Sunday, March 7, 2010

கிருஷ்ணகிரி

* 1.மாற்று திறன் கொண்ட மகளிருக்கு போட்டிகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி மாற்று திறன் கொண்ட மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் இன்று 8ம் தேதி நடக்கிறது. கலெக்டர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:


உலக மகளிர் தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மகளிருக்கான விளையாட்டு போட்டிகள் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது. காலை 9 மணிக்கு துவங்கும் போட்டிகளை கலெக்டர் சண்முகம் துவக்கிவைக்கிறார்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை விளையாட்டு திடலில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மகளிர் அனைவரும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளலாம்.



Top
* 2.ஓசூர் பஸ் ஸ்டாண்ட் கடைகள் 18ல் ஏலம் ஐந்தாவது முறையாக நடப்பதால் பரபரப்பு

ஓசூர்: ஓசூர் நகராட்சி புதுபஸ்ஸ்டாண்ட் கடைகள் ஏலம் வரும் 18ம் தேதி ஐந்தாவது முறையாக நடக்கிறது.
ஓசூர் நகராட்சி சார்பில் ரூ.10 கோடியில் பெங்களூரு சாலையில் புது பஸ்ஸ்டாண்ட் கட்டப்படுகிறது. இங்கு, நகராட்சிக்கு நிரந்தரமாக வருமானம் தரக்கூடிய வகையில், 76 கடைகள், இரு ஹோட்டல்கள் கட்டப்பட்டு உள்ளன.வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் ஓசூர் பஸ்ஸ்டாண்ட் வந்து செல்வதால், பஸ்ஸ்டாண்ட் கடைகளில் நடக்கும் வியாபாரம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதனால், கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டது. நகராட்சி கவுன்சிலர் தரப்புக்கும், ஆளும் தி.மு.க., நிர்வாகிகள் தரப்புக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடைகளை ஏலம் விடுவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடந்த முதல் ஏலத்தில் வியாபாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. அக்டோபர் 21ம் தேதி நடந்த இரண்டாவது ஏலத்தில் குறைந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். நவம்பர் 11ம் தேதி மூன்றாவது முறையாகவும், பிப்ரவரி 11ம் தேதி நான்காவது முறையும் ஏலம் நடத்தப்பட்டது. கடைசி இரு முறை நடந்த ஏலத்தில் வியாபாரிகள் ஆர்வமாக கலந்து கொண்டு கடைகளை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். புது பஸ்ஸ்டாண்ட் கடைகள் 19,000 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக 25,000 ரூபாய் மாத வாடகைக்கு ஏலம் போனது. இது வரை நடந்த நான்கு ஏலத்தில் மொத்தம் 16 கடைகள் ஏலம் போனது. இரு கடை ஏலம் உறுதி செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெறும் 13 கடைகள் மட்டும் வியாபாரிகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 61 கடைகளுக்கும், இரு ஹோட்டல்களுக்கும் வரும் 18ம் தேதி ஐந்தாவது முறையாக ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கீழ் தளத்தில் முக்கியத்தும் வாய்ந்த கடைகள் அனைத்தும் ஏலம் போய் விட்டது. ஹோட்டல்களில் சமையல் செய்ய கூடாது என்றும், உணவுகளை வேறு இடங்களில் தயாரித்து வந்து விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கண்டிப்பான விதிமுறை உள்ளது. இதனால், ஹோட்டல்களை வியாபாரிகள் எந்தளவுக்கு ஏலம் எடுக்க வருவார்கள் என்பது தெரியவில்லை.பஸ் ஸ்டாண்ட் ஹோட்டலுக்கு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் அவசர கோலத்தில் வந்து செல்பவர்களும் வருவார்கள். அவர்கள் பஸ்ஸ் டாண்ட் ஹோட்டல்களை விட்டு வேறு கடைகளுக்கு செல்ல வாய்ப்பில்லை. பஸ்ஸ்டாண்ட் வரும் வெளியூர் பயணிகளை நம்பி மட்டும் ஹோட்டல் வியாபாரம் உள்ளது. ஹோட்டல்களை அதிக மாத வாடகை கொடுத்து எடுக்க வியாபாரிகள் மத்தியில் ஆர்வம் இல்லாமல் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:


ஏலம் விடப்பட்டுள்ள கடைகள் அனைத்தும், தமிழகத்தின் பிற பஸ் ஸ்டாண்ட்களை ஒப்பிடும்போது அதிகப்பட்ச மாதவாடகைக்கு ஏலம் போய் உள்ளது. பஸ்ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. மீதம் உள்ள கடைகளும் அதிக மாத வாடகைக்கு போகும் வாய்ப்புள்ளது. ஏலம் எடுக்கப்படும் கடைகளின் டெண்டர் உரிமை காலம் முதல் மூன்று ஆண்டுகளாகும். அதன்பின், மாதவாடகை தொகையில் 15 சதம் உயர்த்தி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்படும். இந்த நடைமுறை ஒன்பது ஆண்டு காலம் செயல்படுத்தப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.
Top
* 3.அரசு பஸ்சில் 'டிவிடி' திருட முயன்ற வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் நின்ற அரசு பஸ்சில் "டிவிடி' பிளேயரை திருட முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மக்கான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் அர்சுணன் (34). இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்கோட்டில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ்சை நிறுத்திய அர்சுணன் கழிவறைக்கு சென்று திரும்பினார். அப்போது பஸ்சில் இருந்த "டிவிடி' பிளேயரை திருடிக்கொண்டிருந்த் வாலிபரை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.விசாரணையில், அவர் பாலக்கோடு முகுதின் நகரை சேர்ந்த அஸ்லாம் (26) என தெரிந்தது, அவரை போலீஸார் கைது செய்தனர்.
Top
* 4.ஓசூர் அருகே பெண் மர்ம சாவு கணவர் உள்ளிட்ட 3 பேர் கைது

ஓசூர்: ஓசூர் அடுத்த சூளகிரி அருகே இளம் பெண் மர்ம சாவு குறித்து கணவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். சூளகிரி அடுத்த பீர்பள்ளியை சேர்ந்தவர் ராஜசேகர் (29). இவரது தங்கை கிரிஜா (20). இவருக்கும், தளவாய்பள்ளியை சேர்ந்த பால்ராஜ் (30) என்பவருக்கும் கடந்த எட்டு மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கடந்த இரு மாதமாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


சமீபத்தில் நடந்த தகராறின் போது, கிரிஜா கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ராஜசேகர் தங்கையை சமாதானப்படுத்தி மீண்டும் அவரது கணவர் வீட்டில் விட்டார். நேற்று முன்தினம் தளவாய்பள்ளி ஏரிக்கரையில் உள்ள மரத்தில் கிரிஜா பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். சூளகிரி போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரித்தனர். கிரிஜாவின் அண்ணன் ராஜசேகர், "தனது தங்கையை அவரது கணவர் பால்ராஜ், மாமனார் பாலப்பன், மாமியார் ராஜூ ஆகியோர் அடித்து கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்கவிட்டதாக' போலீஸில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கதிர்வேலர்(பொறுப்பு) விசாரித்து, பால்ராஜ், பாலப்பன், ராஜு ஆகியோரை கைது செய்தனர்.
Top

பிரச்னைகள்

* 1.சரக்கு வாகன வரி செலுத்த வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: "கர்நாடகா மாநில சரக்கு வாகனம் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் இடை மாநில வரியை செலுத்த வேண்டும்' என ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:



கர்நாடகா மாநில சரக்கு வாகனம் அனுமதி பெற்ற வாகனங்களுக்கு தமிழகத்துக்கு செலுத்த வேண்டிய நடப்பாண்டுக்கான (2010-11) இடை மாநில வரி வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வாகன உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். வரித் தொகையை ரொக்கமாகவோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வரைவோலையாகவோ மத்திகிரி பிரிவு சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை நாட்களில் 10 மணி முதல் மதியம் 12 மணிவரை செலுத்தலாம். போக்குவரத்து அல்லாத வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக வாகனக்களுக்கு நடப்பாண்டுக்கான வரி வசூல் வரும் 26ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை வாகன உரிமையாளர்கள் செலுத்தலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Top

சம்பவம்

* 1.அனுமதியின்றி மணல் எடுத்த லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே நல்லூர் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். வேப்பனப்பள்ளி எஸ்.ஐ., பாலசுந்தரம் மற்றும் போலீஸார் நல்லூர் ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லூர் ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரியை போலீஸார் மடக்கி பிடித்து மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவர் அட்டக்குறிக்கி ராம்சிங் (50) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
Top
* 2.வியாபாரியை கடத்தி துன்புறுத்திய 5 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை

கிருஷ்ணகிரி: முன்விரோதத்தில் வெல்ல வியாபாரியை கடத்தி துன்புறுத்திய ஐந்து பேருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி பழைய பேட்டையை சேர்ந்தவர் வெல்ல வியாபாரி ஜெயக்குமார் (45). இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் இருந்து வெல்லத்தை வாங்கி வந்து கிருஷ்ணகிரியில் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.வெல்ல வியாபாரம் சம்மந்தமாக ஜெயக்குமாருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த அடிவாரம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையில் முன் விரோதம் இருந்தது.கடந்த 2005 ஜூலை 19ம் தேதி கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள கடையில் இருந்த ஜெயகுமாரை டாடா சுமோ காரில் வந்த மர்ம கும்பல் கடத்தி சென்றனர்.

இது குறித்து ஜெயகுமாரின் மனைவி போலீஸில் புகார் செய்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அடிவாரம் கிராமத்தை சேர்ந்த வெல்ல வியாபாரிகள் சங்கர், ரவிச்சந்திரன், காந்தி, அறிவு, ராஜமாணிக்கம், ரவி ஆகிய ஆறு பேரும் ஜெயகுமாரை காரில் கடத்தி சென்று அடித்து துன்புறுத்தியது தெரிந்து, சம்பவ இடத்துக்கு சென்று ஜெயகுமாரை மீட்டனர். சங்கர் உள்ளிட்ட ஆறு பேரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோசம், வெல்ல வியாபாரிகள் சங்கர், ரவிச்சந்திரன், காந்தி, அறிவு, ரவி ஆகிய ஐந்து பேருக்கும் மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜமாணிக்கம் வழக்கு நடக்கும் போது இறந்துவிட்டார்.
Top
* 3.வெவ்வேறு விபத்தில் 2 பேர் பரிதாப பலி

காவேரிப்பட்டணம்: காவேரிபபட்டணத்தை அடுத்த சவூளூரை சேர்ந்தவர் விவசாயி தீர்த்தகிரி. இவர் காவேரிப்பட்டணத்தை அடுத்த நேருபுரம் அருகே சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த லாரி தீர்த்தகிரி ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த தீர்த்தகிரி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரிக்கின்றனர். * காவேரிப்பட்டணம் திம்மாபுரத்தை சேர்ந்தவர் குழந்தை (75). இவர் காவேரிப்பட்டணத்தை அடுத்த சுப்பிரமணியபுரம் அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயம் அடைந்த அவர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Top
* 4.ஒயர் திருடிய 2 வாலிபர்கள் கைது

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி சேலம் சாலையில் தனியாருக்கு சொந்தமான மொபைல்ஃபோன் டவர் உள்ளது. இந்த டவரில் இருந்த 1,600 ரூபாய் மதிப்புள்ள காப்பர் ஒயர்களை இருவர் திருடி எடுத்து சென்றதை வாட்ச்மேன் சங்கர் (35) பார்த்து சத்தம் போட்டார். அப்போது, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் காப்பர் ஒயரை திருடிய இரு வாலிபரை விரட்டி சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் அவதானப்பட்டி விஜய் (23), தொன்னயன்கொட்டாய் மஞ்சுநாத் (25) என தெரிந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment