* 1.குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தில் வசூல்? : பயனாளிகள் மிரட்டப்படுவதாக புகார்
சிவகாசி : குடிசை பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், இலவச குடிநீர் இணைப்புக்கு பயனாளிகளிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும், தொடர்ந்த விபரம் கேட்கும் பயனாளிகள் மிரட்டப்படுவதாக கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
சிவகாசி நகராட்சியில் ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் குடிசை வீடுகளில் குடியிருந்து வருவோருக்கு மத்திய, மாநில அரசின் 80 சதவீத மானியத்துடன் வீடு கட்டுவதற்கு நிதி வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் வீடுகட்டுவோருக்கு இலவச குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்படும். சிவகாசி நகராட்சியில் இத் திட்டத்தில் 659 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கான்கிரீட் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.
இத்திட்ட பயனாளிகளுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு 16.47 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. குடிநீர் இணைப்பு வழங்க ஒவ்வொரு வீட்டிற்கும் 1500 ரூபாய் வீதம் பயனாளிகளிடம் மிரட்டி வசூலிக்கின்றனர். இத் தொகை பற்றி விபரம் கேட்டால் எஸ்டிமேட் கட்டணம், குழிதோண்ட என ஏதாவது காரணம் கூறுகின்றனர்.
இப்படி வசூலிக்கும் தொகைக்கு ரசீது எதுவும் வழங்குவதில்லை. பயனாளிகளுக்கு சரியான விளக்கமும் அளிப்பது இல்லை. தொடர்ந்து வசூல் குறித்து தகவல் கேட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மிரட்டப்படுகின்றனர். சிலரிடம் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. குடிநீர் இணைப் பிற்கு அரசு இலவசமாக வழங்கும் பொருட்கள் பற்றிய விபரங்களும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டாலும் விபரம் கூறுவதில்லை என பா.ம.க., நகர செயலாளர் கோபி கலெக்டருக்கு புகார் அனுப்பி உள்ளார்.
இப்புகார் குறித்து நகராட்சி கமிஷனர் விஜயராகவன் கூறியதாவது: குடிநீர் இணைப்பு இலவசமாகத்தான் வழங்கப்படுகிறது. யாருக்கும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை. நான்கு மீட்டர் தூரம் வரை குழாய் இணைப்பு வழங்குவதற்கான தொகையை அரசு வழங்கி விடுகிறது. கூடுதலாக பைப்லைன் கொண்டு செல்ல வேண்டியிருந்தால், அதற் கான எர்த் ஒர்க், பொருட்களுக்கான கட்டணம் பெற்றுக்கொண்டு இணைப்பு வழங்கப்படுகிறது, என்றார்.
Top
* 2.தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தில் காரியாபட்டிக்கு கூடுதல் தண்ணீர் : அமைச்சர் தங்கம்தென்னரசு தகவல்
காரியாபட்டி : ""தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தில் காரியாபட்டிக்கு கூடுதல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார். காரியாபட்டியில் சிறப்பு மனு நீதி நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிஜிதாமஸ் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். மக்களிடமிருந்து 1,031 மனுக்கள் பெறப்பட்டன.
தலைமை வகித்து தங்கம்தென்னரசு பேசியதாவது: கிராமப்புறங்களுக்கு நேரிடையாக சென்று அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தகுந்த நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு பெறப்பட்டுள்ள மனுக்கள் மீதான குறைகள், தகுதி அடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் தீர்த்து வைக்கப்படும். காரியாபட்டி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கூடுதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை துணை முதல்வர் ஸ்டாலின் விரைவில் துவக்கி வைக்க இருக்கிறார். அத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதால் காரியாபட்டிக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும், என்றார்.
கணேசன் டி.ஆர்.ஓ., திட்ட அலுவலர் ராமமூர்த்தி, தாசில்தார் லில்லிபாய், ஒன்றிய சேர்மன் சம்பத், துணைத் தலைவர் காளிமுத்து மூப்பனார், பி.டி.ஓ.,க்கள் லலிதா, பாலசுப்பிரமணியன், கவுன்சிலர்கள் சூரியன், மாரியப்பன், பிரவான், வேங்கைமார்பன், சாந்தா, பராசக்தி, ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Top
* 3.விசைத்தறிகளை நவீனமாக்க ரூ.20 லட்சம் கடன்: ஜவுளி ஆணைய அதிகாரி தகவல்
சத்திரப்பட்டி : விசைத்தறி கூடத்தை நவீனப்படுத்த 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என ஜவுளி தொழில் வளர்ச்சிக்கான மத்திய அரசு திட்டங்கள் குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலகம் மற்றும் ராஜபாளையம் "சிட்ரா' விசைத்தறி பணி மையம் சார்பில் ஜவுளி தொழில் வளர்ச்சிக்கான மத்திய அரசு திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம், சத்திரப்பட்டியில் நடந்தது. சிறு விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். இந்தியன் கிரே கிளாத் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம், மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். விசைத்தறி தொழிலாளர்களின் குழந்தைகள் 154 பேருக்கு, தலா 1,200 ரூபாய் வீதம் 1 லட்சத்து 84 ஆயிரத்து 800 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டன.
கோவை மண்டல ஜவுளி ஆணையர் அலுவலக தொழில்நுட்ப அதிகாரி ராஜா பேசியதாவது: மத்திய அரசு தொழில் மேம்பாடு திட்டத்தின் கீழ் விசைத்தறியில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் தரப்படுகிறது. அதில் 20 சதவீதம் மானியம், என்றார்.
மாணிக் தாகூர் எம்.பி., பேசுகையில், ""உணவுக்கு உத்தரவாதம் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. மாவட்டத்தில் 2008-2009ல் வங்கிகள் மூலம் 128 பேருக்கு மட்டுமே கல்வி கடன் வழங்கப்பட்டது. 2009-2010ல் லோன் மேளாவில் 2,288 பேருக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் இதைவிட அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ராஜபாளையத்தில் நெசவுத் தொழில் செழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்'' என்றார்.
ராஜபாளையம் "சிட்ரா' விசைத்தறி பணி மைய பொறுப்பாளர் முத்துவேலு நன்றி கூறினார்.
Top
பொது
* 1.அறுவடை பின்செய் நேர்த்தி பயிற்சி
அருப்புக்கோட்டை : கோவிலாங்குளம் மண் டல ஆராய்ச்சி நிலையத்தில், தமிழ்நாடு நீர்வள, நில வள திட்டத்தின் கீழ், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம் தெற்காறு உபவடிநில பகுதி விவசாயிகளுக்கான அறுவடை பின்செய் நேர்த்தி பயிற்சி நடந்தது.
துணை இயக்குனர் கணேசன் தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் சந்திரமோகன் வரவேற்றார். பேராசிரியர் ஜெயக்குமார், தொழில் நுட்பங் களை கடைபிடித்து விளை பொருட்களை தரம் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம், என்றார். பேராசிரியை முத்துலட்சுமி, தோட்டடக்கலை துறை பயிர்கள் சந்தைபடுத்துதல் பற்றியும், அறுவடை பின் நேர்த்தி பற்றி பேராசிரியை காயத்திரிதேவி விளக்கினர். வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அலுவலர் பாலசுப்பிரமணியன் பேசினார். உதவி வேளாண்மை அலுவலர்கள் பெரியகருப்பன், பாண்டி செல்வி, பால்துரை ஏற்பாடு செய்தனர்.
Top
* 2.அறிவியல் கண்காட்சி
விருதுநகர் : விருதுநகர் ஜேசீஸ் சார்பில் பி.எஸ். சிதம்பரநாடார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. 62 மாணவிகள், தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்தினர். உயிரியல் பேராசிரியர் இன்பமணி,வேதியியல் பேராசிரியர் கனகவேல், சிறந்த மாணவிகளைத் தேர்ந்தெடுத்தனர். முன்னாள் ஜேசீஸ் துணைவியர் அணித்தலைவி எல்லோரா, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி முதல்வர் ரஜினி வாழ்த்திப் பேசினார். தலைவர் பிரவீன்குமார்,செயலாளர் செந்தில்குமார், திட்டஇயக்குனர் வெண் ணிலா ஏற்பாடு செய்திருந்தனர்.
Top
* 3.ஆதரவற்ற விதவைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் சிஜிதாமஸ் செய்திக்குறிப்பு: ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்ட, கதர் கைவினைப்பொருட்கள் மற்றும் சிறு தொழில் ஆகியவற்றில் பல் வேறு பயிற்சிகளை அளிக்கப்பட உள்ளது.
ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க, "மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்' விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப் பட்டுள்ளது. தகுதியானவர்கள், நலஉதவி கோரி கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இதற்கான குழு பரிசீலித்து தகுதி அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி, நலத்திட்டங்களை செயல் படுத்தும். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
Top
* 4.மின் தொழிலாளர் ஊர்வலம்
விருதுநகர் : தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனத்தின் 53வது ஆண்டு துவக்க நாளில், மின்சாரத் தொழிலை தனியார் மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. மாவட்டத்தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் என்.ஏ. குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் வி. அழகர்சாமி, விருதுநகர் தாலுகா செயலர் எஸ். சீனிவாசன், சங்க மாவட்ட துணைத்தலைவர் பி. ஆதிமூலம்,மாவட்டச் செயலாளர் மாயாண்டி, பொருளாளர் கே. ரங்கசாமிஉட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
Top
* 5.வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் பயிற்சி
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சைவபானு சத்திரிய கல் லூரியில், வேலை வாய்ப்பு வழி காட்டுதல் பயிற்சி நடந்தது.
முதல்வர் முத்துசெல்வன் தலைமை வகித்தார். ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் பெரியநாயகம் வரவேற்றார். நிர்வாகக்குழு தலைவர் ஆறுமுகசாமி வாழ்த்தி பேசினார். பயிற்சி உதவி கலெக்டர் வெங்கடேஷ்குமார், மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கினார். வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.
Top
* 6.பணியாளர் சங்க மாநில கூட்டம்
சேத்தூர் : தமிழ்நாடு பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளின் துப்புரவு பணியாளர்கள் சங்க மாநில கூட்டம் சேத்தூரில் நடந்தது.
மாநில இணை செயலாளர் பச்சையாத்தான் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
மாநில தலைவர் வேலுச்சாமி பேசினார். தீர்மானங்கள்: ஞாயிறு விடுமுறை; அதிகார துஷ்பிரயோகம் செய்யும் சில பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு ஊதியப் பட்டியல் வழங்க வேண்டும் உட்பட சில தீர்மானங்களை நிறைவேற்றினர். நிர்வாகி பழனிச்சாமி, மாநில அமைப்பு செயலாளர் ராஜன், துணைத் தலைவர் ராமர் கலந்து கொண்டனர். நிர்வாகக்குழு உறுப்பினர் வைரமுத்து நன்றி கூறினார்.
Top
* 7.அ.தி.மு.க., பொதுக் கூட்டம்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை வெள்ளகோட்டையில் அ.தி.மு.க., பொதுக் கூட்டம் மற்றும் ஏழை மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட செயலர் சிவசாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் கொப் பையாராஜ் முன் னிலை வகித்தனர். ஆறுமுகம் நலத் திட்ட உதவிகள் வழங்கினார். கட்சியினர் கலந்து கொண்டனர். அருப்புக் கோட்டை சட்டசபை தொகுதி செயலாளர் சிவசங்கரன் ஏற்பாடு செய்தார்.
Top
* 8.மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதியில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், நாளை காலை 10.30 மணியளவில் பொன்னகரத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
புதிய மின் இணைப்பில் தாமதம், மின் வயர் மற்றும் மீட்டரில் ஏற்பட்டுள்ள பழுது, மின்வாரிய சேவையில் உள்ள குறைபாடுகள் குறித்து மக்கள் புகார் தரலாம். இத்தகவலை மின்வாரிய ராஜபாளையம் செயற்பொறியாளர் ரகுபதிராஜ் தெரிவித்து உள்ளார்.
Top
சம்பவம்
* 1.பட்டாசு ஆலையில் தீ விபத்து
சிவகாசி : சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு கட்டைசின்னம்பட்டியில் கேப் வெடி தொழிற்சாலை உள்ளது.
இங்கு காயவைக்கப்பட்ட கேப் வெடிகளை, நடுவப்பட்டி கிருஷ்ணன் அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது வெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிருஷ்ணனும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த வெள்ளையாபுரம் ஆவுடையம்மாளும் காயமடைந்தனர். திருத்தங்கல் போலீசில் ஆவுடையம்மாள் செய்த புகாரின்படி போலீசார், போர்மேன் சுப்புக்காளையைக் கைது செய்தனர்.
Top
* 2.லாரி டிரைவர் கைது
விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (26). இவர் மினி லாரியில் 15 பேரை ஏற்றிக்கொண்டு கலெக்டர் அலுவலகம் முன் வந்து கொண்டிருந்தார். சூலக்கரை எஸ்.ஐ. பொன்னுசாமி, வீராசாமியை கைது செய்தார்.
Top
* 3.ஆர்ப்பாட்டம்
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் வைரமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஸ்ரீசங்கர்கணேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ரகுநாதன், கணேசன், வள்ளுவன், முருகேசன், கண்ணன் பேசினர். பொருளாளர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.
Sunday, March 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment