Sunday, March 7, 2010

மதுரை

* 1.மதுரை பூங்காக்களில் பூங்காற்று வீசுமா? சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்குமா

மதுரை : சென்னையை போல் மதுரை மாநகராட்சியிலும் "பூங்காவில் பூங்காற்று' என்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்த இடம், நிதி கிடைக்கவில்லை. இதனால், நிகழ்ச்சிகள் நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிராமிய கலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சுற்றுலாத் துறை சார்பில், மதுரை சித்திரை வீதிகளில் 2008 செப்டம்பர் முதல் 2009 பிப்ரவரி மற்றும் ஜூன் முதல் நவம்பர் வரை 52 வாரங்களுக்கு, சனிக்கிழமை தோறும் மாலை "தெருவோரத் திருவிழா' நடந்தது.
ஒயில், கும்மி, அனுமன் ஆட்டம், மரக்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், தோடர் ஆட்டம், இருளர் மக்களின் ஆட்டம் உட்பட பல்வேறு அரிய கலைகள் இதில் அரங்கேறின. மதுரை மக்கள் மட்டுமின்றி, மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இதை கண்டு வியந்தனர்.
சென்னை பூங்காக்களில் 2009 ல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் "பூங்காவில் பூங்காற்று' என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கலைஞர்கள், ஒலிபெருக்கி, போக்குவரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் சுற்றுலாத்துறை செலவிட்டது. தென் மாவட்டங்களிலிருந்து நாட்டுப் புற கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். இதேபோல் மதுரை மாநகராட்சி பூங்காக்களில் நடத்த சுற்றுலாத் துறை செயலாளர் இறையன்பு விரும்பினார்.
இதன்படி, ஐந்து மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். ஆனால் அரசு நிதி ஒதுக் காததால், எப்படியாவது "ஸ்பான்சர்' பெற்று நிகழ்ச்சியை நடத்தலாம் என, முடிவு செய்தனர். இதுவரை யாரும் "ஸ்பான்சர்' செய்ய முன்வரவில்லை. பூங்காக்களில் நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சியிடம் அனுமதி கோரினர். இதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இதனால், பூங்காவில் பூங்காற்று வீசுமா என்ற சந்தேகம் உள்ளது.
மதுரையில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. மாநகராட்சி பூங்காக்களில் விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடுகின்றனர்.
கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தினால், பொழுதுபோக்கு, கலைஞர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும். மேற்கத்திய நடனம், இசை, கலாசாரம் ஊக்குவிக்கப்படும் இக்காலத்தில், கிராமிய கலைகளை ஊக்குவிப்பது அவசியம். இதனால், இளைய தலைமுறைக்கு மறு சிந்தனையை ஏற்படுத்த முடியும்.
அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைகள் நடத்த சுற்றுலாத்துறை ஆக்கமும், ஊக்கமும் தருகிறது. அதே வேளையில், மக்கள் கூடும் இடங்களில் அடிக்கடி இக்கலை விழாக்களை நடத்த வேண்டும். நாட்டுப்புற கலைஞர்கள் பலருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காததால், முழுக்கு போட்டுவிட்டு மாற்று வேலையை நாடுகின்றனர். என்னதான் நலவாரியங்கள் மூலம் பலன்கள் கிடைத்தாலும், நிரந்தர வருவாய் கிடைக்காமல் விரக்தியின் விளிம்பில் உள்ளனர்.
சுற்றுலாத்துறைக்கு மத்திய அரசு, பன்னாட்டு நிதியம் உட்பட பல்வேறு வகைகளில் வருவாய் கிடைக்கிறது. சென்னைக்கு காட்டிய அக்கறையை "கலைகள் வளர்த்த' மதுரைக்கும் காட்டினால் நாட்டுப்புற கலைஞர்கள் வயிற்றில் பால் வார்க்கலாம்.

* 2.மீனாட்சி கோயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் தாமதம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு கருதி, 36 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி, இரு மாதங்களாகியும் துவங்கப்படவில்லை.
இக்கோயிலுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வப் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, மத்திய உளவுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். தற்போது, போலீஸ் சார்பில், கோபுரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. வி.ஐ.பி.,க்கள் வருகை, முக்கிய நிகழ்ச்சிகளின்போது, இவை எடுத்துச் செல்வதால், கோயிலுக்கு வருவோரை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, 65 லட்சம் ரூபாய் மதிப்பில், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் கோயில் சார்பில் வாங்கப் பட்டுள்ளன. நிர்வாக அதிகாரி அறை உட்பட 36 இடங்களில் இவை பொருத்தப்படும். இதற்கான கட்டுப்பாட்டு அறை, தெற்காடிவீதியில் உள்ள கோயில் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்படுகிறது.
கேமரா பொருத்தும் பணி, கடந்த ஜனவரியில் ஆரம்பிப்பதாக இருந்தது. இதுவரை பணிகள் நடக்கவில்லை. இதுகுறித்து, கோயில் நிர்வாக அதிகாரி ராஜநாயகத்திடம் கேட்டபோது, ""கேமரா பொருத்தும் பணிக்கான சாதனங்கள் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது தேவையான அனைத்து சாதனங்களும் வாங்கிவிட்டதால், விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும்'' என்றார்.

* 3.ஆய்வுக்குழு பரிந்துரையின்படி டாக்டர்கள் மீது நடவடிக்கை : மாநாட்டில் வலியுறுத்தல்

மதுரை : "சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ஆய்வுக்குழு பரிந்துரைத்தால் மட்டும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்திய மருத்துவ சங்கத்தின் தனியார் மருத்துவமனை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மதுரையில் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடந்தது. தலைவர் ஜமீர்பாஷா வரவேற்றார். டாக்டர் மயில் வாகணன் தலைமை வகித்தார். செயலாளர் அபுல்ஹாசன் ஆண்டறிக்கை வாசித்தார்.
நகர் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் தேன்மொழி பேசுகையில், ""மருத்துவமனை மற்றும் கிளினிக் ஊழியர்களை நியமிக்கும்போது, அவர்களின் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற பயிற்சியை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். சாதக, பாதகங்களை ஏற்க டாக்டர்கள் தயாராக இருக்க வேண்டும். வழக்கிற்கு தேவையான ஆதாரங்கள் அல்லது விபரங்களை, மருந்துச்சீட்டில் எழுதிக்கொடுத்தால்கூட எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.
தனியார் மருத்துவமனைகளை பாதுகாக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசின் உயிர் காக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போலி டாக்டர்களை ஒழிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, ஆய்வு குழு பரிந்துரைத்தால் மட்டும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை, கிளை செயலாளர் பாபு செய்திருந்தார்.
போலீசாருக்கு பயிற்சி : மாநாட்டின் ஒரு பகுதியாக, உயிர் காக்கும் முறைகள் குறித்து, போக்குவரத்து போலீசாருக்கு டாக்டர் கணபதி பயிற்சி அளித்தார். அவர் கூறுகையில், ""விபத்து நடந்தவுடன் முதலில் அங்கு செல்வது போலீசார்மட்டுமே. அவர்களுக்கு, மருந்து இல்லாமல் காயமுற்றவருக்கு முதலு தவி அளித்து, மருத்துவமனையில் சேர்ப்பது வரை பயிற்சி அளிக்கப்பட்டது'' என்றார்.

* 4.டி.ஆர்.ஒ., அனுமதிக்காக காத்திருக்கும் அரசு ஆஸ்பத்திரி கட்டட பணிகள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே கைத்தறிநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டடம் கட்ட இடம், நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும், டி.ஆர்.ஒ., அனுமதி கிடைக்காததால், பணிகளை துவங்குவதில் தாமதம் நிலவுகிறது.
கைத்தறி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு போதிய இட வசதி இல்லை. ஒரு பகுதி நர்ஸ் குடியிருப்பாக உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை, ஊசி போடும் பணிகள் ஒரே கட்டடத்தில் நடக்கின்றன. கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க முடியவில்லை. கர்ப்பிணிகள் திருப்பரங் குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றனர். மேலும் கட்டடத்தின் முன்பு மேற்கூரை இல்லாததால், நோயாளிகள் வெளியில் வெயிலில் நிற்கின்றனர். மழை காலங்களில் நோயாளிகள் அவதிக்குள்ளாவர்.
கழிப்பறை வசதி கிடையாது. கட்டடத்தை சுற்றிய திறந்த வெளி, கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் வசதியும் செய்யப்படவில்லை. ஆஸ்பத்திரி ஊருக்கு தள்ளி இருப்பதால் சம்பக்குளம், நிலையூர் பகுதியினர், திருப்பரங்குன்றம் செல் கின்றனர். அனைத்து வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட தேசிய ஊரக நல் வாழ்வு இயக்கம் சார்பில் 22 லட்சம் ரூபாய் ஓராண்டுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதிய கட்டடத்திற்கு, நிலையூர் மெயின் ரோட்டில், பள்ளிக்கூடம் எதிரில் ஒரு ஏக்கர், வருவாய்த் துறையினரால் கையகப்படுத்தப்பட்டது. இரண்டு முறை சர்வே பணிகளும் நடந்தன. ஆனால் பல மாதங்கள் ஆகியும் நிலம் கையகப்படுத்தியதற்கு ஒப்புதலளித்து டி.ஆர்.ஒ., அனுமதி வழங்க வேண்டும். அனுமதி கிடைக்காததால், பணிகள் துவங்கப்படவில்லை. மார்ச்சுக்குள், பணிகள் துவங்கவில்லையெனில், ஒதுக்கப்பட்ட நிதி திரும்ப பெறப்படும். மீண்டும் அதை பெறுவது கடினம். கட்டுமான பணிகளை மாவட்ட நிர்வாகம் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Top
* 5.சுற்றுலா கண்காட்சி பதிவு ஸ்டால்



மதுரை: மதுரை மடீட்சியாவில், நாளை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை, ஷலோம் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ் நிறுவனத்தின் சார்பில், வெளிநாட்டு சுற்றுலா கண்காட்சி நடக்கிறது.ஐரோப்பிய சுற்றுலா, அமெரிக்கா, கனடா சுற்றுலா, சீனா, ஹாங்காங் சுற்றுலா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சுற்றுலா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து சுற்றுலா, இஸ்ரேல், எகிப்து, ஜோர்டானுக்கு சுற்றுலா செல்ல விமான டிக்கெட், தங்குமிடம், உணவு கட்டணம், சுற்றுலா வழிகாட்டி என அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய ஒரே கட்டணம் வசூலிக்கப் படுகிறது.டிராவல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜான் செல்வின் கூறுகையில்,"" சுற்றுலாவைப் பொறுத்து 12 முதல் 21 நாட்கள் வரை செல்லலாம். மறைமுக கட்டணம் இல்லை.
சுற்றுலாவுக்கு பதிவு செய்த பின், செலவு கூடுதலாக ஆனாலும், கட்டணம் திரும்பவும் வசூலிக்கப்படுவதில்லை. சீசனுக்கேற்ப ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதங்களில் வெவ்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்கிறோம்'' என்றார். சுற்றுலா குறித்த விவரங்களையும், கட்டணத்தையும் ஸ்டாலில் நேரடியாக தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.

* 6.அழகர்கோவிலில் பங்குனி விழா

அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி திருக்கல்யாண திருவிழா இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை ஸ்ரீதேவி, பூமாதேவியுடன், சுந்தரராஜ பெருமாள் கோயில் முன் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மார்ச் 27, 28ம் தேதிகளில் பல்லக்கில் புறப்படும் பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 29ம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் நடக்கிறது. அன்று பிற்பகல் வரை அங்கிருக்கும் பெருமாளுக்கு பல்வேறு ஆராதனைகள் நடக்கின் றன. ஏற்பாடுகளை துணை ஆணையர் இளம்பரிதி உட்பட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


பொது

* 1.தெற்காசிய நாடுகளில் பெண்கள் உயர் பதவிகளை வகிக்கின்றனர் : துணை கமிஷனர் தகவல்

மதுரை : ""தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெண்கள் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர்,'' என, மதுரை பாத்திமா கல்லூரியில் நடந்த பெண்கள் தின கருத்தரங்கில், சட்டம், ஒழுங்கு துணை கமிஷனர் தேன்மொழி பேசினார்.
லயன்ஸ் புனித வளனார் சபையின் சார்பில், பெண்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தரங்கு நடந்தது. மேயர் தேன்மொழி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கருத்தரங்கிற்கு, பெண்கள் ஒருங்கிணைப்பு இயக்க உறுப்பினர் சுபத்ரா தலைமை வகித்தார். முதல்வர் பாத்திமா, சபை மாநில ஆலோசகர் பாத்திமா முன்னிலை வகித்தனர்.
துணை கமிஷனர் தேன்மொழி பேசியதாவது : தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெண்கள் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர். வரலாற்று சாதனையாளர்கள் பட்டியலில் பெண்கள் நிறைய பேர் இடம்பெற்றுள்ளனர். யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத நிலையை அடைந்தவர்களை நாம் "சாதனையாளர்கள்' என்கிறோம். அதற்கான தகுதி, திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். காவல் துறையில் அனைவரையும் புருவம் உயர்த்தி பார்க்க வைத்தவர், முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி.
மதுரையில் உசிலம்பட்டி என்ற பெயர் சர்வதேச கருத்தரங்குகளில் தவறாமல் இடம்பெறுகிறது. அது சாதனைக்காக அல்ல. பெண் சிசுக்கொலை என்னும் கொடிய செயலுக்காக. இன்றுவரை அங்கு பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. படித்த பெற்றோர்கள் கூட, "ஸ்கேன்' மூலம் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்கின்றனர். பெண் குழந்தையை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இல்லாதவர்களின் செயல் அது.இவ்வாறு பேசினார்.

* 2.கோடை கால திருட்டை தடுப்பது எப்படி

மதுரை : பிள்ளைகளின் பள்ளி விடுமுறையை எதிர்பார்த்திருக்கும் பெற்றோர், குடும்பத்துடன் கோடை சுற்றுலா செல்ல இப்போதே தயாராகி வருகின்றனர். இதை பயன்படுத்தி, வீடு புகுந்து திருட வாய்ப்புள்ளது.
"இதை தடுக்க, வெளியூருக்கு செல்லும்போது, அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் கொடுத்தால், ரோந்து போலீசார் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அவ்வப்போது போலீசாருடன் தொடர்பு கொள்வது நல்லது' என்கிறார் மதுரை குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயஸ்ரீ.
கோடை கால திருட்டை தடுப்பது குறித்து போலீசார் கூறியதாவது : வெளியூர் செல்லும்போது, மெயின் கேட்டின் உள்புறத்தில் பூட்டு போட வேண்டும். தினமும் வாசலில் கோலமிட ஏற்பாடு செய்வதோடு, இரவு வீட்டின் முகப்பு மற்றும் பின்புறத்தில் விளக்கு எரியவிட வேண்டும். மாடிக்கு செல்லும் வழியை திறந்து வைக்கக்கூடாது. பீரோ சாவி, வீட்டுச்சாவியை கையுடன் கொண்டு செல்வது நல்லது. வீட்டு வளாகத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு பூட்டு போட வேண்டும். அடிக்கடி பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து, தகவல் தெரிந்துக் கொள்ள வேண்டும். வேலையாட்கள், அடிக்கடி வீட்டிற்கு வருபவர்களிடம் வெளியூர் செல்வது குறித்து தகவல் தெரிவிக்கக்கூடாது. சுற்றுலாவுக்கு வரஇயலாத உறவினர்களை வீட்டில் தங்க வைக்கலாம் என்றனர்.

* 3.வரும்முன் காப்போம் முகாம்

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் அருகே மீனாட்சிநகர் துர்கா துவக்கப்பள்ளியில் "வரும்முன் காப்போம்' மருத்துவ முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அதிகாரி பாரதி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் போஸ் முத்தையா, பள்ளி முதல்வர் நாகலெட்சுமி முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். நகராட்சி நிர்வாக அதிகாரி ஞானசேகரன் முகாமை துவக்கி வைத்தார். இ.ஜி.சி., ஸ்கேன், வசதிகள் செய்ய பட்டிருந்தன. ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

* 4.முப்பெரும் விழா

மதுரை : மதுரை மாவட்ட ஜனகல்யாண் சார்பில், முப்பெரும் விழா நேற்று நடந்தது.
"புருஷோத்தம்' திட்டச் செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். இந்த அமைப்பு சார்பில், 24 பள்ளிகளைச் சேர்ந்த 7, 8, 9ம் வகுப்பு மாணவர்கள் 4,800 பேருக்கு நல்லொழுக்கம் குறித்த தேர்வு நடத்தப்பட்டது. இதில், அதிக மதிப்பெண் பெற்ற 630 மாணவர்களுக்கு, தலைவர் டி.அமிர்தம் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் சாமிநாதன் பரிசுகளை வழங்கினார். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு, ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாலச்சந்திரன் பரிசுகளை வழங்கினார். "ஒரு பிடி அரிசி' திட்டத்திற்கு நன்கொடை வழங்கியவர்களை துணைத் தலைவர் மோகன்காந்தி கவுரவித்தார்.

* 5.திருநகரில் அபூர்வ ஆந்தைகள்

திருநகர் : திருநகர் சித்திவிநாயகர் கோயில் அருகே ரோட்டில் நேற்று மதியம் 3 மணிக்கு மூன்று அபூர்வ வெள்ளை நிற ஆந்தைக்குஞ்சுகள் தவித்துக் கொண்டிருந்தன.
இவற்றை சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து திருநகர் பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி வனத் துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் வர தாமதமானதால் திருநகர் போலீசார் ஆந்தை குஞ்சுகளை பிடித்து ஸ்டேசனில் பாதுகாப்பாக வைத்தனர். இன்று அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப் பட உள்ளன.

* 6.நிர்வாகிகள் தேர்வு

சோழவந்தான் : மதுரை மாவட்டம் தேவாங்கர் நிர்வாக சபை நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு சபை முன்னாள் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். உறுப்பினர் முருகேசன் வரவேற்றார். காடுபட்டியை சேர்ந்த சோமசுந்தம், சின்னப்பாண்டி மற்றும் சபை உறுப்பினர் கள் பேசினர். நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக பொன்ராஜ், செயலாளராக சிவானந்தம், பொருளாளராக பிச்சைமணி, உதவி தலைவராக முருகேசன், உதவிசெயலாளராக ராமச்சந்திரன், மகளிர் அணி செயலாளராக ராஜேஸ்வரி, சட்ட ஆலோசகராக நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளுக்கு தொழிலதிபர் சுப்பிரமணியம் பதவி பிரமாணம் செய்துவைத்தார். பொன்ராஜ் நன்றி கூறினார்.

* 7.விளாச்சேரியில் ஒருங்கிணைந்த வேளாண் தகவல் மையம் திறப்பு

திருப்பரங்குன்றம் : விளாச்சேரியில் நீர்வள, நிலவள திட்டதின் கீழ் ளோண்மை துறை சார்பில், ஒருங்கிணைந்த தகவல் மையத்தை உலக வங்கி குழு தலைவர் ரபிகாரே திறந்து வைத்தார்.
உலக வங்கி உதவியுடன் நடக்கும் வேளாண் பணிகளை ரபிகாரே பார்வையிட்டார். அவர் பேசுகையில்,""தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை தேடி செல்வதை தவிர்க்க வேண்டும். விவசாயிகளை அதிகாரிகள் தேடிச் சென்று ஆலோசனை வழங்க வேண்டும்' என்றார்.
விழாவிற்கு ஊராட்சி தலைவர் மரகதவல்லி தலைமை வகித்தார். பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் முகைதீன், செயற் பொறியாளர்கள் விஜயகுமார், செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் கள் மோகன்குமார், கோவிந் தராஜன். வேளாண்மை துறை இணை இயக்குனர் சங்கரலிங்கம், துணை இயக் குனர் சம்பத்குமார், உதவி இயக்குனர்கள் செல்வம், வடிவேல்குமார், மனோகரன், வேளாண் அலுவலர்கள் உலகம்மாள், திருப்பதி, மீனாட்சி சுந்தரம், மனோரஞ்சிதம், தோட்டக்கலை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குனர் மோகன்குமார், மற்றும் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

* 8.நகைகள் திருட்டு

அவனியாபுரம் : பெருங்குடி போக்குவரத்துநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். பிப்ரவரி 26ம் தேதி இவர் சென்னையில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, கதவுகள் உடைக்கப் பட்டு இருந்தன. பீரோவில் இருந்த இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள தோடுகள், தாலிசெயின் ஆகியவை திருடு போயின. பெருங்குடி போலீசில் பாலசுப்பிரமணியன் புகார் கொடுத்தார். எஸ்.ஐ., சரவணக்குமார், ஏட்டு குருசாமி விசாரித்து வருகின்றனர்.


சம்பவம்

* 1.பார்சல் நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மதுரை : "வெளியூர்களுக்கு அனுப்பும் பார்சல் குறித்து, சந்தேகம் இருந்தால் உடனே தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என, டிராவல்ஸ் மற்றும் பார்சல் நிறுவனங்களை, போலீசார் எச்சரித்துள்ளனர்.
சொகுசு பஸ்களில் அனுப்பப்படும் பார்சல்களில், தடை செய்யப்பட்ட பொருட்களை அனுப்புவது அதிகரித்துள்ளது. சமீபத்தில்கூட, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. மார்ச் 5ம் தேதி, மதுரை லக்கி டிராவல்ஸ் அலுவலகத்தில் மேற்கொண்ட சோதனையில், ஆறு பட்டா கத்திகள் மற்றும் ஒரு சிறு கத்தி, கணக்கில் வராத 13லட்சத்து72ஆயிரத்து690 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, டிராவல்ஸ் மற்றும் பார்சல் நிறுவன உரிமையாளர்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.
தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ""பார்சல் "புக்' செய்யும்போது, அது சந்தேகம் படியாக இருந்தால் உடனே எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், பத்து நாட்கள் பார்சல் எடுக்கப்படாமல் இருந்தாலும் தகவல் தெரிவிக்கலாம். பார்சலை அனுப்பும், பெறும் நபர் குறித்த விபரங்களை தெரிந்துக் கொள்வது நல்லது. பார்சல்களை கண்காணிக்கவும், சந்தேகம் இருந்தால் சோதனையிடவும் உள்ளூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

* 2.அழகர்கோவிலில் நோய் தாக்கி ஆடுகள் பலி

அழகர்கோவில் : அழகர்கோவில், அப்பன்திருப்பதி பகுதியில் நோய் தாக்குதலால் ஆடுகள் இறந்து வருவதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
கோடை வெயில் துவங்கி விட்டதால் கால்நடைகளை கழிசல், வாய்ப்புண், கால்புண், நீலநாக்கு, காய்ச்சல் நோய்கள் தாக்குவது வழக்கம். அழகர்கோவில், அப்பன்திருப்பதி, கள்ளந்திரி பகுதிகளில் பலர் ஆடு வளர்ப்பதை சுய தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள், வீடுகளில் வளரும் ஆடுகளை கண்மாய்கள், விளை நிளங்களில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஆடுகள் மர்ம நோய் தாக்குதலால் இறந்து வருகின்றன. ஒரு வாரத்தில் மட்டும் அஞ்சலை, மாருநாடு, விஜி, சுமன் ஆகியோரின் 25 ஆடுகள் இறந்தன. இதுதவிர புறநகர் பகுதிகளில் ஏராளமான ஆடுகள் தினமும் இறக்கின்றன. ஆடுகள் உயிருடன் இருக்கும்போது ஒரு ஆடு 2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விலை போகிறது. இறந்த ஆடுகளை, உரிமையாளர்கள் புதைத்து விடுகின்றனர். சிலர் கறிக் கடைகளில் குறைந்த விலைக்கு விற்கின்றனர். பொதுமக்களை பற்றி கவலைப்படாதகறிக்கடை உரிமையாளர்கள் விலை மலிவாக கிடைக்கும் இந்த ஆடுகளை வாங்கி விற்கின்றனர்.
வெள்ளியங்குன்றம் ராமமூர்த்தி கூறுகையில், ""ஆடுகளின் வாய்ப்பகுதியில் திடீர் வீக்கம் ஏற்படுகிறது. நோய் தாக்குதலால் அவற்றால் சாப்பிட முடியவில்லை. வெள்ளியங்குன்றம் கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தோம். மருந்து கடையில் ஊசி மருந்து வாங்கி வந்து ஊசி போட்டோம். இருந்தும் ஆடுகள் இறந்து வருகின்றன. ஒரு வாரத்தில் மட்டும் இதுபோல் நான்கு ஆடுகள் இறந்து விட்டன,'" என்றார்.
சுகாதாரத் துறை டாக்டர்கள் கூறுகையில், "நோய் தாக்குதலால் இறக்கும் ஆடுகளை கறிக்கடைகளில் விற்பது தவறு. இந்த கறியை சாப்பிடுவதால் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படும் வாய்ப்புள்ளது. திடீர் வாந்தி, வயிற்று போக்கால் பாதிக்கப்படுவர்கள் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையங்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

* 3.கொலை வழக்கில் பஞ்சாயத்து துணை தலைவர் கைது

மதுரை : மதுரை அருகே கள்ளத் தொடர்பால் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை திருவாதவூரை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரதுமனைவி மரியம் பீவி (34). இவருக்கும் விளத்தூர் பஞ்சாயத்து துணை தலைவர் ராஜாமணிக்கும்கள்ளத்தொடர்பு இருந்தது. மரியம்பீவி மேலும் பலருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததை ராஜாமணி கண்டித்தார். கள்ளத்தொடர்பு நீடித்ததால், ஆத்திரமடைந்த ராஜாமணி மரியம் பீவியை கொலை செய்ய திட்டமிட்டார். தனது உறவினர்கள் தில்லைவாசன் (24), மதன் (23), குட்டியான் (22), பூமிநாதன் (24), சமயகண்ணன் (23), கருப்பணன் (24), ராஜேந்திரன் (26), அழகர் சாமி (23) ஆகியோருடன் ராஜாமணி சேர்ந்து, ஒத்தக்கடை, சிவலிங்கம் கிராமத்தில் மரியம்பீவியை நிர்வாணப்படுத்தி, கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். ஒத்தக்கடை இன்ஸ் பெக்டர் செந்தில் இளந்திரையன் தலைமையிலான தனிப்படை போலீசார், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தனர்.

* 4.பெண் மரணம்: டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை : மதுரை அருகே பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க கோரிய மனு குறித்து பதிலளிக்கும்படி டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மதுரை கீழவெளி வீதி யை சேர்ந்த கோதர் மைதீன் தாக்கல் செய்த மனு: என் மகள் ஷமீமாபானுவை சக்கிமங்கலத்தை சேர்ந்த சீனிமுகமது மகன் முகமது அலிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தேன். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முகமது அலி திருமணம் ஆனது முதல் எந்த வேலைக்கும் செல்வது கிடையாது. அடிக்கடி என் மகளை துன்புறுத்தினார். நான் செலவு செய்து முகமது அலியை மலேசியாவுக்கு அனுப்பினேன். அங்கு அவர் வேலை செய்யாமல் திரும்பி வந்தார்.
ஜன., 22ல் முகமது அலி அடித்ததால் என் மகள் ஷமீமா பானு என் வீட்டிற்கு வர பஸ் ஸ்டாப்பிற்கு வந்துள்ளார். அவரை முகமது அலி வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து சென்றார். மறுநாள் என் மகள் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் இறப்பில் மர்மம் உள்ளது. சிலைமான் போலீசில் புகார் செய்தேன். வழக்கு பதிவு செய்த போலீசார், நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜின்னா ஆஜரானார்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்,""மனு குறித்து ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி டி.ஜி.பி., தென் மண்டல ஐ.ஜி., எஸ்.பி., சிலைமான் இன்ஸ்பெக்டர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப,'' உத்தரவிட்டார்.

* 5.பசு மாடுகளை திருடிய விற்க முயன்ற இருவர் கைது

அவனியாபுரம் : மதுரை சிந்தாமணி அருகே பசுமாடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். சிந்தாமணி அருகே பனையூரை சேர்ந்த விவசாயி செந்தில்குமார். இவரது ஜெர்ஸி மற்றும் சிந்து வகை மாடுகளை கன்றுடன் சிந்தாமணி போலீஸ் அவுட்போஸ்ட் அருகே ஒரு தோட்டத்தில் ஜனவரி 31ம் தேதி காலை அடைத்து வைத்தார்.
மாலையில் அவற்றை காணவில்லை. இதுகுறித்து அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், ஏட்டுகள் குணசேகரன், தமிழ்திருவாசகம், பாண்டி, இளங்கோ விசாரித்தனர். பனையூர் ஆறுமுகத்தை தேடிய போது, தலைமறைவாகி இருந்தார். பிறகு மேலூர் சந்தையில் மாடுகளை விற்க சென்று கொண்டிருந்த ஆறுமுகம்(51), தூத்துக்குடி பாலகிருஷ்ணன்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

* 6.மறியல் 300 பேர் கைது

மதுரை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி, மதுரை கட்டபொம்மன் சிலை முன்பு, நேற்று மதியம் மனிதநேய மக்கள் கட்சியினர் மறியல் செய்தனர்.
துணை பொதுச் செயலாளர் தமிமுன்அன்சாரி தலைமையில் ஐந்து பெண்கள் மற்றும் செயல் தலைவர் சீனி அகமது, துணைச் செயலாளர்கள் ஜெ.கே. இம்னு, அலாவுதீன் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர். பின், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment