Sunday, March 7, 2010

புதுக்கோட்டை

* 1.பிளஸ் 2 தேர்வு இன்று வழக்கம்போல் நடக்கும் கலெக்டர் சுகந்தி தகவல்

புதுக்கோட்டை:புதுகை மாவட்டத்தில் இன்று(8ம் தேதி) பிளஸ் 2 பொதுத்தேர்வு வழக்கம் போல் நடக்கும் என்று கலெக்டர் சுகந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுகை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று(8ம் தேதி) மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வழக்கம் போல் இன்று நடக்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Top
* 2.எம்என்எஸ்கே கல்லூரி கேம்பஸ் இன்டர்வியூ

புதுக்கோட்டை : புதுகை எம்என்எஸ்கே பொறியியல் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது.பெங்களூர் பார்ச்சுன் டெக் நிறுவனம் சார்பாக சாப்ட்வேர் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ எம்என்எஸ்கே பொறியியல் கல்லூரியில் நடந்தது. கல்லூரி பதிவாளர் சிவபிரகாஷ் தலைமை வகித்தார். பார்ச்சுன் டெக்நிறுவன பொதுமேலாளர் மஞ்சுநாத், அதிகாரிகள் அன்பழகன், ரோஷனி, கிரேந்தி, கல்லூரி டீன் ஸ்ரீகுமார், துறைத்தலைவர்கள் மதிவாணன், இந்துமதி, சாந்தி, முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இன்டர்வியூவில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை பதிவாளர் சிவபிரகாஷ், பார்ச்சுன் டெக் நிறுவன பொதுமேலாளர் மஞ்சுநாத் ஆகியோர் வழங்கினர். கல்லூரி வேலைவாய்ப்பு துறை பேராசிரியர் குருமூர்த்தி வரவேற்றார். மாணவி ஜாஸ்மின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை விரிவுரையாளர் கதிரவன் செய்திருந்தார்.
Top

பொது

* 1.இன்று மின்தடை

திருமயம்:திருமயம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இதிலிருந்து மின்விநியோகம் பெறும் திருமயம், ராயவரம், கோனாப்பட்டு, ராங்கியம், விராச்சிலை மின்பாதையில் இன்று (8ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
Top
* 2.ஆலங்குடியில் ஜல்லிக்கட்டு விழா

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடந்தது. ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, தஞ்சை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 600 மாடுகள் கலந்துகொண்டன. ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கும் வீரர்களுக்கு "டிவி', பிரிட்ஜ், சைக்கிள், கிரைண்டர், மிக்ஸி, ரொக்க பணம் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்க வரும் வீரர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மொத்தம் 98 வீரர்கள் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு மாட்டை அடக்க முயன்ற வீரர்கள், வேடிக்கை பார்த்த பொதுமக்களை மாடு முட்டி தள்ளியது. இதில் 120 பேர் காயமடைந்தனர். இவர்களில் 18 நபர்கள் மிக ஆபத்தான நிலையில் தஞ்சாவூர், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் திருச்சியை பரமகோவில் தெருவை சேர்ந்த ராஜகணபதி மகன் விஸ்வநாதன்(19) திருச்சி அரசு மருத்துவமனையில் இறந்தார். ஜல்லிக்கட்டு விழாவை காண 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஹைகோர்ட் உத்தரவுபடி ஜல்லிக்கட்டு விழா நடந்தது.
Top
* 3.செயற்குழு கூட்டம்

விராலிமலை:விராலிமலை ஒன்றிய கல்வி வளமைய செயற்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் மணி தலைமை வகித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் தாமஸ் ஞானசேகரன், ஒன்றிய ஆணையர் ராமுக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி வளமைய மேற்பார்வையாளர் தங்கராசு வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், கல்வியாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உண்டு, உறைவிடம் மற்றும் கல்வி பள்ளிகளை தேர்வு செய்தல், பழைய கட்டட பழுதுகளை செப்பனிடுதல், புதிய பள்ளிக்கட்டடங்களை கட்டுதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Top
* 4.சூரிய சக்தி மேம்பாட்டு கருத்தரங்கம்

திருமயம்:திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் சூரியசக்தி மேம்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.தாளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் சண்முகம், ஜான் உட்பட பலர் பேசினர். சூரிய ஆற்றலை பயன்படுத்தி மேலும் பல எந்திரங்களை இயக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் விவாதிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தனர். அவர்களின் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்தனர். முதல்வர் மீனாட்சி சுந்தரம், கல்லூரி டைரக்டர் நிலவழகன், துரை தலைவர்கள் பேசினர். செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
Top
* 5.தேசிய அறிவியல் நாள் விழா

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல்இயக்கம் சங்கமம்ஜூனியர்சேம்பர் இணைந்து தேசிய அறிவியல் நாள் விழா நடந்தது.விழாவிற்கு சங்கமம் ஜூனியர் சேம்பர் தலைவர் தாமஸ் எட்வர்டுதலைமைவகித்தார். அறிவியல் இயக்க மாவட்டத்தலைவர் பிரபாகரன் முன்னிலைவகித்தார். அறிவியல் இயக்க மா நில செயற்குழு உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்டப்பொருளாளர் வீரமுத்து உட்படபலர் பேசினர். தொடர்ந்து 6,7,8,9,11 வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வகுப்புக்கும் மூன்று மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் கருப்பையா வரவேற்றார். சங்கமம் ஜூனியர் சேம்பர் செயலாளர் ஜார்ஜ் நன்றி கூறினார்.
Top
* 6.நிர்வாகக்குழு கூட்டம்

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் மக்கள் தமிழகம் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் குமார், மாநில செய்தி தொடர்பாளர் டென்னிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் பிரபு மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொகுதி செயலாளர் அய்யர் நன்றி கூறினார்.
Top
* 7.குஜராத் பேஷன் மேளா

புதுக்கோட்டை,: புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் குஜராத் பேஷன் மேளா தொடங்கியது.புதுக்கோட்டையில் முதன்முதலாக குஜராத் பேஷன் மேளா வடக்குராஜவீதி கவுரிநிவாஸ் திருமண மகாலில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மேளாவில் பனராஸ் சேலை, ஜரிபார்டர், எம்ராய்டரி, லெஜர் புடவைகள், கைவினை சுடிதார், பட்டியாலா சுடிதார், அகமதாபாத் சுடிதார் உட்பட பல்வேறு ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. விற்பனை தொடங்கப்பட்ட நாளிலிருந்து புதுகை நகர மக்கள் ஆர்வமு டன் வந்து தங்களுக்கு தேவையான துணிவகைகளை வாங்கி செல்கின்றனர்.
Top
* 8.பெண்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை : சொல்கிறார் கலெக்டர்

புதுக்கோட்டை : பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கலெக்டர் சுகந்தி பேசினார்.புதுகையில் பெண் வக்கீல்கள் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. ஆலங்குடி குற்றவியல் மாஜிஸ்திரேட் மாலதி தலைமை வகித்தார். விழாவில் கலெக்டர் சுகந்தி கலந்து கொண்டு பேசியதாவது@ சட்டத்தை படித்த பெண்கள் சட்டங்களை மட்டும் பேசாமல் மற்ற விஷயங்களை பேசுவது பெருமைக்குறியதாக உள்ளது. விஞ்ஞானமும் சமுதாயமும் பிரிக்க முடியாதது. சுதந்திரம் என்பது தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக சொல்லுவது. பெண்கள் கற்க வேண்டும், அதனை புரிந்து கொண்டு செயல்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பெண்களுக்காக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த சட்டங்களை வைத்து எவ்வளவு பெண்களை காப்பாற்றியுள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.

பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு தேவை என்று அனைவரும் கேட்கின்றனர். ஆனால் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு தேவையில்லை. இடஒதுக்கீடு இருந்தால் நமக்கு தான் இடஒதுக்கீடு உள்ளதே என்று பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள். போட்டிகள் இருந்தால் பெண்கள் பலதுறைகளில் முன்னேற்றம் அடையமுடியும். பெண்களும், திட்டமிடுதல் என்பதை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் புதுகை நகராட்சி தலைவர் ராமதிலகம், வக்கீல் சங்க துணைத்தலைவர் விஜயா, மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளர் குருவம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல் தேன்மொழி வரவேற்றார். வக்கீல் உஷாராணி நன்றி கூறினார்.
Top
* 9.விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை,:கைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி தாளாளர் கருப்பையா தலைமை வகித்தார். தாளாளர் குமாரசாமி, துணை முதல்வர் கலியபெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரின்ஸி இமாக்குலேட் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினர்கள் ராஜலிங்கம், ராமலிங்கம் உட்பட பலர் பேசினர். எய்ட்ஸ் குறித்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. முதல்வர் வெங்கடேஷ் வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள் கோபிநாத், வெற்றிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
Top
* 10.வயலோகத்தில் என்எஸ்எஸ் முகாம்

புதுக்கோட்டை : பெருமாநாடு சுதர்சன் கலைஅறிவியல் கல்லூரி சார்பில் என்என்எஸ் முகாம் வயலோகத்தில் நடந்தது.முகாமினை புதுக்கோட்டை முன்னாள் நகராட்சி சேர்மன் துரை.திவ்யநாதன் தொடங்கிவைத்து பேசினார்.சுதர்சன் கல்வியியல்கல்லூரி முதல்வர் ரங்கராஜன், அருளானந்தம், ஊராட்சி துணைத்தலைவர் செல்வராஜ், பேராசிரியர் சாலைமணி உட்படபலர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை திட்ட அலுவலர் வீரபாண்டியன் செய்தார். கல்லூரி முதல்வர் வீரபாண்டியன் வரவேற்றார்.துணை முதல்வர் பஞ்சாட்சரம்நன்றி கூறினார்.
Top
* 11.தூய சேவியர் பிஎட் கல்லூரி என்எஸ்எஸ் முகாம்

புதுக்கோட்டை : புதுகை வேங்கிடகுளத்தில் தூய சேவியர் பிஎட் கல்லூரி சார்பில் என்எஸ்எஸ் முகாம் நடந்தது. கல்லூரி நிர்வாக அலுவலர் செல்வராஜ் தலைமை வகித்தார். முதல்வர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அறந்தாங்கி சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன் முகாமை தொடங்கி வைத்தார். வேங்கிடகுளம் பகுதியில் சாலை செப்பனிடுதல் உள்ளிட்ட உழவார பணிகள் நடந்தது. இதனையடுத்துவெண்ணாவல்குடியில் நடந்த பணியை அரசு பொதுமருத்துவர் செந்தில்குமார், வல்லத்திராக்கோட்டை டாக்டர்கள் ஜெகன், ஜெசிந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர். சமூக பணியில் இளைஞர்கள் பங்கு என்ற தலைப்பில் திருவருள் பேரவைத்தலைவர் சம்பத்குமார், ஆன்மிகத்தில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் தயானந்த சந்திரசேகரன், ஆசிரியர் பணி சிறப்பு குறித்து டாக்டர் மேரி ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை தூய சேவியர் கல்வி நிறுவன தாளாளர் அன்னமேரி செய்திருந்தார்.
Top
* 12.விராலிமலையில் தேசிய பாதுகாப்பு வார விழா

விராலிமலை : விராலிமலை ரானே தொழிற்சாலையில் தேசிய பாதுகாப்பு வார விழா நடந்தது.நிறுவனத் தலைவர் கிருஷ்ண அய்யர் தலைமை வகித்து பாதுகாப்பு வார விழா சிறப்பும், பயன்களும் பற்றி விளக்கவுரையாற்றினார். தொழிலாளர்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துக்கூற வேண்டும் என்று மனித வள மேம்பாட்டுத்துறை தலைவர் சூசன் ஹெலினா, தொழிற்சாலை உதவி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கூறினர். நிகழ்ச்சியில் ரானே தொழிற்சாலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொழிலாளர்களுக்கு பல போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன. தொழிற் சங்கத் தலைவர் நன்றி கூறினார்.
Top
* 13.குடிமையியல் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை : ஜெஜெ கல்வியியல் கல்லூரியில் குடிமையியல் பயிற்சி, பாடி வாழ்க்கை நிகழ்ச்சி நடந்தது.மாணவர்கள் கல்லூரி வளாகம், விளையாட்டு மைதானம் பகுதியில் உள்ள கோயில் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்தனர். மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஜெஜெ செவிலியர் பயிற்சி நிறுவன முதல்வர் சுமித்ரா பேசினார். துணை முதல்வர் ஜானகி முதல் உதவி என்ற தலைப்பிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஜெஜெகலை அறிவியல் கல்லூரி முதல்வர் பரசுராமன், செஞ்சிலுவை சங்கமும் மாணவ,ஆசிரியர் அர்ப்பணிப்பின் அவசியமும் என்ற தலைப்பில் மன்னர் கல்லூரி பேராசிரியர் விஸ்வநாதன், சுத்தமும், சுகாதாரமும் என்ற தலைப்பில் ஜெஜெகல்லூரி நிர்வாக அறங்காவலர் கவிதா ஆகியோர் பேசினர்.
Top
* 14.பெருங்காட்டில் இலவச கலர் டிவி வழங்கும் விழா

அறந்தாங்கி : அறந்தாங்கியை அடுத்த பெருங்காடு ஊராட்சியில் இலவச கலர் டிவி வழங்கும் விழா நடந்தது.ஒன்றிய சேர்மன் மெய்யநாதன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் மாயழகு வரவேற்றார். ஒன்றிய துணைத் தலைவர் வெள்ளச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறந்தாங்கி எம்எல்ஏ உதயம் சண்முகம் 733 பயனாளிகளுக்கு இலவச கலர் டிவிக்களை வழங்கினார்.மாவட்ட துணைச் செயலாளர் சுப்பையா, மாவட்ட இலக்கிய அணி செல்லத்துரை, ஊராட்சி துணைத் தலைவர் வீரமுத்து, ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் நல்லக்கூத்தன், கவுன்சிலர் மாணிக்கம், ஊராட்சி தலைவர்கள் ஊர்வனி ஜீவராஜ், ஆவணத்தாங்கோட்டை கருணாநிதி, ஆமாஞ்சி தேவி, மேல்மங்களம் சண்முகம், அத்தாணி பரமசிவம், ஏக பெருமாளூர் தர்மவீரன், கீழ்க்குடி பாலு, கொடிவயல் முருகேசன், தொண்டைமானேந்தல் கருப்பையா, பூவற்றக்குடி செல்வராஜ், மேலப்பட்டு கருப்பையா, மண்டல துணை தாசில்தார் இந்திரா, வட்டார காங்கிரஸ் தலைவர் தவசுமணி, வேங்கூர் வட்ட விஏஒ சுப்பையா, ஊராட்சி உறுப்பினர்கள் அம்மையன், ஜெயராமன், ஆறுமுகம், பெரியசாமி, ஜெயம், கமலம், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பெருங்காடு, துவாரகம்பாள்புரம், கூத்தங்குடி, மஞ்சக்கரை, கோவில்வயல், வைராண்டி, வேங்கூர், மாமண்டை, இறையோன்பட்டி, மேலப்பெருங்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி உதவியாளர் பழனிசாமி நன்றி கூறினார்.திருமயம் : திருமயம் அருகே உள்ள விராச்சிலையில் அரசின் இலவச கலர் டிவி வழங்கும் விழா நடந்தது.தாசில்தார் சண்முகம் தலைமை வகித்தார். நலிந்தோர் நலத்திட்ட தனி தாசில்தார் புகழேந்தி முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜன் வரவேற்றார். ஆயிரத்து 167 பேருக்கு அரசின் இலவச கலர் டிவிக்களை எம்எல்ஏ ராம.சுப்புராம் வழங்கி பேசினார். இலவச டிவிக்களில் 50க்கும் மேற்பட்ட டிவிக்கள் உடைந்து போயிருந்தன. இதனால் பயனாளிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு தாசில்தார் உத்தரவின்பேரில் எல்காட் நிறுவன அதிகாரிகள் வந்து பழுதை சரி செய்தும், உடைந்து போன டிவிக்களுக்கு பதிலாக மாற்று டிவி தரவும் ஒப்புக்கொண்டனர்.
Top
* 15.மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியில் மேல்நிலை பிரிவிற்கான ஆண்டு விழா நடந்தது.புதுக்கோட்டை மவுன்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆண்டு விழா நடந்தது. மவுன்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் சேர்மன் ஜெயபாரதன் செல்லையா தலைமை வகித்தார். முதுநிலை முதல்வர் ஜோனத்தன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் பாடப் பிரிவுகளில் 100 சதவிகிதம் பெற்ற மாணவர்களுக்கும் காசோலை மற்றும் பதக்கங்களை மாணவ, மாணவிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிபதி அய்யாச்சாமி வழங்கினார். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை பிளாரன்ஸ் ஜெயபாரதன் செய்திருந்தார். முதல்வர் ரவிக்குமார் நன்றி கூறினார்.
Top
* 16.விழிப்புணர்வு கருத்தரங்கு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை ஜெஜெ செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் யானைக்கால் நோய் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் யானைக்கால் நோய் குறித்து புதுகை நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராம்கணேஷ் பேசினார். கல்லூரி ஆசிரியை நிர்மலா வரவேற்றார்.ஆசிரியை மகாலட்சுமி நன்றி கூறினார். * அண்டக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோய் தடுப்பு முகாம் நடந்தது.சுகாதார ஆய்வாளர் பிரின்ஸ் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகளை வழங்கினார். மருந்தாளுனர் தேன்மொழி, செவிலியர்கள் ரேபக்காவிமலா ரோஸ், வனிதா, மாலதி, ஆனந்தி, கவிதா மற்றும் ஆஸ்பத்திரி பணியாளர் பாபுஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Top
* 17.பாரதி கல்லூரி முத்தமிழ் விழா

புதுக்கோட்டை : புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா நடந்தது.விழாவிற்கு ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனத்தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். இந்திரா குத்துவிளக்கேற்றி வைத்தார். செயலாளர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜானகி வரவேற்றார். விழாவை தொடங்கி வைத்து பேராசிரியர் அண்ணாமலை வாழ்த்தி பேசினார்.விழாவில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெருந்துணை செய்வது இல்லச்சூழலா? கல்லூரி சூழலா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்றத்திற்கு நாகர்கோவில் ராஜாராம் தலைமை வகித்தார்.

இல்லச்சூழலே எனும் தலைப்பில் ராம.சவுந்தரிவள்ளி, கவிஞர் மகா ஆகியோரும், கல்லூரி சூழலே எனும் தலைப்பில் அன்பழகன், கவிஞர் முபா ஆகியோரும் பேசினர். தமிழ்துறை தலைவர் அல்லிராணி நன்றி கூறினார்.பின்னர் நடந்த இசையும், நாடகமும் எனும் நிகழ்ச்சியை ரவி பல்லவராயர் தொடங்கி வைத்தார். "இவர்கள் இன்று வந்தால்' என்னும் தலைப்பில் நாடகம் நடந்தது. உலக திருக்குறள் பேரவை பொது செயலாளர் மலையப்பன் தலைமை வகித்தார். திருவள்ளுவர், பாரதியார், வள்ளலார் ஆகிய வேடங்களில் கல்லூரி மாணவிகள் நாடகம் நிகழ்த்தினர். தமிழ்துறை மாணவி வினோபா நன்றி கூறினார்.
Top

பிரச்னைகள்

* 1.கட்டாய திருமண சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ; கட்டாய திருமண சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று புதுகையில் நடந்த தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.புதுகையில் தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை தொடக்க விழா மற்றும் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தது. அப்துல் கரீம் தலைமை வகித்தார். நூர்முகமது முன்னிலை வகித்தார். தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை மாநில தலைவர் சச்சாமுபாரக் தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை குறித்து விளக்கமளித்து, புதுகை மாவட்ட கிளையை தொடங்கி வைத்தார்.

தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை மாநில பொதுச் செயலாளர் சுல்தான், மாநில ஒருங்கிணைப்பாளர் பாக்கர் அலி சாகிப், பொருளாளர் கலிபா சாகிப், நாகூர் ஜெகபர் அலி, நாகை மாவட்ட தலைவர் சுல்தான் அலாவுதீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதுகை மாவட்ட தலைவராக ஷேக் அப்துல்லா, செயலாளராக பாஷா, துணை செயலாளராக முகமது சுல்தான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசு கொண்டுவந்துள்ள கட்டாய திருமண சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஆண்டுதோறும் சந்தன உருஸ் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணை பொதுச் செயலாளர் காதர் அலி தொகுத்து வழங்கினார். மாநில துணைத் தலைவர் கமால்பாட்ஷா வரவேற்றார்.
Top

சம்பவம்

* 1.மினிலாரி மோதி மெக்கானிக் பலி

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோயில்பட்டியில் டூவீலரில் வந்த நபர் மீது மினி லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேராவூரணி அருகே ஒட்டன்காடு பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் வைத்திலிங்கம்(55). இவர் மோட்டார் மெக்கானிக் வேலைபார்த்து வந்தார். இவர் பஜாஜ் மோட்டார் பைக்கில் ஒட்டன்காட்டிலிருந்து ஆலங்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்குடியிலிருந்து ஆவணம் நோக்கி சென்ற மினி லாரி எதி ரே வந்த வைத்திலிங்கம் மீது மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வைத்திலிங்கம் இறந்தார். இதுகுறித்து மினி லாரி டிரைவர் வெள்ளைசாமியை, வடகாடு போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Top
* 2.ராசேந்திரபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

அறந்தாங்கி : அறந்தாங்கியை அடுத்த ராசேந்திரபுரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் அறந்தாங்கியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் ராசேந்திரபுரம் கடைவீதி உள்ளது. இக்கடைவீதியில் ராசேந்திரபுரம், காயக்காடு,தொழுவங்காடு, குருந்திரகோட்டை,எருக்கலகோட்டை, ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கூடுவர். இந்நிலையில் கடை வீதிக்கு அருகில் ஒரு பாலமும், அதன் அருகில் சாலைபகுதி வளைவாகவும் உள்ளது. மேலும் இந்த வளைவாக உள்ள பகுதியில் பல கடைகள் இருந்தன. இதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். ஆக்கிரமிப்பினை அகற்றியபோது நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் கருப்பசாமி, உதவிப்பொறியாளர் தமிழ்செல்வன் தாசில்தார் சங்கரலிங்கம், ஊராட்சி துணை தலைவர் அப்துல்சலாம்,விஏஓ கலைமணி, ஆகியோர் உடன் இருந்தனர்.
Top
* 3.ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை : புதுகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருநபர்குழு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும், தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை கைவிட்டு பழைய முறை தொடர வேண்டும், என்பது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். எல்ஐசி ஊழியர் சங்க மண்டல துணைத்தலைவர் அசோகன் தொடங்கி வைத்தார்.

மாவட்ட செயலாளர் கருப்பையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் செபஸ்தியான், பாஸ்கரன், ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் ராமன், கீதா, வின்சென்ட் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் உட்பட பலர் வாழ்த்தி பேசினர். மாநிலத்துணைத்தலைவர் நீலமேகம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். மாவட்ட பொருளாளர் தவமணி நன்றி கூறினார்.
Top

பொழுது போக்கு

* 1.திருமயத்தில் வாலிபால் போட்டிதேனி போலீஸ் அணி வெற்றி

திருமயம்:திருமயம் அதிமுக சார்பில் ஜெ.பிறந்த தின விழாவை முன்னிட்டு வாலிபால் போட்டி நடந்தது.ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கோட்டை செயலாளர் வெங்கிட்டு வரவேற்றார். போட்டியை ராங்கியம் ஊராட்சி தலைவர் ராமு தொடங்கி வைத்தார். திருச்சி, புதுகை, சிவகங்கை மதுரை, தேனி, சென்னை மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர். முதல் பரிசை தேனி போலீசார் அணியும், 2ம் பரிசை திருமயம் அண்ணா வாலிபால் கிளப் அணியும், 3ம் பரிசை சென்னை பிரண்ட்ஸ் அணியும் பெற்றனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் வைரமுத்து பரிசுகளை வழங்கினார். மாவட்ட பிரதிநிதி கருப்பையா நன்றி கூறினார்.

1 comment:

  1. இந்த ப்ளாக் நல்லா இருக்கு

    ReplyDelete