது அதிருப்தி அடைகின்றனர். படித்த புத்தகங்களை பத்திரமாக சேமித்து வைத்தால், உயர்கல்வியின்போது, சிறு சந்தேகங்களுக்கு உதவிகரமாக இருக்கும். குறைந்தபட்சம் அடுத்து வரும் இளம் மாணவர்களுக்கு அந்தப் புத்தகங்களை இலவசமாக வழங்கலாம். ஒரு புத்தகத்தைத் தயாரிக்க எத்தனை மரங்களை அழிக்க வேண்டி உள்ளது, என்பதை மாணவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
தேர்வு முடிந்து விட்டதற்காக புத்தகங்களைக் கிழித்து வீதியில் வீசி, குப்பை ஏற்படுத்துகின்றனர். புத்தகத்தைக் கிழிப்பது, கற்ற கல்வியின் மதிப்பைக் கிழிப்பதற்கு சமம். இயற்கை விரோதச் செயலும் கூட. இதுகுறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
Top

சம்பவம்

* 1.இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

பல்லடம் :பல்லடம் அருகே தீக்குளித்த இளம்பெண் உயிருக்கு போராடி வருகிறார். மனைவியை காப்பாற்றச் சென்ற கணவரும் காயம் அடைந்தார்.
பல்லடம் அருகே சின்னக்கரையில் உள்ள டையிங் கம்பெனியில் வேலை பார்ப்பவர் நந்தகோபால் (30); நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜெயந்தியை(27) காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் உள்ள மண்ணெண்ணெயை ஜெயந்தி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். படுகாயம் அடைந்த அவர், உயிருக்கு போராடி வருகிறார். காப்பாற்றச் சென்ற நந்தகோபாலுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஜெயந்தி தீவைத்துக்கொண்டதற்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Top
* 2.டையிங் கம்பெனியில் தீ விபத்து : சாயமிட இருந்த துணிகள் சேதம்

பல்லடம் : பல்லடம் அருகே தனியார் டையிங் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பலாயின.
கரைப்புதூர் ஊராட் சிக்கு உட்பட்ட குன்னாங் கல்பாளையத்தில் டையிங் கம்பெனி நடத்தி வருபவர் லோகநாதன். இவரது கம்பெனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் வேலை பார்க்கின்றனர். நேற்று அதிகாலை 5.20 மணிக்கு சாயமிட இருப்பு வைக்கப்பட்டிருந்த துணிகள் அறை தீப்பிடித்து எரிந்தது.
இதைப்பார்த்த ஊழியர்கள், கம்பெனியில் இருந்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சென்றன.
நிலைய அலுவலர்கள் ஆறுமுகம் பூமாலை, மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஐந்து மணி நேரம் போராடி தீயைஅணைத்தனர். அருகில் உள்ள இயந்திரங்களில் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும், டையிங் கம் பெனிக்கு சாயம்போட வந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள், தீயில் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Top
* 3.மின் கம்பி உரசியதால் தீ விபத்து : கடை, வீடுகள் எரிந்து சாம்பல்

மடத்துக்குளம் : உடுமலை அருகே நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடை மற்றும் மூன்று வீடுகள் எரிந்து சாம்பலாயின.
கணியூர் அருகே உள்ள அரியநாச்சிபாளையம் புதூர் மடம் பஸ் ஸ்டாப் அருகே கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கடையில், நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. யாரும் கவனிக்காததால், அருகில் இருந்து பல கடைகளுக்கு தீ பரவியது. நள்ளிரவில் தீ பரவியதால், தீயின் வெப்பம் அருகில் இருந்த வீடுகளையும் தாக்கியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து, தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் பல கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீ பரவியது. உடனடியாக, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரவு 1.00 மணி முதல் 3.30 மணி வரை எரிந்த தீயில், கணியூர் - காரத்தொழுவு ரோடு மற்றும் கடத்தூர் ரோட்டிலுள்ள பல கடைகள் பாதிக்கப்பட்டன. சுப்ரமணி, அய்யாசாமி, பொன்னுசாமி ஆகியோரது வீடுகளும், ஒரு டீக்கடையும் முழுமையாக எரிந்து சாம்பலாயின; பல கடைகள் பாதி எரிந்த நிலையில் தப்பித்தன.
கணியூரில் உள்ள மெயின் ரோட்டின் இருபுறமும் மின்கம்பங்கள் உள்ளன. கடை மற்றும் குடியிருப்புகளுக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் பழுதடைந்தும், அறுந்தும், மின்வாரியத்தால் பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. மோசமான நிலையில் இருந்த மின் கம்பிகள் உரசி, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Top
* 4.ஓட்டல்களில் போலீசார் 'ரெய்டு' : 111 மது பாட்டில்கள் சிக்கின

திருப்பூர் : திருப்பூரில் உள்ள சில ஓட்டல்களில் நேற்று முன்தினம் இரவு போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
திருப்பூரில், நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில், ரிங் ரோடுகளில் "குடில்' ரெஸ்டாரண்டுகள் செயல்படுகின்றன. இவற்றில், மதுவகைகளும் விற்கப்படுகின்றன. இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, திருப்பூரில் உள்ள சில ரெஸ்டாரண்டுகளில் போலீசார் சோதனை நடத்தினர். தாராபுரம் ரோட்டில் உள்ள ரெஸ்டாரண்டில் "குவாட்டர்' மது பாட்டில்கள் 38, 90 மி.லி., மது பாட்டில்கள் 2, "ஆப்' மது பாட்டில்கள் இரண்டு கைப்பற்றப்பட்டன. அனுமதியின்றி மதுவிற்ற ரெஸ்டாரண்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் (40), செந்தில்குமாரை (31) தெற்கு போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம் போலீசார், சிறுபூலுவப்பட்டி ரிங் ரோட்டில் நடத்திய சோதனையில், அப்பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டில் நான்கு பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்; மது விற்ற எம்.எஸ்., நகரைச் சேர்ந்த முருகனை (40) கைது செய்தனர். அதே பகுதியில் உள்ள மற்றொரு ரெஸ்டாரண்டில் நடத்திய சோதனையில், ஐந்து பீர் பாட்டில்கள் சிக்கின. 15 வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரைச் சேர்ந்த சபாபதியை (40) கைது செய்தனர்.
திருப்பூர் தெற்கு போலீசார், செல்லம் நகர் பகுதியில் நடத்திய சோதனையில், செல்லம் நகர் நால்ரோட்டில் மதுக்கடைக்கு அருகில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், 52 "குவார்ட்டர்' பாட்டல்கள், 8 பீர் பாட்டில்கள் சிக்கின; மதுவிற்ற, சுரேஷை (24) போலீசார் கைது செய்தனர்.
Top
* 5.செங்கல் தயாரிக்க மண் கடத்தல்

உடுமலை : செங்கல் உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக, உடுமலை அருகே குளத்தில் இருந்து மண் கடத்தப்பட்டுள்ளது.
உடுமலை அருகே உள்ள மருள்பட்டியில், 104 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது. உரல்பட்டி, மலையாண்டிகவுண்டனூர், பள்ளிவலசு, சாளரப்பட்டி, சாமராயபட்டி, கருப்பட்டிபாளையம் உட்பட 800 ஏக்கர் சுற்றளவு கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான கிணறுகளுக்கு பயனளித்து வருகிறது.
ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும் இக்குளத்தில், கோடை காலம் காரணமாக தற்போது தண்ணீர் தேங்கும் பரப்பளவு குறைந்துள்ளது. இக்குளத்தின் மண், செம்மண்ணாகவும், வண்டல் கலந்து காணப்படுவதாலும், செங்கல் உற்பத்திக்கு தரமான மண்ணாக பயன்படும். உடுமலை பகுதிகளில் உள்ள குளங்களில் மண் திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பல், இக்குளத்தின் மண்ணையும் சுரண்டியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில், ஜெ.சி.பி., இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டு, டிராக்டர்கள், டிப்பர் லாரிகள் மூலம் கடத்தப்பட்டது. செங்கல் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு ஒரு லோடு மண் 2,000 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. தினமும் பல லாரிகள் மூலம் மண் அள்ளப்படுவது குறித்து இப்பகுதி விவசாயிகள் கேட்டபோது, வருவாய்த்துறையினரிடம் மண் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது' என கூறி பல இடங்களில் மண் அள்ளப்பட்டதால், குளத்தில் பல இடங்களில் 30 அடி ஆழம் வரை குழி ஏற்பட்டுள்ளது.
மேலும், குளத்தின் கரைகளாக இருந்த மண் அள்ளப்பட்டதோடு, குளத்தில் இயற்கையான நில அமைப்பையே மாற்றும் வகையில், தரமான மண் இருக்கும் இடத்தில் மட்டும் மண் அள்ளப்பட்டதால், மிகப்பெரிய குழிகஏற்பட்டுள்ளது. குளத்தின் நீர் வழித்தடத்திலேயே மண் எடுக்கப்பட்டது. இதனால், குளத்தின் நீர் வழித்தடங்கள் மாறும் நிலை ஏற்பட்டதோடு, குளத்தின் பாதியளவு பரப்பளவு தண்ணீர் தேங்க முடியாத அளவிற்கு மாறியது. மேலும், குளத்தின் நிலப்பகுதி பாறை மற்றும் சுண்ணாம்பு பாறை நிறைந்த பகுதியாக உள்ளதால், தொடர்ந்து மண் அள்ளப்பட்டால் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்காமல் வீணாகும் அபாயமும் உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள், வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
இரண்டு நாள் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், வாகனங்களை பறிமுதல் செய்யாமல், மண் எடுக்க கூடாது என கூறிவிட்டு சென்றனர். ஆனால், தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் மண் கடத்தலில் ஈடுபட்டு வருகிறது. இது வரை , பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஆயிரம் லோடு மண் கடத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Top
* 6.ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, பாரத அன்னையர் பேரவை சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். பொது செயலாளர் நடராஜ் முன்னிலை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் ராஜா, செயலாளர்கள் கதிரவன், ரஞ்சித், மூர்த்தி உள்பட நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
Top
* 7.மனிதநேய கட்சியினர் பல்லடத்தில் மறியல்

பல்லடம் : பூரண மதுவிலக்கு கோரி, மனிதநேய மக்கள் கட்சியினர் பல்லடத்தில் "டாஸ்மாக்' மதுக்கடை முன் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்; 90 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூரண மது விலக்கு கோரி, பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள "டாஸ்மாக்' மதுக்கடை முன் மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஹாலுதீன், நகர செயலாளர் அன்சாரி உட்பட 90 பேரை, பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment