* 1.மத்திய அமைச்சர் தகவல் மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல் ரூ.1.35 கோடியில் வளர்ச்சி பணி
நாமக்கல்: ""மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் 1.35 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன் பேசினார்.நாமக்கல் அடுத்த மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் தமிழக அரசின் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது. டவுன் பஞ்சாயத்து சேர்மன் திருமலை வரவேற்றார். யூனியன் சேர்மன் குப்புசாமி, துணை கலெக்டர் பழனியப்பன், ஆர்.டி.ஓ., சடையாண்டி, தாசில்தார் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் காந்திச்செல்வன், 6,166 பேருக்கு இலவச கலர் "டிவி' வழங்கி பேசியதாவது:தமிழக முதல்வர் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்களை பல்வேறு மாநில முதல்வர்கள் பின்பற்றி வருகின்றனர்.உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக காப்பீட்டு திட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாழும் ஏழை மக்கள் குடிசை வீட்டில் வசிக்காமல், கான்கிரீட் வீடுகளில் வாழவேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான் அரசு வீட்டு வசதி திட்டம்.
இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் இப்பகுதியில் 1.35 கோடி ரூபாய் அளவில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்துள்ளது. மாவட்டத்தில் 72 கோடி ரூபாய் மதிப்பில் 3.13 லட்சம் கலர் "டிவி'க்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 14 ஆயிரம் "டிவி'க்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.சட்டசபை துணை சபாநாயகர் துரைசாமி பேசுகையில், ""இந்த டவுன் பஞ்சாயத்தில் குடிநீர் திட்டத்துக்காக 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் கோட்டைமேடு, காலிப்பட்டி, பெரிய, சின்ன கொள்ளப்பட்டி உள்ளிட்ட த்ல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க முடியும். ""எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சங்ககிரி தொகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துக்கள் என முழுவதுமாக 73 ஆயிரத்து 660 "டிவி'க்கள் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். நிகழ்ச்சியில், பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, அரசு அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 2.பெட்ரோல், டீஸல் விலை உயர்வு வாபஸ் பெற தே.மு.தி.க., கோரிக்கை
நாமக்கல்: "மத்திய அரசு அறிவித்துள்ள டீஸல், பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்' என, தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட தே.மு.தி.க., சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்டச் செயலாளர் சம்பத்குமார் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விபரம்:மத்திய அரசு அறிவித்துள்ள பெட்ரோல், டீஸல் விலையை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பென்னாகரம் சட்டசபை இடைத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்துக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் மார்ச் 10ம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, வேட்பாளர் வெற்றி பெற பாடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக அவைத்தலைவர் ராஜா கவுண்டர் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஈஸ்வரன், துணை செயலாளர்கள் பொங்கியண்ணன், வேல் சுப்ரமணி, டாக்டர் இளமதி, செயற்குழு உறுப்பினர் வக்கீல் வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கேப்டன் மன்ற செயலாளர் விஜயன், துணை செயலாளர் ரமேஷ், மாணவர் அணி செயலாளர் வைரமணி, வக்கீல் அணி செயலாளர் ராஜ்குமார், மகளிர் அணி துணை செயலாளர்கள் பாப்பாத்தி, சாந்தி, மீனவர் அணி துணை செயலாளர் பொன்னுசாமி, நகர செயலாளர் வெங்கடாஜலம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Top
* 3.வேலைவாய்ப்பு திருவிழாவில் 700 பேருக்கு பணி நியமன உத்தரவு
ராசிபுரம்: வேலைவாய்ப்பு திருவிழாவில், 700 பேர் பல்வேறு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.ராசிபுரம் முத்தாயம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் சென்னை தொழிற் பழகுனர் மற்றும் பயிற்சி நிறுவனம் (தெற்கு மண்டலம்) சார்பில், வேலைவாய்ப்பு திருவிழா கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ், நோக்கியா, சி.டி.எஸ்., போர்டு, டி.வி.எஸ்., லஷ்மி மெசின் ஒர்க்ஸ், லூகாஸ் டி.வி.எஸ்., சி.ஆர்.ஐ., பம்ப்ஸ், தி ஆட்டோ காம்போணன்ட், சுந்தரம் ஆட்டோ காம்போணன்ட் , கார்போரேண்டம், யுனிவர்சல், பேரிவேர் ரோக்கோ, இன்ஜின் பேக்டரி (மினிஸ்டிரி ஆப் டிஃபன்ஸ்), டேன்ஸம், டி.என்.பி.எல்., பி.எஸ்.என்.எல்., ரானே, டகாடா, சங்வூ, டெல்பி டி.வி.எஸ்., பாக்ஸ்டர் போன்ற 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.முதல் நாள் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் ப்ளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு திருவிழாவில், 1,170 பேர் கலந்து கொண்டனர்.
அதில், 478 பேர் பல்வேறு நிறுவனங்களால் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இரண்டாம் நாள் நடந்த முகாமில், 1,327 இன்ஜினியரிங் பட்டதாரிகள் பங்கேற்றனர். அதில், 220 பேர் பல்வேறு நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி நிர்வாக அறங்காவலர் குணசேகரன், கல்லூரி முதல்வர் மாதேஸ்வரன், சென்னை அப்ரண்டீஸ் சுரேஷ்குமார், உதவி இயக்குனர் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை பேராசிரியர் சரவணராஜ், பரத் சவுலே, வேலைவாய்ப்புத்துறை நிர்வாகி ராஜா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரில்லா பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் ஆகியோர் செய்திருந்தனர்.
Top
* 4.198 வீடு கட்டும் பணி விரைவில் நிறைவு குடிசை மாற்று வாரிய அமைச்சர் தகவல்
நாமக்கல்: "குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 198 வீடுகள் கட்டும் பணி அடுத்த மாதம் முடிவடையும்' என, அமைச்சர் தங்கவேலன் ஆய்வின் போது கூறினார். நாமக்கல் நகராட்சி பகுதியில் சாலையோரங்களில் சுகாதார வசதியின்றி வசித்து வரும் மக்கள் பயன்பெறும் வகையில், ரெட்டிப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எஸ்.கே.நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி கட்டடம் கட்டுப்பட்டு வருகிறது. அதற்காக 5.08 கோடி ரூபாய் மதிப்பில் 198 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளது. கட்டுமான பணிகளை குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் தங்கவேலன் திடீர் ஆய்வு செய்தார்.
"கட்டுமான பணிகள் தரமானதாகவும், விரைவிலும் முடிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், அருகில் கரடு இருப்பதால் வெப்பம் அதிகம் வர உள்ளது. அதை தடுக்க அடுக்குமாடி குடியிருப்புகள் முழுவதும் மரக்கன்று நடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.மேலும், அமைச்சர் கட்டட வளாகத்தில் மரக்கன்று நட்டார். ஆய்வின் போது குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ரத்தினவேலு, உதவி பொறியாளர் பழனிவேல், ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பாலு உள்பட பலர் உடனிருந்தனர்.அதை தொடர்ந்து அமைச்சர் தங்கவேலன், நிருபர்களிடம் கூறும்போது, ""குடிசை மாற்று வாரியம் சார்பில் 198 வீடுகள் அடுக்குமாடிகளாக கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீடுகளும் 220 சதுர அடி கொண்டவை. அதில் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் ஏப்ரலில் முடிவடையும். மே மாதம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடி அமர்த்தப்படுவர்,'' என்றார்.
Top
பொது
* 1.செல்வம் கல்லூரியில் மண்டல தடகள போட்டி
நாமக்கல்: கோவை அண்ணா பல்கலை சார்பில், நாமக்கல் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் மண்டல அளவிலான தடகள போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தது.செல்வம் கல்வி நிறுவன தாளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கவித்ரா நந்தினி, கல்லூரி முதல்வர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் மண்டல அளவில் இருந்து பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தொடர் ஓட்டம், நீளம், உயரம் மற்றும் குதித்து எட்டி தாண்டுதல், தட்டு, ஈட்டி மற்றும் குண்டு எறிதல், 5 கி.மீ., தூர நடைபோட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் செய்திருந்தார்.
Top
* 2.பி.ஜி.பி., பாலிடெக்னிக் மாணவர்கள் சாதனை
நாமக்கல்: பி.ஜி.பி., பாலிடெக்னிக் மாணவர்கள் தேசிய அளவிலான புராஜெக்ட் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். எருமப்பட்டி அன்னை மாதாம்மாள் ஷீலா இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய அளவிலான புராஜெக்ட் போட்டி நடந்தது. கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று 60 புராஜெக்டுகளை சமர்ப்பித்தனர். நாமக்கல் பி.ஜி.பி., பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் சமர்ப்பித்த புராஜெக்ட், சிறந்த புராஜெக்டாக தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசை பெற்றது. மாணவர்களுக்கு பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது. வென்ற மாணவர்களை கல்லூரி நிறுவனர் பழனி பெரியசாமி, தாளாளர் கணபதி, இன்ஜி., கல்லூரி முதல்வர் விவேகானந்தன், பாலிடெக்னிக் முதல்வர் (பொறுப்பு) அபிஷேக் ஆகியோர் பாராட்டினர்.
Top
* 3.சி.எம்.எஸ்., கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
நாமக்கல்: நாமக்கல் சி.எம்.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி அறிவியல் துறை சார்பில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு "ராஸ்போ-2010' என்ற தலைப்பில், தேசிய அளிவிலான ஒரு நாள் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் நெல்சன் கென்னடி தலைமை வகித்தார். முதன்மை செயலாளர் வீரராஜ் முன்னிலை வகித்தார். சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் தாமோதராஜா பங்கேற்று பேசுகையில், ""மாணவர்கள் தங்கள் பாடத்தின் அடிப்படை கோட்பாடுகளை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
நிறைவு விழாவில் விருதுநகர் வி.ஹெச்.என்.எஸ்.என்., கல்லூரி சுயநிதிப்பிரிவு இயக்குனர் சண்முகசுந்தரம் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசு வழங்கி பேசினார். அறிவியல் கண்காட்சியில் கல்லூரி மாணவர்களின் திறமையால் உருவாக்கப்பட்ட பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தது. அதை பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் என பலரும் பார்த்து ரசித்தனர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர் கண்ணதாசன் செய்திருந்தார்.
Top
* 4.புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும்: மகளிர் தின விழாவில் அறிவுரை
திருச்செங்கோடு: ""ஆராய்ச்சித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி பெண்கள் சாதனை படைக்க வேண்டும்,'' என, மகளிர் தினவிழாவில், எபிலிட்டி ஃபவுண்டேசன் தலைவர் ஜெயஸ்ரீ பேசினார். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி முதல்வர் தியாகராஜா தலைமை வகித்தார். என்பவர்மெண்ட் செல் தலைவர் ஜெயந்தி வரவேற்றார். கல்வி நிறுவன அறக்கட்டளை துணைச் செயலாளர் கவிதா, டீன் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு கல்லூரி மகளிர் தலைமைப்பண்பு வளர்ப்புக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட சிறப்பு மலரை சென்னை எபிலிட்டி பவுண்டேசன் நிறுவன தலைவர் ஜெயஸ்ரீ வெளியிட்டு பேசியதாவது:தலைமைப்பண்பு, அதற்கான உத்தரவாதம், பாதுகாப்பு ஆகியவற்றை பெண்கள் தாங்களாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவின் பெருமைகளில் தலைசிறந்ததாக விளங்கக் கூடிய பண்புகளை அழித்து விடாத வகையில் பெண்களின் முன்னேற்றம் இருக்க வேண்டும்.
ஆண்களை மட்டுமே நம்பி வாழ்ந்த நிலை, இன்று இல்லை என்றாலும், பெண்கள் முழுமையாக, சுயமாக இயங்க முடிவதில்லை. அரசியலில் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் காலம் நெருங்கிவருகிறது. அதற்கு முன்பாகவே பல கல்லூரி, மற்றும் தொழில் நிறுவனங்களில் பெண்கள் வேலைவாய்ப்பு 33 சதத்தை எட்டி உள்ளது.ஒரேமாதிரியான பொருளற்ற வேலைகளை மட்டுமே பெண்கள் செய்து வருகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். ஆராய்ச்சித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி பெண்கள் சாதனை படைக்க வேண்டும்.
வாழ்க்கை மிக அழகானது. அதை இயந்திரத்தனமாக மாற்றிக் கொள்ளக்கூடாது. மிருககாட்சி சாலையில் உள்ள விலங்குகளைப் போல் கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், தன்னம்பிக்கை, லட்சியம், குறிக்கோள் கொண்டு வாழ்க்கையை வடிவமைத்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து இருக்கும் தனித்திறமைகளை பிரகாசிக்க செய்ய வேண்டும். ஒரு செயலை செய்யும் முன் அது குறித்து உங்களை நீங்களே கேள்வி கேட்க பழக வேண்டும். இடைவிடாத முயற்சி உங்களை வெற்றிக்கோட்டிற்கு அழைத்து செல்லும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், தொண்டு நிறுவனத்துக்கு நிதி உதவிக்கான காசோலை வழங்கப்பட்டது.
Top
* 5.25 ஆண்டுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு பெரியபாவடியில் இயங்கி வரும் செங்குந்தர் கல்வி நிலையத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் வரதராஜன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், 1981 முதல் 1986 வரை படித்த 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
"பள்ளியில் மாணவர்களை விரும்பிச் சேர்க்கும் நிலையை உருவாக்குவதற்கு ஆக்கப்பூர்வமான வழி முறைகளை வழங்கினால், முன்னாள் மாணவர்கள் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும்' என, உறுதி அளித்தனர்.நிகழ்ச்சியில், பள்ளி முன்னாள், இன்னாள் ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.இது குறித்து முன்னாள் மாணவர் சங்கச் செயலாளர் வக்கீல் அருள் கூறுகையில, ""ஆண்டுதோறும் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எங்கள் வாழ்க்கை உயர்வுக்கு காரணமாக விளங்கிய இப்பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய தீர்மானித்துள்ளோம். பள்ளியில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பள்ளியை மூடவிடாத நிலையை உருவாக்குவோம்,'' என்றார்.
Top
சம்பவம்
* 1.கல்லூரி மாணவர் மாயம்
நாமக்கல்: கல்லூரி மாணவர் மாயமானது குறித்து பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர்.திருச்செங்கோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு தர்மபுரி ஸ்ரீராம் காலனியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பாலு என்பவர் மகன் பிரசாந்த் (19) முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவர், கடந்த மாதம் 26ம் தேதி கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு வீட்டு செல்வதாக கூறி சென்றார். ஆனால், அவர் வீட்டுக்கு செல்லவில்லை. விடுமுறை முடிந்து கல்லூரி துவங்கிய நிலையில் மாணவர் பிரசாந்த் கல்லூரிக்கு வரவில்லை. இது குறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் தங்களது மகனை உறவினர், மகனின் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கும் காணவில்லை.இது குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து மாயமான கல்லூரி மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Top
* 2.நித்யானந்தா பொம்மை எரிப்பு ஆர்.பட்டணத்தில் 20 பேர் கைது
ராசிபுரம்: சாமியார் நித்யானந்தரின் உருவ பொம்மையை எரித்த 20 பேரை ராசிபுரம் போலீஸார் கைது செய்தனர்.சாமியார் நித்தியானந்தா, பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையறையில் இருக்கும் காட்சி சில நாட்களுக்கு முன் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அவரது பக்தர் மற்றும் சீடர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.ராசிபுரம் அடுத்த ஆர்.பட்டணத்தில் இளைஞர்கள் நித்தியானந்தா உருவ பொம்மையை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பிள்ளையார் கோவில் அருகில் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அதை தொடர்ந்து பால் ஊற்றி இறுதி சடங்கும் செய்தனர்.தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 20 பேரை கைது செய்தனர்.
Top
* 3.தங்க தாலி பறித்த கொள்ளையன் கைது
ப.வேலூர்: வீட்டில் தனியாக இருந்து பெண்ணிடம் தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய டவுசர் கொள்ளையனை ப.வேலூர் போலீஸார் கைது செய்தனர்.ப.வேலூர் அடுத்த சின்னக்கரசபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி காளியண்ணன் (55). அவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் மனைவி மாராயியுடன் வசித்து வருகிறார். கடந்த 3ம் தேதி இரவு காளியண்ணன் வெளியே சென்றுவிட்டார்.மாராயி மட்டும் வீட்டில் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமி, வீட்டுக்குள் புகுந்து மாராயியை கத்தியை காட்டி மிரட்டி, அணிந்திருக்கும் நகையை கழற்றும்படி கூறினான்.
அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மர்ம ஆசாமி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலிக்கொலியை அறுத்துள்ளான். தொடர்ந்து கையில் இருந்த தங்க வளையல்களை பறிக்க முயற்சிக்கும் போது, மாராயி திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார்.அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்து மர்ம ஆசாமி பின்புற காம்பவுண்ட் சுவர் ஏறி தப்பி ஓடி மாயமானான். இது குறித்து ப.வேலூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மர்ம நபர் உடலில் கருமை பூசியும், டவுசர் மட்டும் அணிந்திருந்தான் என்பது தெரியவந்தது. சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி (40) என்பவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது காளியண்ணன் வீட்டில் புகுந்து மாரியாயிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டான். போலீஸார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Top
* 4.கெரஸினில் இயக்கிய 7 லாரி பறிமுதல்
நாமக்கல்: வருவாய் துறையினர் நடத்திய ஆய்வில், கெரஸினில் இயக்கப்பட்ட 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் கலெக்டர் சகாயத்தின் உத்தரவின்படி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வருவாய் துறையினர் மாவட்டம் முழுவதும் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.குமாரபாளையம்-ஆனங்கூர் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த லாரிகளை, திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் மாயமனோகரன், பறக்கும்படை தனிதாசில்தார் கதிரேசன், ஆர்.ஐ.,க்கள் சின்னுசாமி, சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழுவினர் சோதனை செய்தனர்.
அதில், 5 லாரிகளில் டீஸலுக்கு பதில் எரிபொருளாக பொது வினியோக திட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் நாமக்கல், ப.வேலூர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு லாரிகள் வீதம் 7 லாரிகளில் மண்ணெண்ணெய் பயன்படுத்தியது தெரியவந்தது. அதை தொடர்ந்து 7 லாரிகளையும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் 975 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு 28 ஆயிரம் ரூபாய். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர் மீது சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்."பொது வினியோக திட்ட மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் லாரிகள் கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்வதுடன், அந்த லாரிகளின் அனுமதி ரத்து செய்வதுடன், டிரைவர்களின் லைசென்சும் ரத்து செய்யப்படும்' என, வருவாய் துறையினர் எச்சரித்தனர்.
Top
* 5.மீன் பிடிப்பதில் கோஷ்டி மோதல்: சங்க தலைவர் உள்பட 4 பேர் படுகாயம்
ப.வேலூர்: மீன் பிடிப்பதில் இரண்டு கோஷ்டிக்கும் ஏற்பட்ட மோதலில், மீன் கூட்டுறவு சங்க தலைவர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.ப.வேலூர் ஜேடர்பாளையம் அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்த மீன் கூட்டுறவு சங்கத்தினர் தினமும் காவிரி ஆற்றில் படகில் சென்று வலை வீசி மீன் பிடித்து வருவது வழக்கம்.அதேபோல் நேற்று வழக்கம் போல் படகில் சென்று வலை வீசி மின் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அக்கரையில் உள்ள கருக்கங்கரட்டு பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர் வெடி போட்டு மீன் பிடித்தனர்.அதனால், கொத்தமங்கலத்தை சேர்ந்தவர்களின் இரண்டு வலைகள் அறுந்தும், இரண்டு படகுகள் சேதமும் அடைந்தன. அதன் மதிப்பு 20 ஆயிரம் ரூபாய். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், அக்கரையை சேர்ந்தவர்களிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. அக்கரையை சேர்ந்தவர்கள் கொத்தமங்கலத்தை சேர்ந்த லதா, சம்பூர்ணம், தங்கமணி ஆகிய மூன்று பெண்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். அதை தட்டிக்கேட்ட மீன் கூட்டுறவு சங்கத்தலைவர் ராமசாமியையும் அக்கும்பல் தாக்கியது.இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நான்கு பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ப.வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment