* 1.மகளிர் மசோதா நிறைவேறும் டில்லி பிரதிநிதி நம்பிக்கை
ஊட்டி : "பார்லிமென்டில் மகளிர் மசோதா எளிதாக நிறைவேற்றப்படும்' என, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி கூறினார். ஊட்டியில் தி.மு.க., சார்பில் நடந்து சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது; தி.மு.க., அரசு தான் முதன்முதலில் மகளிருக்கு தனி ஒதுக்கீடு வழங்கியது. பார்லிமென்டில் மகளிர் மசோதா நிறைவேறாமல் இருந்து வந்தது. தற்போது இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. எனவே இந்த முறை, மகளிர் மசோதா மிக எளிதாக நிறைவேற்றப்படும். மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அழகிரி பார்லிமென்டில் தமிழில் பதிலளிக்க கோரியுள்ளார். தமிழில் பேசுவது என்பது நமது உரிமை. இந்த கோரிக்கை தற்போது பரிசீலனையில் இருக்கிறது. உலக தமிழ் செம்மொழி மாநாடுக்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. மலேசியாவில் நடந்த தாய்மொழி தின விழாவில் கலந்து கொண்ட போது அங்குள்ள 86 அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பட்டியலை கொடுத்துள்ளனர். உலகம் முழுக்க தமிழ் மக்களிடம் மாநாட்டில் கலந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் நிலைபாடு. வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவின் இலங்கை பயணத்தில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்படும் என தெரிகிறது. இவ்வாறு, செல்வேந்திரன் கூறினார்.
Top
* 2.நாங்க தா காரணம்... இல்லவே இல்ல... எங்களுக்கு தா சேரணும்...! அரசியல் களத்தில் வரிந்து கட்டும் தி.மு.க., - அ.தி.மு.க.,
குன்னூர் : வெலிங்டன் கன்டோன்மென்ட் மக்களுக்கு, அடுத்தடுத்து கிடைத்து வரும் அரசு சலுகைகள், அரசியல் களத்தில், பட்டிமன்ற விவாதமாய் உருவெடுத்துள்ளது.
ராணுவ அதிகாரிகள், சிவில் மக்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொண்ட வெலிங்டன் கன்டோன்மென்ட், ஏழு வார்டுகளை உள்ளடக்கி, மத்திய பாதுகாப்பு துறை கட்டுபாட்டில், பிரத்யேக சட்ட, திட்டங்களுடன் தனி வாரியமாக செயல்படுகிறது.
நிறைவு தராத நிதி ஒதுக்கீடு: கன்டோன்மென்ட் மக்கள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர்; தவிர, கன்டோன்மென்ட்டில் உள்ள ஏழு வார்டுகளுக்கும் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஜனநாயக உரிமையை பெற்றிருந்தாலும், அரசின் கடைக்கண் பார்வை கன்டோன்மென்ட் பக்கம் திரும்புவதில்லை என்பது தான் மக்களின் நீண்டகால குற்றச்சாட்டு. கன்டோன்மென்ட் மக்கள் செலுத்தும் வரி, 100க்கும் குறைவாக உள்ள கடைகள் மூலம் கிடைக்கும் வாடகை, மத்திய அரசின் சொற்ப அளவு நிதி என நிறைவான நிதி ஒதுக்கீடு இல்லாமல் செயல்பட்டு வருகிறது வாரியம்.
ஓட்டு வங்கிகளாக மக்கள்: அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள், இப்பகுதி மக்களின் ஓட்டுகளை குறி வைத்து மட்டுமே கூறப்பட்டு வந்தன. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், கன்டோன்மென்ட் சட்ட திட்டங்களால் நிதி ஒதுக்குவதில் சிக்கல் என கை விரிப்பது, மக்கள் பிரதிநிதிகளின் வழக்கம். இம்முறை ஆட்சிக்கு வந்த தி.மு.க., இலவச கலர் "டிவி', சமையல் காஸ், வீட்டு மனைப்பட்டா, கலைஞர் காப்பீடு திட்டம் என ஏராளமான திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் கன்டோன்மென்ட் மக்களுக்கு கானல் நீராகவே இருந்து வந்தன. கடந்தாண்டு நவம்பரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சேதம் அதிகமாக இருந்தும், மாவட்ட நிர்வாகம், அமைச்சர்களின் கவனம் கன்டோன்மென்ட் பக்கம் அவ்வளவாக திரும்பவில்லை என்பதை மறுக்க முடியாது.
திடீர் சலுகையால் வியப்பு: மாநில அரசின் கலைஞர் காப்பீடு திட்டத்தின் கீழ், கன்டோன்மென்ட் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்; ஓராண்டு இழுபறிக்கு பின், இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டது; வளர்ச்சிப் பணிக்கு, குன்னூர் எம்.எல்.ஏ., 20 லட்சம் ஒதுக்கினார்; உள்ளூர் அமைச்சர் ராமசந்திரன், 50 லட்சம் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்; முதியோர் பென்ஷன் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. கன்டோன்மென்ட் மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த மாநில அரசு சலுகை, நிதிகள் அடுத்தடுத்து கிடைக்கத் துவங்கியதால், மக்கள் குஷியடைந்தனர். மாநில அரசின் இந்த திடீர் கரிசனத்துக்கு காரணம் என்ன? என்பது தான் அரசியல் களத்தில் அனல் பறக்கும் பட்டிமன்ற விவாதமாய் உருமாறியுள்ளது.
அ.தி.மு.க.,வின் அதிரடி காரணம்?: கடந்த 2008ல் நடத்தப்பட்ட கன்டோன்மென்ட் தேர்தலில், அ.தி.மு.க., காட்டிய அதிரடியால் அரசியல் வாடை அதிகமாக வீசியது. இத்தனை ஆண்டுகள் போட்டியிட்ட, வென்றவர்கள் அரசியல் முத்திரையுடன் களம் இறங்கியதில்லை; கன்டோன்மென்ட்டில் அரசியல் இருந்தாலும், தேர்தலில் அதன் எதிரொலிப்பு தென்படாது. கடந்த முறை நடத்தப்பட்ட தேர்தலில், ஏழு வார்டுகளிலும் உறுப்பினர்களை களம் இறக்கிய அ.தி.மு.க., "மாஜி' அமைச்சர்கள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்களை வரவழைத்து, தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு அரசியல் வேகம் காட்டியது.
ஏழு வார்டுகளில் மூன்று வார்டுகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தி.மு.க., இரு சுயேட்சை உறுப்பினர்களை வளைத்து, உறுப்பினர் பலத்தை ஆறாக அதிகரித்துக் கொண்டது; இதற்கெல்லாம் காரணமாக இருந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் பாரதியார், துணைத் தலைவர் பதவியை தக்க வைத்து, கன்டோன்மென்ட்டில் அ.தி.மு.க., கொடியை உயரப்பறக்க செய்தார்.
போர்டில் அங்கம் வகித்த ஏழு உறுப்பினர்களும் ஒரு சேர செயல்பட்டனர்; கடந்தாண்டு நவம்பர் புயலில் பாதிக்கப்பட்ட கன்டோன்மென்ட் மக்களை, அரசும், அமைச்சர்களும் கண்டு கொள்ளவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து, பாய்ஸ்கம்பெனி பகுதியில் தொடர் உண்ணாவிரதம் அமர்ந்து, அரசியல் களத்தை சூடேற்றினர். உண்ணாவிரதத்துக்கு பின், அ.தி.மு.க.,வில் இருந்த மூன்று உறுப்பினர்கள் தி.மு.க.,வில் தஞ்சம் புகுந்தனர்.
பின், கன்டோன்மென்ட் மக்களுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டது; எம்.எல்.ஏ., நிதியின் கீழ் வளர்ச்சிப் பணிகள் துவங்கின; அமைச்சரும், எம்.எல்.ஏ.,வும் மாறி, மாறி மக்களை சந்தித்து வருகின்றனர். "அ.தி.மு.க., நடத்திய உண்ணாவிரதம், செயல்பாடால், மக்களின் ஓட்டு வங்கி பறிபோய் விடும் என்ற அச்சம் தான், மாநில அரசின் கவனம் கன்டோன்மென்ட் பக்கம் திரும்பியுள்ளது,' என்பது அ.தி.மு.க.,வின் வாதம்.
ஓட்டுக்கு கிடைத்த மரியாதை?: அ.தி.மு.க.,வின் வாதத்தை அடியோடு மறுக்கும் தி.மு.க.,வினர், "நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கன்டோன்மென்ட் மக்கள் தி.மு.க.,வுக்கு வாக்குகளை அள்ளி வீசினர். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய, உள்ளூர் அமைச்சர் ராமசந்திரனின் முயற்சியால், அரசு திட்டங்கள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன' என்கின்றனர். அரசியல் விவாதங்களுக்கு விடை கிடைக்காவிட்டாலும், எட்டாக் கனியாக இருந்த அரசு திட்டங்கள், கைகூடி வருவது வரவேற்புக்குரியது.
Top
* 3.கொள்ளை போகுது... கவலைப்படல... காப்பாத்துங்க...! கல்லூரி இலக்கிய வார விழாவில் ஆதங்கம்
குன்னூர் : "அரசுப் பணம் கொள்ளை போகிறது' என்ற ஆதங்கம் மோலோங்க, "எதைப் பற்றியும் கவலைப்படாத மக்கள்' என்ற ஆவேசம் பொங்கியெழ, "தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்துங்க' என்ற அறிவுரையுடன், குன்னூர் மகளிர் கல்லுரியில் இலக்கிய வார விழா உணர்வுபூர்வமாக நடந்து முடிந்தது. குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி முத்தமிழ்ப் பேரவை இலக்கிய வார விழாவில், சுற்றுச்சூழல் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பேராசிரியை சுஜாதா வரவேற்றார்.
குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் நசீம் பேசியதாவது: மண்ணில் வாழும் பூச்சியினங்கள் அழிந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூச்சியினங்கள் அழிந்தால் இன்னும் 50 ஆண்டுகளில் பூமியில் மனிதன் வாழ முடியாத நிலை ஏற்படும். எனவே, இயற்கையை பாதுகாக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 510 கிராம் உணவு தேவை; தற்போது 443 கிராம் மட்டுமே கிடைக்கிறது. 33 சதவீத காடுகள் இருக்க வேண்டிய இடத்தில் 20 சதவீத காடுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், உண்மையில் 11 சதவீத காடுகளே உள்ளன.
இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு வழங்கும் பணத்தை சிலர் கொள்ளையடிக்கின்றனர்; இது மனிதாபிமானமற்ற செயல். புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மக்கள் பெற்று, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தேசப் பற்று, சமுதாய உணர்வு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளவர்களாக மக்களை மாற்ற, கல்வி முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இவ்வாறு, நசீம் பேசினார்.
தமிழக பசுமை இயக்கத்தை சேர்ந்த டாக்டர் ஜீவானந்தம் பேசுகையில், ""சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மக்களிடம் குறைந்து வருகிறது. எதைப் பற்றியும் கவலைப்படாத, சுயநலமிக்கவர்களாக மக்கள் மாறி வருகின்றனர். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை இளம் வயதிலேயே பெற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மரக்கன்றுகளை நட்டு வைத்தால் மட்டும் போதாது; முறையாக பராமரிக்க வேண்டும். இயற்கையை ரசித்து, நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.
கல்லூரி முதல்வர் மரியகொரட்டி மார்ட்டிஸ் தலைமை வகித்தார். நிறைவு நாளில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அகில இந்திய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சம்மேளனம் சார்பில் இசைத் தமிழ் அரங்கம் நடத்தப்பட்டன. அனைத்துலக சுழற்சங்க அமைப்புக் குழு உறுப்பினர் சாந்திலால் தலைமை வகித்தார். அகில இந்திய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சம்மேளன நீலகிரி மாவட்ட செயலர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கரிசல் கலைஞர் நெல்லை திருவுடையான் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழ் கலாச்சாரம், விவசாயிகளின் தற்போதைய நிலை குறித்து பாடல் மூலம் விளக்கிய திருவுடையான், பழைய சினிமாவில் இடம் பெற்ற காதல் பாடல்களையும் பாடி பார்வையாளர்களின் கரகோஷத்தை பெற்றார்.
அவர் கூறுகையில், ""மேலை நாட்டு மோகத்தால் தமிழ் கலாச்சாரம் மறைந்து, மொழிப்பற்று குறைந்து வருகிறது. திரைப்படங்களில் மொழிப்பற்று தென்படுவதில்லை; தமிழனுக்கு தமிழ் உணர்வு மங்கி வருகிறது,'' என்றார். தபேலா வாசித்தப்படி இவர் பாடிய பாடலுக்கு மெரூகூட்ட அர்ஜுனன் ஆர்கன் இசைத்தார்; திருமுருகன் மோர்சிங் வாசித்தார்; தண்டபாணி இணைந்து பாடினார். ஜேசிஐ., குன்னூர் கிங்ஸ் அமைப்பின் தலைவி ஜெயஸ்ரீ, கலைஞர் திருவுடையானுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். குன்னூர் நகராட்சி கவுன்சிலர் சேகர், இன்டேன் காஸ் வினியோகஸ்தர் சீதாராம், தொழிலதிபர்கள் குப்புராஜ், தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர் இளம் பரிதி நன்றி கூறினார்.
Top
பொது
* 1.கல்லூரியில் விளையாட்டு விழா
ஊட்டி : ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வநாயகி வரவேற்றார். கல்லூரி செயலர் மோதிலால் கட்டாரியா ஒலிம்பிக் பந்தத்தை ஏற்றினார். தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் ஆல்துரை தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். மூன்றாம் ஆண்டு மாணவிகளின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மூன்றாம் ஆண்டு கணிதவியல் மாணவி நித்ய கல்யாணி சாம்பியன் பட்டம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவசங்கரன் பரிசு வழங்கினார். உடற்பயிற்சி இயக்குநர் கிரேஸ்மேரி ஆண்டறிக்கையை வாசித்தார். மாணவியர் தலைவி ஷினி நன்றி கூறினார்.
Top
* 2.எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்வை
பாலக்காடு : பாலக்காடு ரயில்வே சந்திப்பில், எய்ட்ஸ் விழிப்புணர்வு எக்ஸ்பிரஸ் ரயிலை, பொதுமக்கள், மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.
பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து தலைவி சுபைதா இசாக் திறந்து வைத்தார். நகராட்சி தலைவி தேவயானி தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் மோகன்குமார், டாக்டர்கள் குட்டமணி, கருணாகரன், ரோஸ் தாமஸ், ரயில்வே மண்டல மேலாளர் ரெய்னா பங்கேற்றனர். எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களிடம் எவ்வாறு பழக வேண்டும்; எய்ட்சால் பாதிக்கப்பட்டு இறந்த லாரி ஓட்டுனர் சந்திரனின் குடும்பக் கதை, தொடுதிரை கம்ப்யூட்டர், சிறுவர்களை விழப்படைய செய்யும் சிறப்பு கம்ப்யூட்டர் விளையாட்டு, ரயிலில் இடம் பெற்றுள்ளது. பொதுமக்கள், மாணவ, மாணவியர் பார்த்து பயன் பெற்றனர்.
Top
* 3.ஆருவ ஒசஹட்டி சாலை 'ஜோர்' வார்டு உறுப்பினருக்கு பாராட்டு
குன்னூர் : ஆருவ ஒசஹட்டி - கோத்தகிரி செல்லும் சாலை பல ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்டது; முயற்சி எடுத்த வார்டு உறுப்பினருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
குன்னூர் அருகேயுள்ள ஆருவ ஒசஹட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன; மக்கள், தங்களின் அன்றாட அலுவல், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல குன்னூர், கோத்தகிரி செல்கின்றனர். ஆருவ ஒசஹட்டியில் இருந்து செல்லும் நடைபாதை பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. மக்களை திண்டாட வைத்த இப்பாதை, வார்டு உறுப்பினரும், ஜெகதளா பேரூராட்சி துணைத் தலைவருமான ராமன் முயற்சியால், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதி 6.34 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.
ஊர் பொதுமக்கள் சார்பில், கவுன்சிலர் ராமனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. சாலை சீரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கிய மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் பாரதி, கதர்வாரியத் துறை அமைச்சர் ராமசந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ., சவுந்தரபாண்டியன், பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மோசமாக உள்ள கட்டபெட்டு - ஆருவ ஒசஹட்டி சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என ஊர் மக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
Top
* 4.முக்கூர்த்தி தேசிய பூங்காவில் துவங்கியது முகாம் : கலைக் கல்லூரி மாணவர்கள் ஈடுபாடு
ஊட்டி : ஊட்டி அரசு கலைக் கல்லூரியின் என்.எஸ்.எஸ்., சிறப்பு முகாம், முக்கூர்த்தி தேசிய பூங்காவில் துவங்கியது.
ஊட்டி அரசு கலைக் கல்லூரி சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம், நடப்பாண்டு "வளமிகு இந்தியாவுக்கு நலமிகு இளைஞர்கள்' என்ற தலைப்பில் முக்கூர்த்தி தேசிய பூங்காவுக்கு உட்பட்ட வன விலங்குகள் சரணாலயத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 8.30க்கு, நீராதாரம் மிக்க புல்வெளிகளில் உள்ள முட்புதர் அகற்றப்பட்டன. மேல்பவானி வன விலங்குகள் விருந்தினர் மாளிகையில், மாலை 4.00 மணிக்கு நடத்தப்படும் வனவள விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது.
இன்று காலை 8.00 மணிக்கு, சோலைக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் புல்வெளி பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மாலை 4.00 மணிக்கு நடத்தப்படும் வன விழிப்புணர்வு முகாமில், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயலர் ஜெயசந்திரன் பேசுகிறார். நாளை காலை 8.00 மணி முதல் முட்புதர் அகற்றும் பணி நடத்தப்படுகிறது. மாலை 4.30க்கு நடத்தப்படும் நீராதார விழிப்புணர்வு முகாமில், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சங்க கமிட்டி உறுப்பினர் ரங்கசாமி பேசுகிறார்;
வனம் மற்றும் வன விலங்குகள் குறித்து குறும்படம் காண்பிக்கப்படுகிறது. 10ம் தேதி காலை 8.00 மணிக்கு, தீத்தடுப்பு கோடு அமைக்கப்படுகிறது. மாலை 4.00 மணிக்கு நடத்தப்படும் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில், கானுயிர் சங்க துணைத் தலைவர் கீதா சீனிவாசன் பேசுகிறார். வரும் 11ம் தேதி காலை மலையேற்றப்பயிற்சி, மாலை 4.00 மணிக்கு நடத்தப்படும் வனத்தீ குறித்த விழிப்புணர்வு முகாமில், கூடலூர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் அசோகன் பேசுகிறார். 12ம் தேதி காலை 8.00 மணிக்கு, களப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
காலை 11.30க்கு நடத்தப்படும் நிறைவு விழாவில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அழகர் ராமானுஜம் திட்ட அறிக்கை வாசிக்கிறார். பாரதியார் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் செல்லசாமி தலைமையில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் சங்க மண்டலத் தலைவர் டாக்டர் முரளிதரன், ஆங்கில துறை தலைவர் வேணுகோபால் உட்பட பேராசிரியர்கள் பேசுகின்றனர். முகாம் ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் மாணவ, மாணவியர் மேற்கொண்டுள்ளனர்.
Top
* 5.'வாழ்க்கையில் தேவை எளிமை'
ஊட்டி : "தேவைகளை குறைந்து எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்' என, நுகர்வோர் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு கழகம் மற்றும் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி சார்பில், கல்லூரியில், நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.
நுகர்வோர் குழுவை சேர்ந்த மனோகரன் பேசுகையில், ""பொருட்களை வாங்க விளம்பரம் தூண்டுகிறது. விலையை பற்றி யோசிக்காமல், தேவைக்கும் அதிகமான பொருட்களை வாங்கி குவிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்; ஆடம்பர பொருட்களை வாங்க கடன், லஞ்சம், வரதட்சணை தலைதூக்குகிறது. பிளாஸ்டிக் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
பொருட்களை வாங்கும் போது, தரம், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பார்த்து வாங்க வேண்டும். உணவு கலாச்சாரம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. தேவைகளை குறைத்து எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்; நாம் எச்சரிக்கையாக இருந்து, மற்றவர்களையும் எச்சரிக்கையாக இருக்க தூண்ட வேண்டும்,'' என்றார்.
Top
* 6.கார்டைட் தொழிற்சாலையில் அம்பேத்கர் ஜெயந்தி விழா
குன்னூர் : அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் அம்பேத்கர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் துவங்கியது.
அருவங்காடு கார்டைட் தொழிற்சாலையில் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கமிட்டி சார்பில், அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டின் நிகழ்ச்சிகள், கடந்த 28ம் தேதி துவங்கியது. தொழிற்சாலையில் செயல்படும் பல பிரிவுகளுக்கு இடையே, 14, 16, 21, 28 தேதிகளிலும், ஏப்., 2, 4, 11ம் தேதிகளிலும், அருவங்காடு சஹானி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
இன்றும், 10 தேதியும், அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது. 11ம் தேதி மாலை 5.00 மணிக்கு தொழிற்சாலை மனமகிழ் மன்றத்தில், இலவச சட்ட உதவி முகாம், 11 - 15ம் தேதிகளில் கால்பந்து, 17 - 20ம் தேதிகளில் ஹாக்கி, 17 - 20ம் தேதிகளில் இறகுபந்து, 22 - 24ம் தேதிகளில் ஜிம்னாசியம், 25- 27ம் தேதிகளில் கேரம், டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அனைத்துப் போட்டிகளும் மாலை 5.00 மணிக்கு துவங்கும்.
வரும் 26ம் தேதி தொழிற்சாலை மனமகிழ் மன்றத்தில் காலை 10.00 மணி முதல் இலவச கண் சிகிச்சை முகாம், ஏப்ரல் முதல் வாரத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகின்றன.
ஏப்., 12ம் தேதி மாலை 5.00 மணிக்கு, தொழிற்சாலை கலையரங்கில் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கமிட்டி தலைவர் கோபால், துணைத் தலைவர் சின்னதம்பி, அமைப்பு செயலர் செந்தில் குமார், இணை செயலர்கள் இளங்கோவன், சார்லஸ், சந்திரசேகர், பொருளாளர் கண்ணன், இணை பொருளாளர் சிவகுமார், தணிக்கையாளர்கள் வேல்முருகன், பிரசன்னா, ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் ராஜேந்திரன், லூயிஸ் காகா மற்றும் பலர் மேற்கொண்டுள்ளனர்.
Top
* 7.கருத்தரங்கம்
ஊட்டி : துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஊட்டி நகர தி.மு.க., சார்பில் ஊட்டி அண்ணா கலையரங்கில், நேற்று சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
ஊட்டி நகர செயலர் ரவிகுமார் வரவேற்றார். தேர்தல் பணிக்குழு செயலர் முபாரக் தலைமை வகித்தார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், வக்கீல் இந்திரஜித் சிறப்பு அழைப்பாளர்களாக, "தியாகப் பயணமும் தளபதியும்', "கலைஞர் வழிகாட்டுதலும் தளபதியும்', "இளைஞரணியும் தளபதியும்' என்ற தலைப்பில் பேசினர். ராஜா நன்றி கூறினார்.
Top
* 8.சிறியூர் மாரியம்மன் கோவிலில் நாளை பூ குண்டம் திருவிழா
கோத்தகிரி : ஸ்ரீ சிறியூர் மாரியம்மன் கோவில் பூ குண்டம் திருவிழா, நாளை நடத்தப்படுகிறது; போக்குவரத்து கழ கம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மசினகுடி அருகேயுள்ள சிரியூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, மார்ச் 1ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. 2ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, சிறப்பு பூஜை, நேற்று அம்மன் அழைப்பு நடத்தப்பட்டன. இன்று காலை பூ குண்டத்துக்கு மரம் கொண்டு வருதல், அரக்கோல் சுற்று விளையாட்டு, இரவு 8.00 மணிக்கு, கூக்கல்தொரை ஸ்ரீ சிறியூர் அம்மன் கலா மன்றத்தாரின் "பல ஹெண்ணுன கண்ணநீரு' என்ற படுக சீர்திருத்த நாடகம், நள்ளிரவு ஜாகரை நவதானிய பூஜை நடத்தப்படுகின்றன.
நாளை காலை பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. வனத்தில் கோவில் உள்ளதால், தீ ஏற்படாமல் தடுக்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என விழாக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விழா நாட்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க, மது அருந்தவோ, விற்கவோ கூடாது என எட்டட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் காவல் துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் கூக்கல் எட்டூர் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர்.
Top
* 9.முத்தப்பன் திருவப்பனை ஊட்டியில் உற்சாகம்
ஊட்டி : ஊட்டியில் ஸ்ரீ முத்தப்பன் திருவப்பனையும், வெள்ளாட்டமும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
திருவப்பனையும், வெள்ளாட்டமும் நிகழ்ச்சியை, கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த 16 கலைஞர்கள் நிகழ்த்தி வருகின்றனர். ஊட்டியில் ஸ்ரீ முத்தப்பன் பக்த ஜன கமிட்டியினர் சார்பில், 3வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் சிவன் தெய்வ வடிவில் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் 12.00 மணிக்கு முத்தப்பன் மலையிறக்கம், 2.00 மணிக்கு முத்தப்பன் வெள்ளாட்டம், பிற்பகல் 3.00 மணிக்கு களிக்கப்பாட்டு, இரவு 7.00 மணிக்கு கலசம் ஏந்தி வருதல் நடத்தப்பட்டது; பின், பிரசாதம் வழங்கப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று, சிவன் மற்றும் விஷ்ணு சேர்ந்து தெய்வ வடிவில் காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காலை 7.00 மணிக்கு "திருப்பனையும், வெள்ளாட்டமும்', காலை 10.00 மணிக்கு பள்ளி வேட்டை, பக்த ஜனங்களுக்காக முத்தப்பன் வழிபாடு நடத்தப்பட்டன. இரு நாட்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் குடும்ப த்துடன் பங்கேற்று ஆசி பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை, முத்தப்பன் பக்த ஜன கமிட்டியினர் மேற் கொண்டனர்.
Top
* 10.ஊராட்சியில் சிறப்பு முகாம்
குன்னூர் : குன்னூர் அருகேயுள்ள பேரட்டி ஊராட்சி அலுவலகத்தில், ஸ்நேகா பழங்குடி மற்றும் கிராமிய அபிவிருத்தி மையம் சார்பில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
பேரட்டி ஊராட்சி தலைவி ராஜேஸ்வரி தேவதாஸ் தலைமை வகித்தார். கண்ணொளி திட்டம், பார்வை குறைவுள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதம் குறித்தும், மறுவாழ்வு திட்ட ஓருங்கிணைப்பாளர் மனோஜ் பயிற்சியளித்தார். பேரட்டி ஊராட்சியில் ஸ்நேகா கண்ணொளி திட்டம் துவக்க முடிவெடுக்கப்பட்டது. பேரட்டி ஊராட்சி உறுப்பினர்கள் சுந்தரம், சுப்புலட்சுமி, நாகராஜ், கம்பிச்சோலை பகுதியை சேர்ந்த கஸ்தூரி, அருள்நகர் பகுதியை சேர்ந்த குமாரி, மக்கள் நலப் பணியாளர் சிவராஜ் உட் பட பலர் பங்கேற்றனர்.
Top
* 11.சோலூர்மட்ட மகளிர் தினம் திரளாக பங்கேற்க அழைப்பு
கோத்தகிரி : கீழ்கோத்தகிரி பொம்மன் நேரு யுவமண்டல் மற்றும் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பில், சோலூர்மட்டத்தில் இன்று உலக மகளிர் தினவிழா நடத்தப்படுகிறது.
யுவமண்டல் தலைவர் பால்முருகன் வரவேற்கிறார். தேனாடு ஊராட்சி தலைவர் தமிழரசன் தலைமை வகிக்கிறார். துணைத் தலைவர் பரமேஸ்வரி நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். கோத்தகிரி நீதிபதி கீதாராணி, டி.எஸ்.பி., தர்மராஜ், சோலூர்மட்டம் எஸ்.ஐ., வேணுகோபால், ஓய்வுபெற்ற ஆசிரியர் பசுவராஜ், பொம்மன் யுவமண்டல் செயலர் தர்மராஜ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, பெண்கள் சமு தாயத்தில் சாதிக்க வேண் டியது குறித்து பேச உள்ளனர்.
பெண்களுக்கு நேரும் கொடுமை மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து விளக்கப்பட உள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார பெண்கள் திரளாக பங்கே ற்க வேண்டும் என அழை ப்பு விடப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பொம்மன் நேரு யுவமண்டல் அங்கத்தினர்கள் மேற்கொண்டுள்ளனர்.
Top
* 12.அங்கத்தினர்களிடம் நிலுவை தொழிற்சாலை நிர்வாகம் முடிவு
மஞ்சூர் : பசுந்தேயிலைக்கு முன்பணம் பெற்று, நீண்ட காலம் நிலுவை வைத்துள்ள அங்கத்தினர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தொழிற்சாலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மஞ்சூர் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையில் 2,000த்துக்கும் மேற்பட்டோர் அங்கத்தினர்களாக உள்ளனர். தங்களது தோட்டத்தில் பறிக்கும் பசுந்தேயிலையை தொழிற்சாலைக்கு வினியோகிக்கின்றனர். தொழிற்சாலையின் ஆண்டு பேரவை கூட்டம் வரும் 15ம் தேதி காலை 10.30க்கு, தனி அலுவலர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடத்தப்படுகிறது. அங்கத்தினர்கள் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விஷயங்கள் குறித்து அங்கத்தினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக அறிக்கை வாசித்து பதிவு செய்தல்; 2006-"09ம் ஆண்டு வரை தணிக்கை அறிக்கை வாசித்து பதிவு செய்தல்; உத்தேச வரவு செலவு திட்டம் குறித்து விவாதித்து அங்கீகரித்தல்; பசுந்தேயிலைக்கு சிறப்பு முன்பணம் பெற்று நீண்ட காலம் நிலுவை வைத்துள்ள உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது; உறுப்பினர்களின் இறப்பு நிதியுதவி பெற தற்போதுள்ள தகுதியை ஆலோசித்து மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என, மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Top
* 13.குட்டீஸ்களுக்கு பட்டம் வழங்கல்
கூடலூர் : கூடலூர் புனித தாமஸ் ஐ.சி.எஸ்.ஈ., உயர்நிலைப் பள்ளியில், யூ.கே.ஜி., முடித்து முதல் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
பாண்ட் வாத்தியம் முழங்க, பட்டம் பெறும் உடையுடன் அணிவகுத்து, குட்டீஸ்கள் மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். ஓய்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியை ரத்தினாவதி, பட்டம் வழங்கினார். ""கல்வியில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் விழா நடத்தப்படுகிறது,'' என, பள்ளியின் தலைமை ஆசிரியை ரெஜி மேத்யூ கூறினார். பட்டமளிப்பு விழா, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. எல்.கே.ஜி., யூ.கே.ஜி., மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கோட்ட மேலாளர் ஜான் தாமஸ் பரிசு வழங்கினார்.
Top
* 14.மகளிர் தின பேரணி
கூடலூர் : கூடலூரில் இன்று, மகளிர் தின அணிவகுப்பு, கலாச்சார பொதுக் கூட்டம் நடத்தப்படுகின்றன.
"ஸ்ரேயஸ்' நீலகிரி சமூக சேவை சங்கத்தின் கூடலூர், பந்தலூர் வட்டார இயக்குனர் வர்கீஸ், கூடலூர் நிருபர்களிடம் கூறியதாவது:
"ஸ்ரேயஸ்' சமூக சேவை சங்கம் மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன; குழுக்கள் சார்பாக, 8ம் தேதி கூடலூரில், உலக மகளிர் தின பேரணி மற்றும் கலாச்சார பொதுக் கூட்டம் நடத்தப்படுகின்றன. காலை 10.00 மணிக்கு, புத்தூர்வயல் கலையரங்கத்தில், "இயற்கை விவசாயம் மற்றும் உணவு தன்மை' குறித்தும், மகளிர் பாதுகாப்பு சட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. பிற்பகல் 2.00 மணிக்கு, மார்தோமா நகரிலிருந்து மகளிர் தின பேரணி, கூடலூரில் கலாச்சார பொதுக் கூட்டம் நடத்தப்படுகின்றன. சுல்தான் பத்தேரி மறைமாவட்ட ஆயர் கீவர்கீஸ் மார்தி வன்னாசியோஸ் தலைமை வகிக்கிறார். இவ்வாறு, வர்கீஸ் கூறினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் குரியாகோஸ், ஷினோ ஜோசப் உடனிருந்தனர்.
Top
* 15.மன்றத்துக்கு பயிற்சி
குன்னூர் : கேத்தி சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றத்துக்கு, கல்லூரி வளாகத்தில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தங்கவேலு துவக்கி வைத்தார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர் சபாபதி, நுகர்வோரின் உரிமை குறித்து விளக்கினார். நுகர்வோர் இயக்க வரலாறு குறித்து, சங்க துணைத் தலைவர் ரமணி பேசினார். மாணவ, மாணவியரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நுகர்வோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டன.
Top
பிரச்னைகள்
* 1.காப்பீடு சரண்டர் தொகை பெற நான்கு மாதங்களாக மனுப்போர்
குன்னூர் : குன்னூரை சேர்ந்த ஒருவர், தபால் துறை மூலம் பெற்ற ஆயுள் காப்பீடு சரண்டர் தொகையை பெற நான்கு மாதங்களாக மனுப்போர் நடத்தி வருகிறார்.
குன்னூர் ஸ்பிரிங் பீல்டு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு; தபால் துறை மூலம் ஆயுள் காப்பீடு பாலிசி செலுத்தியிருந்த இவர், விபத்தில் சிக்கியால், பாலிசியை சரண்டர் செய்து தொகையை திரும்ப பெற விண்ணப்பித்தார். விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகியும், சரண்டர் தொகை கிடைக்காததால் விரக்தியில் உள்ளார்.
திருநாவுக்கரசு, தபால் துறை அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனு: எனது பாலிசித் தொகையை சரண்டர் செய்து, தொகையை வழங்குமாறு கடந்தாண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தேன். கடிதத்தை பரிசீலித்த தபால் துறை அதிகாரிகள், "தாங்கள் செலுத்திய பிரிமியத் தொகையும், இதுநாள் வரையிலான போனசும் சேர்த்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பீர்கள்; உண்மையில் நீங்கள் எதிர்பார்க்கும் தொகை கிடைக்காது. இதுநாள் வரை தங்களது ஆயுள் காப்பீட்டுக்கு உத்தரவாதம் கொடுத்ததால், சரண்டர் தொகை குறைவாகவே இருக்கும். தங்கள் குடும்ப நலன் கருதி பாலிசியை தொடர வேண்டும்' என கூறியிருந்தார்கள்.
எனது பாலிசியை சரண்டர் செய்யும் முடிவில் உறுதியாக இருப்பதால், சரண்டர் தொகையை திருப்பி செலுத்துமாறு, கடந்த ஜனவரி மாதம் கடிதம் அனுப்பியிருந்தேன். இதுவரை தொகை வந்து சேரவில்லை. எனது மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதால், உடனடியாக சரண்டர் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு, திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
Top
சம்பவம்
* 1.கூடலூரில் 'ஆண்' ஊட்டியில் 'பெண்'
கூடலூர் : கூடலூர் மற்றும் ஊட்டியில், பிரசவத்துக்காக "108' ஆம்புலன்சில் அழைத்து சென்ற பெண்களுக்கு குழந்தை பிறந்தது.
கூடலூர் பாடந்துறை மூச்சிகண்டி பகுதியை சேர்ந்தவர் வசந்தி (21); கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. "108' ஆம்புலன்சில் கூடலூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பிரசவ வலி ஏற்பட்டது. அவசர சிகிச்சை நிபுணர் ஞானகுரு, செவிலியர் சந்திரா பிரசவம் பார்த்தனர்; ஆண் குழந்தை பிறந்தது. ஊட்டி ரோஸ்மவுண்ட் அருகேயுள்ள காடிமந்து பகுதியை சேர்ந்தவர் நிர்மலா (27); கர்ப்பிணியான இவரை, நேற்று அதிகாலை "108' ஆம்புலன்சில், தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், பிரசவ வலி ஏற்பட்டது. அவசர சிகிச்சை நிபுணர் வினோத் கண்ணன், ஓட்டுனர் பாலகுமார் மற்றும் நிர்மலாவின் உறவினர்களுடன் பிரசவம் பார்த்தார்; பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Top
* 2.காட்டாடுக்கு சிகிச்சை
கூடலூர் : கூடலூர் வேடன்வயல் பகுதியில் காயமடைந்த காட்டாடை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர்.
கூடலூர் வேடன்வயல் அருகேயுள்ள வயலில், காட்டாடு காயமடைந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் வனவர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று, காட்டாடை மீட்டு, கூடலூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடை டாக்டர் சந்திரசேகர், சிகிச்சை அளித்தார்.
வனவர் செல்வராஜ் கூறுகையில், ""12 வயதுடைய ஆண் காட்டாடுக்கு, நரம்பு தளர்ச்சி மற்றும் பின்காலில் வாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல் தவித்துள்ளது; தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை அளித்தால், முழுமையாக குணமாகும்; முதுமலை புலிகள் காப்பகம் எடுத்து சென்று கால்நடை மருத்துவமனையில் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.
Top
* 3.கண்டன ஆர்ப்பாட்டம்
பந்தலூர் : ஓட்டல் மற்றும் பேக்கரிகளில், திண்பண்டங்களின் விலையேற்றத்தை கண்டித்து, பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
எருமாடு பகுதி பொதுமக்கள் சார்பில் எருமாடு பஜாரில் துவங்கிய கண்டனப் பேரணி, முக்கிய வீதிகளில் வழியாக பஸ் நிறுத்தம் அடைந்தது; அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சந்திரபோஸ் தலைமை வகித்தார். எருமாடு பகுதியில் உள்ள பல ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் திண்பண்டங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படவில்லை; விலையேற்றத்தை ரத்து செய்ய வேண்டும்; தீர்வு காணாவிட்டால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. கனநாதன், நவுபல், குட்டிகிருஷ்ணன், காதர், ரபீக் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
ஊட்டி : "நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் அமைப்புகளின் பெயரை கூறி "வசூல்' வேட்டை நடத்தி வருபவர்கள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்புகள் தன்னார்வத்துடன் செயல்பட்டு, பல பணிகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், இவற்றின் பெயரை கூறிக் கொண்டு தவறான வழியில் பணம் சம்பாதித்து கொண்டிருக்கின்றன.மாவட்டத்தின் பல பகுதிகளில் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதி என கூறி ரேஷன் கடையில் வசூல் செய்வதாகவும், குந்தா, ஊட்டி, குன்னூர் தாலுகாக்களில் அதிகபட்சமாக இது நடைபெறுவதாகவும், சிலர் மினி பஸ்களில் இலவச பயண அனுமதி சீட்டு பெற்று செல்வதாகவும், மரக்கடைகள், பிற வணிக நிறுவனங்களிலும் பல காரணங்களை கூறி வசூலில் ஈடுபடுவதாகவும் மையத்திற்கு புகார்கள் வருகின்றன.தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் நல்ல நோக்கத்துடன் செயல்படுவதை களங்கப்படுத்துவதை தொடர்ந்து அனுமதிக்க இயலாது. தொடர்ந்து இதுபோன்று நுகர்வோர் அமைப்புகள் பெயரினை பயன்படுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடும் போலி நபர்கள் வரும் பட்சத்தில் அவர்கள் குறித்து காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலோ புகார் தெரிவிக்கலாம்.நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் எங்களது அமைப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்று நடப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாநில நுகர்வோர் ஆலோசனை மையத்தில் 044-28592828 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
ReplyDelete