* 1.காற்றில் பறந்தது எம்.பி.க்களின் வாக்குறுதி
கோவில்பட்டி : தென் மாவட்டத்தின் பிரதான தொழிலான தீப்பெட்டி தொழிலை வழக்கம் போல் தேசிய பட்ஜெட்டில் மத்திய அரசு புறக்கணித்ததுடன், கூடுதல்வரி விதித்து நலிந்துவரும் தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட மட்டுமின்றி வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய இடங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது தீப்பெட்டி தொழிலுக்கு அரசு தரப்பில் உரிய அங்கீகாரமும் சலுகையும் கிடைக்காததாலும், எதிர்மறையான நடவடிக்கை காரணங்களாலும் தீப்பெட்டி தொழில் பல ஆண்டுகளாக இறங்கு முகத்தில் மிகவேகமாக பயணித்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான உற்பத்தியாளர்கள், தீப்பெட்டி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக் கணக்கான தொழிலாளர்களுக்காக தற்போது வரை அடிமட்ட லாபத்திற்கு இத்தொழிலை செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் வரிவிதிப்பு, மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தீப்பெட்டி தொழில் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் தீப்பெட்டி தொழிலை கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டையும் அதிகம் எதிர்பார்த்து ஏமாந்து போவது தீப்பெட்டி தொழிலில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாடிக்கையாக ஆகிவிட்டது. ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் தீப்பெட்டி தொழில் பாதுகாப்போம் என்று அரசியல்வாதிகள் ஓட்டு கேட்பது மட்டும் எந்தவொரு ஆண்டும் மாறவில்லை என்று தீப்பெட்டி தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் மனக்குமுறல்களுடன் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு தீப்பெட்டி தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் கடந்தாண்டு அக்.5ந்தேதி திருநெல்வேலி எம்பி ராமசுப்பு, விருதுநகர் எம்பி மாணிக்கதாகூர் மற்றும் தூத்துக்குடி எம்பி ஜெயதுரை ஆகியோரை அழைத்து கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழில் கருத்தரங்கள் நடத்தினர்.
இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் தீப்பெட்டி தொழில் இருந்தவிதமும், அதாள பள்ளத்தில் கிடக்கும் தற்போதைய தீப்பெட்டி தொழில் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது. இதன் தொடர் நடவடிக்கையாக எம்பிக்களின் ஏற்பாட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை டெல்லி சென்று சந்தித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறினர். மத்திய அமைச்சரின் சார்பில் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டு தீப்பெட்டி தொழில் உயர்விற்குரிய உத்தரவுகள் 2010 புத்தாண்டு செய்தியாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். இந்தாண்டு பட்ஜெட்டில் கண்டிப்பாக தீப்பெட்டி தொழில் உயர்வுக்கு ஏதேனும் வழிகாட்டப்படும் என்று சம்பந்தப்பட்டவர்கள் மிக அதிகமாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் உற்பத்தியாளர்களின் முக்கிய கோரிக்கைக்கே வேட்டு வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போதைய பட்ஜெட்டில் முழு இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கும், பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிலுக்கும் ஒரே விதமாக விதிக்கப்பட்ட 8 சதவீத கலால் வரியை 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் கோரிக்கை பட்டியலில் பிரதானமாகவும், நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமலும் இருக்கும் கோரிக்கைகளான மூலப்பொருட்கள் விலையை குறைத்து தட்டுப்பாடு இல்லாமல் சிட்கோ மூலம் விநியோகம் செய்தல், ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை அதிகரித்தல், அதிகமான லாபம் தருவதாக கூறப்படும் முழு இயந்திர தீப்பெட்டி உற்பத்திக்கும், பிழைப்புக்காக நடத்தப்படும் பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்திக்கும் ஒரே விதமாக விதிக்கப்பட்டுள்ள கலால் வரியை நீக்கம் செய்யவும் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிக்கக்கூட இல்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே இந்தாண்டு பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலை அழிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கலால் வரியை மட்டுமின்றி, தீப்பெட்டி தொழிலில் இருப்போர் முன்பே அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்ற தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* 2.நலிவடைந்து வரும் ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில் : புதியம்புத்தூரில் ஜவுளி வியாபாரிகள் கவலை
புதியம்புத்தூர் : புதியம்புத்தூரில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில் கரன்ட் கட் நேரம் அதிகரித்திருப்பதால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
புதியம்புத்தூரில் ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில் கொடி கட்டி பறந்தது எல்லாம் பழங்கதையாகிவிட்டது. இத்தொழிலில் ஈடுபட்டிருந்த வயது முதிர்ந்த பெண்களெல்லாம் தற்சமயம் கிராமங்களில் நடந்து வரும் கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டப்பணியில் சேர்ந்து விட்டனர். ரெடிமேட் தொழிலில் ஈடுபட்டிருந்த டெய்லர்களில் அதிகமானோர் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு பணிக்கு சென்று விட்டனர். எஞ்சியுள்ள ஒரு சில டெய்லர்களை வைத்து தான் ரெடிமேட் தயாரிப்பு தொழிலை தயாரிப்பாளர்கள் இயக்கி வருகின்றனர். மேலும் புதியம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் வருவதால் ஏராளமான டெய்லர்கள் தங்களது தொழிலை மாற்றிவருகின்றனர்.
அதிகமான ரெடிமேட் உற்பத்தியாளர்கள், தையல் மிஷின்களை புதுக்கோட்டை, ஏரல், ஆத்தூர், பசுவந்தனை, அம்பை, தட்டப்பாறை, நெல்லை போன்ற ஊர்களுக்கு கொண்டு சென்று அங்குள்ள டெய்லர்களை வைத்து ரெடிமேட் உற்பத்தி செய்து சமாளித்து வருகின்றனர். போதாக்குறைக்கு நாள் 1க்கு 2 மணி நேரமாக இருந்த கரண்ட் கட் தற்சமயம் 4 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. ரெடிமேட் தயாரிப்பு பவர் மிஷினில் நடைபெற்று வருவதால் கரண்ட் கட் கூடுதல் ஆவதால் ரெடிமேட் தயாரிப்பாளர்களை மிகவும் கதி கலங்க வைத்துள்ளது. 2 மணி நேர கரண்ட் கட் நேரத்தில் தொழிலை மேம்படுத்த முடியாமல் திணறி வந்த ரெடிமேட் தயாரிப்பாளர்களுக்கு, கூடுதல் கரண்ட் கட் தொழிலை விட்டு ஓடக் கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. டெய்லர்கள் மற்றும் எலாஸ்டிக் அமைப்பவர்கள், காஜா, பட்டன் பொருத்துபவர்கள், எம்பிராய்டரி ஒர்க்ஸ் செய்பவர்கள், டிசைன் பிரிண்ட் செய்பவர்கள், துணி கட்டிங் செய்பவர்கள், துணி அயனிங் மாஸ்டர்களின்றி தட்டிப்பாட்டில் தவித்து வரும் ரெடிமேட் தயாரிப்புத் தொழிலுக்கு கரண்ட் கட் கூடுதலாக்கப்பட்டது பெரும் இழப்பாக மாறியுள்ளது. ரெடிமேட் தொழில் வளம் பெற வேண்டுமெனில் புதியம்புத்தூருக்கு கரண்ட் கட்டிலிருந்து விலக்கு செய்ய வேண்டுமென்பது இங்குள்ள ரெடிமேட் வியாபாரிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. நலிவடையப் போகும் ரெடிமேட் தொழிலை தூக்கி நிறுத்த புதியம்புத்தூருக்கு மட்டும் கரண்ட் கட்டிலிருந்து விலக்கு அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று இங்குள்ள வியாபாரிகள் விரும்புகின்றனர். ஓட்டப்பிடாரம் உபமின் நிலையத்திலிருந்து புதியம்புத்தூருக்கு தனி மின் லைன் இருப்பதால் மின்தடையிலிருந்த விலக்கு அளிக்க வசதியாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதிவழங்கவேண்டும் என்று ரெடிமேட் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* 3.சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் : பட்டமளிப்பு விழாவில் ஐஓபி இயக்குநர் பேச்சு
கோவில்பட்டி : எதிர்கால வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டுமென கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஐஓபி நிர்வாக இயக்குநர் பட் பேசினார்.
கோவில்பட்டி நேஷனல் இன்ஜி., கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு கேஆர் கல்வி அறக்கட்டளை தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் அருணாசலம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து சென்னை இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பட் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் தங்களது வாழ்க்கையின் கனவுகள், லட்சியங்களை அடைய அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடுபட வேண்டும். மிகுந்த தன்னம்பிக்கையும் நாட்டுப்பற்றும் கொண்ட செயல்பாடு மிக்கவர்களாக இருக்க வேண்டும். மேலும் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று ஐஓபி நிர்வாக இயக்குநர் பட் பேசினார்.
இதில் சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் தரப்பட்டியலில் இடம் பெற்ற மாணவர்கள் 2பேர் உள்பட சுமார் 475 மாணவர்கள் பொறியல் துறைக்கான இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களையும், 7 பேராசிரியர்கள் முனைவர் பட்டங்களையும் பெற்றனர். விழாவில் கேஆர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கோபால், சொக்கலிங்கம், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜீவானந்தம், இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் வட்டார மேலாளர் திருநாவுக்கரசு, கோவில்பட்டி முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன், கல்லூரி துணை முதல்வர் ராமர், பேராசிரியர்கள் சுப்புராஜ், ரவீந்திரன், விஜயரங்கன், மணிமேகலை, மணிசேகர், காளிதாஸ முருகவேல், பிரம்மநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், முதல்வர் மாரிமுத்து ஒருங்கிணைப்பாளர் பரமசிவன் மற்றும் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
* 4.பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தூத்துக்குடி, கோவில்பட்டியில் மறியல்
தூத்துக்குடி : பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடிமற்றும் கோவில்பட்டியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
தமிழகம் முழுமைக்கும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், குடிமக்களை குடியின் மூலம் கெடுக்கும் செய லை, ஒரு அரசே செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், வருங்கால தலைமுறையை மதுவினால் ஏற்படும் தீமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் மதுக்கடை மறியல் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட் முன்பு உள்ள டாஸ்மாக் கடை முன்பு இந்த மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ரியாஸ்கான் தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் முகம்மது நைனா, மா வட்ட துணைத் தலைவர் முகம்மது நவாஸ், ராசப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோஷங்களை எழுப்பியபடி டாஸ்மாக் கடையை நோக்கி முற்றுகையிடச் சென்ற மனிதநேய மக்கள் கட்சியினரை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதே போன்று கோ வில்பட்டி பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகிலும் இந்த மறியல் போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி கோவில்படியில் நடந்த நிகழ்ச்சிக்கு காஸிம் பிர்தவ்ஸி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பீரப்பா முன்னிலை வகித்தார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மறியல் செய்ய முயற்சித்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 30 பெண்கள் உட்பட மொத்தம் 109பேரை கைது செய்து இளையரசனேந்தல் ரோட்டிலுள்ள கிரு ஷ்ணா மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர், கழுகுமலை இன்ஸ்பெக்டர் ஷிபுகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, ராஜேந்திரன், பீர்மைதீன், கணேஷ்பாண்டியன், கந்தசாமி, கனகராஜ், லட்சுமணன், ரமா, மாரித்தாய் ராணி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பொது
* 1.முழு நேர அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் : சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தல்
தூத்துக்குடி : சத்துணவு பணியாளர்களை முழு நேர அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும் என்று தூத்துக்குடி வட்டார சத்துணவு பணியாளர்கள் வெள்ளி விழா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க தூத்துக்குடி வட்டார வெள்ளி விழா மாநாடு தூத்துக்குடியில் நடந்தது. மாநாட்டிற்கு வட்டாரத் தலைவர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மாரியப்பன் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமசிவன் வரவேற்றார். வட்டார செயலாளர் சேரந்தையன், பொருளாளர் மல்லிகா, பிடிஓ., கணபதி, மதிவாணன், டிஎன்ஜிஇஏ மாவட்ட செயலாளர் வெங்கடேஷ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சங்கரவடிவு உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக, செந்தூர்பாண்டியன் தலைவராகவும், பொன்னுச்சாமி, மல்லிகா ஆகியோர் துணைத் தலைவராகவும், ரோஸ்மேரி செயலாளராகவும், சேரந்தையன், இன்பமணி இணைச் செயலாளராகவும், ஜெயரூபி பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பொன்னுசாமிநன்றிகூறினார்.
இம்மாநாட்டில் , சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பெற்று வரும் அனைத்துசலுகைகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும். விலைவாசி புள்ளி உயர்வுக்கேற்ப உணவுச் செலவு மானியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். அரசுக் காலிப்பணி இடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். அமைப்பாளர்களுக்கு பணிகாலத்தை கணக்கிட்டு வெயிட்டேஜ் வழங்க வேண்டும். தகுதியான சமையலர்கள், உதவியாளர்களுக்கு அமைப்பாளர் பணியை விரைந்து வழங்க வேண்டும். அலுவலக கூட்டத்திற்கு செல்வதற்கு பயணப்படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
* 2.குரும்பூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா
நாசரேத் : குரும்பூரில் நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா குரும்பூரில் நடந்தது. விழாவிற்கு திருச்செந்தூர் தொகுதி எம்.எல் .ஏ.,அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து முதல் விற்பனையை துவக்கி வைத்து பேசினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பிரகாஷ்பாபு வரவேற்றார். கடம்பாகுளம் பாசன விவசாய சங்கத் தலைவர் குணா, அங்கமங்கலம் பஞ்.,தலைவர் ஜாண், மாவட்ட கவுன்சிலர் வித்யாசங்கர், அழகப்பபுரம் பஞ்.,தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் குரும்பூர் நகர திமுக.,செயலாளர் விஜயபெருமாள், விவசாய சங்க தலைவர்கள் எட்வர்ட் ஆறுமுகம் கல்யாணசுந்தரம், நாசரேத் டவுன் பஞ்.,தலைவர் மாமல்லன், கானம் டவுன் பஞ்.,தலைவர் செந்தமிழ் சேகர், குருகாட்டூர் பஞ்.,தலைவர் பூலான், சதீஷ், ரமேஷ், முத்துப்பாண்டியன், திருச்செந்தூர் நகர திமுக.,செயலாளர் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* 3.மீன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகள்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் அதிகமாக மீன் கிடைக்க வாய்ப்புள்ள பகுதிகளை ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் செயற்கைக்கோள் மூலம் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. அவையாவன, மணப்பாட்டிற்கு தென்கிழக்குத் திசையில் 128 டிகிரியில் 23-28 கி.மீ. தூரத்தில் 40-45 மீ. ஆழத்தில், வீரபாண்டியன்பட்டிணத்திற்கு தென்கிழக்குத் திசையில் 114 டிகிரியில் 35-40 கி.மீ.தூரத்தில் 40-45 மீ. ஆழத்தில், பாண்டியன் தீவிற்கு தென்கிழக்குத் திசையில் 92 டிகிரியில் 25-30 கி.மீ.தூரத்தில் 20-25 மீ. ஆழத்தில், தூத்துக்குடிக்கு தென்கிழக்குத் திசையில் 115 டிகிரியில் 19-24 கி.மீ.தூரத்தில் 15-20மீ. ஆழத்தில், பட்டணமருதூருக்கு தென்கிழக்குத் திசையில் 117 டிகிரியில் 31-36 கி.மீ.தூரத்தில் 20-25 மீ. ஆழத்தில், வேம்பாருக்கு தென்கிழக்குத் திசையில் 135 டிகிரியில் 22-27 கி.மீ.தூரத்தில் 25-30 மீ. ஆழத்தில். இத்தகவலை பயன்படுத்தி மீனவர்கள் அதிக மீன்களைப் பிடித்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வெங்கடசாமி தெரிவித்துள்ளார்.
* 4.யோகா பயிற்சி
நாசரேத் : நாசரேத் அருகே உள்ள பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்.சார்பில் யோகா பயிற்சி நடந்தது. நிர்வாக அதிகாரி கந்தசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தார். ஆசிரியர் இருதயஅந்தோணி யோகா பயிற்சி செய்வதின் அவசியத்தை குறித்து பேசினார். ஏற்பாடுகளை பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலர் ஜெசுதாசன் செய்திருந்தார்.
* 5.ஆழ்வை.,யில் இலவச மருத்துவ முகாம்
ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரியில் த.மு.மு.க., மற்றும் மனிதநேய மக்கள்கட்சி சார்பில் இலவச மனிதநேய மக்கள்கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஆழ்வார்திருநகரி ஜி.டி.வி.நடுநிலைப் பள்ளியில் வைத்து நடந்த முகாமிற்கு த.மு.மு.க.தலைவர் ஹாஜாமுகைதீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முகமது நைனா, துணைச் செயலாளர் ரியாஸ்கான், மாவட்ட துணைத் தலைவர் முகமதுநவாஸ், ஆழ்வை ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனிதநேய மக்கள்கட்சி நகர செயலாளர் பைரோஸ்அலி வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் காதர்மைதீன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் டவுன் பஞ்.,தலைவர் ஆதிநாதன், மாவட்ட த.மு.மு.க.செயலாளர் ஆசாத், இளைஞர் அணி செயலாளர் மோத்திமஸம்மில் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் டாக்டர்கள் திரவியம், வெஜாண்சிங், ரீனா, மணவழகன், சார்லஸ்பிரேம்குமார், ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். எலும்புமூட்டு, கண், மகப்பேறு மகளிர் பொதுமருத்துவம், பல், பிஸியோதெரபி, காது மூக்கு தொண்டை என பல்வேறு நோய்களுக்கு 851 பேர் பயனடைந்தனர். 21 பேர் கண்புரை அறுவை சிகிச்சை செய்தனர். முகாம் ஏற்பாடுகளை த.மு.மு.க.,வினர், மனிதநேய மக்கள் கட்சியினர் செய்திருந்தனர்.
* 6.செந்தூர் பஸ்ஸ்டாண்டை உடனடியாக திறக்க கோரிக்கை
திருச்செந்தூர் : திருச்செந்தூர் பகத்சிங் பஸ்ஸ்டாண்டை உடனடியாக திறக்க யாதவ வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர் நகர யாதவ வியாபாரிகள் சங்க கூட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கணேசன், செயலாளர் வள்ளிநாயகம், பொருளாளர் நட்டார், துணை செயலாளர் கணேசன், கௌரவ ஆலோசகர் மூக்கன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ் ஸ்டாண்ட் பணியினை உடனே முடித்து திறக்க வேண்டும். நகரின் அனைத்து வார்டுகளிலும் உள்ள குப்பை, சாக்கடைகள் மற்றும் 10வது வார்டு கழிவு ஓடையை சுத்தம் செய்ய வேண்டும். தெற்குரதவீதி - மேலரதவீதி சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வலியுறுத்தி அனைத்து பொது நல அமைப்புகளை அழைத்து ரயில் மறியல் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இசக்கியதாஸ், மூக்கையா, கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* 7.இரவு நேரங்களில் கடைதிறக்க வியாபாரிகள் சங்கம் தீர்மானம்
திருச்செந்தூர் : திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக இரவு நேரங்களிலும் கடைகளை திறக்க நாடார் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர் நகர நாடார் வியாபாரிகள் சங்க வளர்ச்சி முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் காமராசு தலைமையும், செயலாளர் சுரேஷ், பொருளாளர் யாபேஷ், பாலசுந்தர், சுரேஷ், செல்வக்குமார், அருள்மணி, ராஜா, சுரேஷ், ஜெயசேகர் முன்னிலையும் வகித்தனர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் வீட்டில் உள்ள மாணவ, மாணவியர்களுக்கும் 10,12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்குபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். வியாபாரிகளுக்கு தொழில் வளர்ச்சிக்காக பாங்க்கில் கடன் பெற்றுத்தர ஆவண செய்யப்படும். திருச்செந்தூர் கோயிலுக்கு நாள்தோறும் வரும் பக்தர்கள் வசதிக்காக இரவு நேரத்திலும் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகளை திறக்க நடவடிக்கை எடுப்பது, நகரின் அனைத்து வார்டுகளிலும் உள்ள குப்பை, சாக்கடைகளை டவுன் பஞ்.,சுத்தம் செய்ய வேண்டும். செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பிரச்னையின் போது ஆறு கிராம பஞ்.,க்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள மோட்டார் பம்புகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் கலந்து கொண்டனர்.
* 8.எட்டயபுரத்தில் இ.கம்யூ பஸ் மறியல் போராட்டம் வாபஸ்
எட்டயபுரம் : எட்டயபுரத்தில் சமாதான கூட்ட முடிவுகளை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூ., சார்பில் நடக்க இருந்த பஸ் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த 2009 செப்டம்பர் 12ம் தேதி எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரி க்கைகளை நிறைவேற்ற வழியுறுத்தி நடந்த சமாதானக் கூட்ட நடவடிக்கையை நிறைவேற்றக் கோரி எட்டயபுரத்தில் பஸ் மறியல் போராட்டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்தனர். இந்நிலையில் எட்டயபுரம் தாலுகா ஆபிசில் தாசில்தார் மங்களம் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. சமாதானக் கூட்டம் முடிவுகளை ஏற்று போ ராட்ட குழுவினர் பஸ் மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
* 9.மின்வாரிய பணியிடங்களை நிரப்ப பாரதீய மஸ்தூர் சங்கம் கோரிக்கை
தூத்துக்குடி : மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பாரதீய மஸ்தூர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி நகர பிஎம்எஸ் (பாரதீய மஸ்தூர் சங்கம்) சிறப்புகூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட இணைப் பொதுச்செயலாளர் கந்தசாமி செல்வம், துணைச் செயலாளர் ஆறுமுக நயினார் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களை பாதிக்கும் வருமான வரி உச்ச வரம்பை ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாகவும், சேமிப்பு உச்சவரம்பை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்திட வேண்டும். ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை முழுமையாக விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியங்களை திணிக்ககூடாது. மின்வாரிய ஊழியர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பெல் போன்ற தரமான நிறுவனங்களின் சாதனங்களை வாங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்பிக் ஆலையை முழுமையாக இயங்க செய்ய வேண்டும். சென்னையை போன்று தூத்துக்குடியிலும் ஆட்டோக்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சம்பவம்
* 1.பைக் எரிப்பு மர்ம நபருக்கு வலை
கோவில்பட்டி : காவில்பட்டியில் பொதுப்பணித்துறை அதிகாரியின் பைக்கை எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,கோவில்பட்டி பொதுப்பணித் துறையில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் கணேசன் (45). இவர் சொந்த வேலை காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசன் வீட்டில் நிறுத்தியிருந்த பைக்கை மர்ம நபர்கள் தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கணேசன் கோவில்பட்டிக்கு வந்து கிழக்கு போலீசில் புகார் செய்தார். பைக்கை எரித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
* 2.நாசரேத்தில் உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு
நாசரேத் : நாசரேத் - ஏரல் சாலையில் மூக்குப்பீறி பகுதியில் உள்ள குறுகலான ரோடுக்கு மாற்று ரோடு அமைக்க முடிவு செய்துள்ளதாக திருச்செந்தூர் தாசில்தார் இளங்கோ தெரிவித்தார்.
நாசரேத் டவுன் பஞ்.,பகுதியில் நடக்கும் வாறுகால் பணி மோசமானதாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரி நாசரேத் வணிகர் சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவித்து இருந்தனர். இது சம்பந்தமான சமாதானக் கூட்டம் திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் இளங்கோ தலைமையில் நடந்தது. வாறுகால் பணியை தரமுள்ளதாக செய்யவும், பணியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்கவும், முடிவு செய்ததால் உண்ணாவிரதத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நாசரேத் வணிகர் சங்கத்தினர் ஒப்புக்கொண்டனர்.
* 3.கோவில்பட்டியில் விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்
கோவில்பட்டி : கோவில்பட்டியில் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடந்தது.
கோவில்பட்டியில் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அனைத்திந்நிய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு பொன்ராஜ் தலைமை வகித்தார். பவுல்சுந்தரம், மயில்வாகனன் மற்றும் மாநில கமிட்டி உறுப்பினர் சங்கரபாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர். விலைவாசி உயர்வுக்கு காரணமான ஆன்லைன் வர்த்தக ஒப்பந்தத்தை தடை செய்யவும், விவசாயிகளின் விலைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்யவும், குடும்ப அட்டைக்கு மாதம் 50 கிலோ அரிசி வழங்கவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாள் வேலை வழங்கவும், நிர்ணயித்த ஊதியம் 100 ரூபாயை வழங்கவும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
* 4.ஸ்ரீவை.,யில் விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் போராட்டம்
ஸ்ரீவைகுண்டம் : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட பொதுவிநியோக முறையை பலப்படுத்தவும் ஆகிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு உள்ளிட்ட 9 மத்திய தொழிற்சாலைகள் இணைந்து நடத்திய மறியல் போராட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொருளாளர் பரமசிவம் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஆறுமுகம், மா. கம்யூ., ஒன்றிய செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா அலுவலகத்தில் இருந்து பேரணியாக ஸ்ரீவைகுண்டத்தின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்து பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். மத்திய தொழிற்சாலைகளை சேர்ந்த பல்வேறு தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
* 5.சாத்தை.,யில் மறியல் செய்த காங்., கம்யூ.,தொழில்சங்கத்தினர் கைது
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் மறியலில் ஈடுபட்ட காங்.,கம்யூ., தொழில்சங்கத்தினர் 300பேர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியார்க்கு விற்பதை கண்டித்தல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூ., மற்றும் காங்., தொழிற்சங்கங்களான ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., சார்பில் சாத்தான்குளம் போஸ்ட் ஆபிஸ் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி., கட்டுமான சங்கமா வட்ட அமைப்பாளர் கிருஷ்ணராஜ், ஐ.என்.டி.யூ.சி., அமைப்பு சாரா மாவட்ட கிளைச் செயலர் ஜெபா, சி.ஐ.டி.யூ மாவட்ட இணைத்தலைவர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பாலசுந்தர கணபதி, ஜெயபாண்டியன், பாலகிருஷ்ணன், நல்லையா, ராஜகோபால், அம்ஸ்ராஸ், கிருஷ்ணன், ஆறுமுகநயினார் ஆகியோர் பேசினர். 50 பெண்கள் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்னர். இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சிநாதன்,முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயாபிரின்சஸ், அன்புக்கரசன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
* 6.கோவில்பட்டியில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மறியல் போராட்டம்
கோவில்பட்டி : மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் சிஐடியு, ஏஐடியுசி மற்றும் ஐஎன்டியுசி சங்கங்கள் சார்பில் மாபெரும் பஸ் மறியல் நடந்தது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பேரணி துவங்கி அண்ணா பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த பஸ் மறியல் போராட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ அய்யலுசாமி மற்றும் ஏஐடியுசி மாநில குழு உறுப்பினர் அழகுமுத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், முன்பேர வர்த்தகத்தை தடை செய்யவும், நலிவடைந்த நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, அதில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு பணி உத்ரவாதம் செய்தல், தொ ழிலாளர் நல சட்டங்களை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தல், 2008ஆம் ஆண்டு முறைசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனைவரும் பயன் பெறும் வகையில் வறுமை க்கோட்டை மாற்றி அமைத்தல். பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதையும் மற்றும் முறைசாரா தொழிலாளர் நலவாரிய பதிவிற்கு வருவாய் துறை விசாரணை யை ரத்து செய்யக் கோரியும் சிஐடியு, ஏஐடியுசி மற்றும் ஐஎன்டியிசி சங்கங்கள் இணைந்து பஸ் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் சிபிஐ நகர செயலாளர் பரமராஜ், ஏஐஒய்எப் மாவட்ட தலைவர் முத்துக்குமார், ஐஎன்டியுசி நகர தலைவர் ராஜசேகர், போக்குவரத்து ஏஐடியுசி செயலாளர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
* 7.தூத்துக்குடியில் ஆட்டோ ஸ்ரைக்
தூத்துக்குடி : பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆட்டோ ஸ்டிரைக் நடந்தது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். சமையல் காஸ் பதிவு செய்த மூன்று நாட்களுக்குள் சப்ளை செய்ய வேண்டும். சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் போது பில்லுடன் ஒரு டெலிவரி சார்ஜ்சும், டெலிவரி கொண்டு வரும் நபர்கள் ஒரு டெலிவரி சார்ஜ்சும் பெறுவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்பவத்தன்று தூத்துக்குடியில் நகரில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இந்த ஆட்டோ ஸ்டிரைக் காரணமாக பழைய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேசன் போன்ற இடங்களுக்கு வந்த வெளியூர் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.
* 8.விலைவாசி உயர்வைக் கண்டித்து மறியல் போராட்டம்
திருச்செந்தூர் : விலைவாசி உயர்வைக் கண்டித்து திருச்செந்தூரில் ஏஐடியுசி., சிஐடியு., சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்தியது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு விற்கக்கூடாது. தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்தி அவர்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்செந்தூர் வ.உ.சி.திடலில் ஏஐடியுசி., சிஐடியு., சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்தியது. போராட்டத்திற்கு சிஐடியுசி., மாவட்டத் தலைவர் பொன்ராஜ், ஏஐடியுசி., மாவட்ட துணைத் தலைவர் சங்கரகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேச ஆதித்தன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சிஐடியு., சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் திருத்துவராஜ், பன்னீர்செல்வம், கன்வீனர் ஜெகதீசன், போக்குவரத்து சங்க செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய மீனவரணி கில்பட் சில்வேரா, கட்டுமான சங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ஆறுமுகம் ஆகியோரும், ஏஐடியுசி., சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் காசிலிங்கம், ஒன்றிய செயலர் ஆண்டி, ஒன்றிய துணை செயலர் இசக்கி, நகர செயலாளர் ராஜாமணி, ஏஐஒய்எப்., ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சிபிஐ நகர செயலாளர் கணேசன் மற்றும் கார், ஆட்டோ சங்கத்தினர் உட்பட 208 ஆண்கள், 122 பெண்கள் உட்பட மொ த்தம் 330 பேர் கலந்து கொ ண்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை டிஎஸ் பி., நடராஜமூர்த்தி தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
Sunday, March 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment